Tuesday 2 September 2014

படித்ததில் பிடித்தது



                   சமீபத்தில் விகடன் வெளியீடான திரு.டி.கே.வி.தேசிகாச்சார் அவர்கள் எழுதிய 'உடலே உன்னை ஆராதிக்கிறேன்' புத்தகம் படித்தேன். யோகா பற்றிய இந்தப் புத்தகம் யோகா பற்றிய பல புதிய தகவல்களை எனக்குத் தந்தது. மேலும் யோகா செய்யும் முறையை மட்டும் விளக்காமல், சரியாகச் செய்யவில்லையென்றால் என்ன பிரச்சினைகள் வரும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் நான் அறிந்த சில தகவல்கள்:

        1. ஏறத்தாழ கி.மு.3000 - அதாவது சிந்து சமவெளி நகரங்களான மொகஞ்சதாரோ/ ஹரப்பாவில் வாழ்ந்த மக்களே கூட யோகா செய்திருக்கிறார்களாம். அங்கு அகழ்வாராய்ச்சியில் பல யோகா இலச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
       2.நூலாசிரியரின் தந்தை திரு.கிருஷ்ணமாச்சாரியார் யோகாவின் மூலம் இருதயத் துடிப்பை இரு நிமிடங்கள் நிறுத்தி வைக்கும் ஆற்றல் படைத்தவராம்.
       3. எந்த ஒரு ஆசனம் செய்தாலும் மாற்று ஆசனம் (பிரதி கிரியாசனம்- counter posture) ஒன்றை அடுத்து செய்ய வேண்டும். உதாரணமாக முதுகை முன் பக்கமாக வளைக்கும் ஆசனம் செய்தால் மாற்றாக முதுகை பின் பக்கமாக வளைக்கும் ஆசனம் பிரதி கிரியாசனமாக அமையும்.
      4. நான்கு வயதிலிருந்தே யோகப் பயிற்சியயைத் தொடங்கலாம் என்று சொல்லும் இவர், அவரவர் உடல் மற்றும் வயதுக்கேற்ற ஆசனங்கள் செய்வதே நல்லது என்கிறார்.
      5. பிராணாயாமம் செய்ய classic ratio ஒன்றைச் சொல்கிறார். 1:4:2. அதாவது மூசை ஐந்து செகண்ட் உள்ளே இழுத்து, 20 செகண்ட் உள்ளே நிறுத்தி, 10 செகண்ட் வெளியே விடவேண்டும்.
      6. யோகாசனத்தின் மூலம் ஆஸ்மா உட்பட பல வியாதிகளைக் கட்டுக்குக் கொண்டு வரமுடியும்.
       7. புத்தகங்களைப் பார்த்தோ அல்லது சி.டி.க்களைப் பார்த்தோ ஆசனங்கள் பயில்வது ஏற்புடையது அல்ல. தகுந்த ஆசிரியரின் மூலம் ஒருவரின் வயது, உடல் நிலை இவற்றுக்குத் தக்கவாறு ஆசனப் பயிற்சி பெறுவதே சாலச் சிறந்தது.

                                மேலும் இந்தப் புத்தகத்தில் வாசகர் கேள்வி பதில் மூலமும் பலத் துறை வல்லுநர்களின் பேட்டி மூலமும் ஆசனங்கள் குறித்த பல சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலத்தைப் பேண விரும்பும் அனைவருக்கும் ஒரு சிறந்த கேயேடு இந்தப் புத்தகம்.

                                சுய சிகிச்சைக் கலை பற்றி திரு.பாஸ்கர் அவர்களின் C.D- யைக் கேட்கும் வாய்ப்பும் சமீபத்தில் கிடைத்தது. ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் என்று உடலின் முக்கியமான பகுதிகள் ஆற்றும் வேலையை ஒரு சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும் வகையில் எளிமையாக விளக்குகிறார்.  நாம் உண்ணும் உண்வும், உண்ணும் முறையும் சரிவர இருந்தால் அதுவே நோய் தீர்க்கும் வழியாக அமையும் என்கிறார். அவரின் உரையை படிக்க அல்லது கேட்க anatomictherapy.org என்ற இணையதளத்தைப் பாருங்கள். அவரின் அறிவுரைகளில் சில:

1. உணவின் ஒவ்வொரு சுவையும் ஒரு உறுப்பு வேலை செய்யத் தூண்டும். உதாரணமாக, இனிப்பு இரைப்பையையும், புளிப்பு கல்லீரலையும் வேலை செய்யத் தூண்டுமாம். எனவே அறு சுவை உண்டி ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்.
2. அதற்காக தினமும் அறுசுவை விருந்து செய்ய வேண்டும் என்பதில்லை. கருப்பட்டி இனிப்புக்கும், வேப்பிலைப் பொடி கசப்பிற்கும் போதுமானது. உணவு உண்ட பின்னர் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உணவில் எந்த சுவை விடுபட்டாலும் அதைச் சரிசெய்துவிடுமாம்.
3. வாயை மூடிக் கொண்டு உணவை நன்கு மென்று சாப்பிடுதல் மிக நன்று (இதைத்தான் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றார்கள்).
4. காலைச் சம்மணமிட்டுக் கொண்டு சாப்பிடுவது உணவு செரிமானத்திற்கு ஏற்றதாம். நாற்காலியி கூட சம்மண்மிட்டு உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்கிறார்.
5. உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்னும் நீர் அருந்தக் கூடாது.

Tuesday 25 March 2014

மண் சிற்பங்கள்



குவைத்தில் 'Proud to be Kuwait' என்ற  project-காக மண் சிற்பங்கள் பிரும்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. 28,000 ச.மீ பரப்பில் 25 நாடுகளைச் சேர்ந்த 80 சிற்பக்கலை வல்லுனர்கள் சேர்ந்து பல மண் சிற்பங்களைச் செய்துள்ளனர். அரபியரின் பிரபலமான கதைகளான ஆயிரத்தோரு இரவுகள், சிந்துபாத் மற்றும் அலாவுதீன் கதைகளிலிருந்து பல நிகழ்வுகளைச் சிற்பங்களாக வடித்துள்ளனர். மாலை வேளையில் கண்கவர் வண்ண ஒளியில் இந்தக் கதைகளில் சிலவற்றை நாடகமாகவும் காண முடிந்தது. இரண்டு மில்லிலயன் டாலர் செலவில் செய்யப்பட்ட இந்த பிரும்மாண்டமான மண் சிற்பங்கள் உண்மையிலேயே பிரமிப்பூட்டும் வண்ணம் இருந்தன.

பகலில் சூரிய ஒளியில்

இரவில் வண்ண லேசர் ஒளியில்



Thursday 20 March 2014

கலர் தேர்தல்



 நானும் என் மகளும் துணிக் கடைக்குப் போக என் கணவரைத் துணைக்கு அழைத்தோம். " டிவிலே எலக்ஷன் பத்தி அலசிப் பேசிண்டிருக்கா. இப்ப போகனும்னா எப்படி? அப்பறமா போலாமே" என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார் அவர். "எங்கள் கல்லூரியில் ஒரு வீதி நாடகம் போடறோம் அப்பா. அதுக்குத்தான் துணி வாங்கனும். இன்னிக்கேப் போகணும்" என்று அடம் பிடித்தாள் என் பெண். ஒரு வழியாக அவரைச் சரிக்கட்டி ஜவுளிக் கடைக்குப் போனோம்.

"வாங்க, வாங்க. ரொம்ப நாளாக் காணுமே" என்று வரவேற்றார். அண்ணாச்சி. " என் பொண்ணு காலேஜில் ஏப்ரல் மாசம் முக்கியமான விழாவாம். அதுக்கு bulk-ஆத் துணி எடுக்கனும். காட்டுங்க அண்ணாச்சி" என்றோம்.

"இந்த துணி தரவா? இலை டிசைன் போட்டிருக்குப் பாருங்க. நல்ல ஸ்டிராங்கானத் துணி. சாயம் போகாது." என்றார் அண்ணாச்சி.
" நல்லாதான் இருக்கு. ஆனா 40 மீட்டருக்கும் குறைவா இருக்கும் போலிருக்கே. எங்க கல்லூரியில் எல்லாருக்கும் போறாதே. வேற துணியோடு சேர்த்து தைச்சா ஸ்டிராங்கா இருக்காது. நமக்கு மட்டும்னா பரவாயில்லை. எல்லாருக்கும்னு சேர்த்து வாங்கும்போது யோசிக்க வேண்டியிருக்கு......" என்றாள் மகள்.

"சரி இந்தத் துணி பாருங்க. கறுப்பு சிவப்பு கலந்து இருக்கு. சூரியன் மாதிரி டிசைன் கூட இருக்கு. கொஞ்சமா இருந்தாலும் வேற கலர் துணிகளும் 'கை' கொடுக்கும்" என்று புதிய பேல் துணியை விரிச்சுப் போட்டார்.
"ம்... நல்ல தரமா இருக்குமா? இது என்ன லைன்மாதிரி...இந்த 'அலைவரிசை'தான் கொஞ்சம் பயமுறுத்துது..யோசிக்க வேண்டியிருக்கே.. வேற காட்டுங்க" என்றேன்.

" இதைப் பாருங்க. பச்சை, வெள்ளை, ஆரஞ்சு கலர்ல இருக்கே. இதைத் தான் உங்க காலேஜுல ரொம்ப நாளா வாங்கிருக்காங்க...." என்றார் அண்ணாச்சி.
" இது பழைய கலர். எல்லாரும் இதை யூஸ் பண்ணி போரடிச்சு போயிருக்கா. போன தடவை வாங்கினது சாயம் வேற போயிடுத்து. ..." என்றாள் மகள்.
" இது புது ப்ராண்ட். 'ராகா'ன்னு புதுசா வந்திருக்கு..."
" புதுசா....  வேற வேற ப்ராண்டுன்னாலும் ஓனர் ஒருத்தர்தான். எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும். வேற காட்டுங்க..." என்றோம்.

" அப்படியா. இந்த காவி கலர் எப்படி இருக்கு?" என்றார் அண்ணாச்சி.
" காவியா? சந்நியாசி கலர்னு நிறைய பேருக்குப் பிடிக்காதே....." என்று யோசித்தாள் மகள்.
" இல்லம்மா. இது 'நமோ' பிராண்டுங்க. ரொம்ப பேருக்குப் பிடிச்சிருக்கு. நிறையவும் உங்களுக்குக் கிடைக்கும்... " என்றார் அண்ணாச்சி.

அதற்குள் அவரிடம் ஒருவர் ஏதோ விஷயம் சொன்னார். அண்ணாச்சி "ஐயா, நீங்க பார்த்துட்டு இருங்க. அதுக்குள்ள வாசல்ல ஒருத்தர் தொடப்பம் எடுத்து வந்திருக்கார். இங்க க்லீன் செய்யறேங்கறார்" என்றார். நாங்கள் ஒரே குரலில் " ஐயோ, தொடப்பம் எடுத்துண்டு வராரா!!!!! அவர் இந்த வேலைக்கே 'ஆப்பு' வைச்சுருவாரு.  நாங்க இதுலேயே ஒண்ண செலெக்ட் செஞ்சுட்டு போயிடறோம். ப்ளீஸ்" என்று அலறினோம்.

Thursday 7 March 2013

முன் ஜாக்கிரதை முத்தண்ணா


                 திரு மதன் அவர்களின் முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஜோக்சைப் பலரும் படித்து சிரித்திருப்போம். நான் நிஜ வாழ்வில் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவோடு இருவது வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். அந்த மு.மு. வேறு யாருமில்லை- என் தம்பி தான்.

               என்றைக்காவது பைப்பில் தண்ணீர் வரவில்லையென்றால் என்ன செய்வது என்று ஒவ்வொரு தினமும் வாளியில் தண்ணீர் பிடித்து வைப்பான்.  வெளியூர் போக ரெயில்வே ஸ்டேஷனுக்கு குறைந்தது ஒரு மணி நேரம் முன்பே போய் விடுவான். கேட்டால் வழியில் traffic jam ஆகிவிட்டால் என்ன செய்வது என்பான். கரெண்ட் போனால் அவசரத்துக்கு டார்ச் லைட்டைப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் என் தம்பி பாட்டரியெல்லாம் தனியே எடுத்து வைத்திருப்பான் - டார்ச் லைட்டிலேயே இருந்தால் பாட்டரி லீக்காகி டார்ச் வீணாகிவிடுமாம்.

              சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான்.  எப்போதும் இரண்டு பேனா, இரண்டு பென்சில், இரண்டு ரப்பர், இரண்டு ஷார்ப்பனர் என்று எல்லாமே இரண்டிரண்டாக எடுத்துப் போவான். "இந்த மட்டும் புத்தகங்களெல்லாம் இரண்டு செட்டு வேணுமுன்னு கேட்காமல் இருக்கானே என்று சந்தோஷப்படு" என்பார் என் அப்பா. "ஸ்கூல் பஸ்ஸில் ஏறும்போது 'uncle, நான் சீட்டில் உட்காரும் வரி வைட் பண்ணி வண்டி எடுங்க' என்று  L.K.G. படிக்கும் போது எங்கம்மா சொன்னதைப் பனிரண்டாம் வகுப்பு வரை ஞாபகம் வைத்துக் கொண்டு தினமும் சொல்வான். சில நேரங்களில் நாங்கள் பஸ்ஸில் ஏறும்போது எல்லோரும் கோரசாக  'uncle, நான் சீட்டில் உட்காரும் வரி வைட் பண்ணி வண்டி எடுங்க' என்று சொல்லும்போது எனக்கு வெட்கமாக இருக்கும்.

              என் அப்பா விளையாட்டாக, "அவன் பிறக்கும்போதே அப்படித்தானம்மா. ஆஸ்பத்திரி நீட்டா இருக்கா, டாக்டர்ஸெல்லாம் ஒழுங்க வேலை பார்க்கிறாங்களா என்று டெஸ்ட் பண்ணிட்டுத்தான் பிறந்தான். உங்கம்மா இரண்டு முறை வலி வந்து அட்மிட்டாகி மூன்றாம் முறைதான் இவன் பிறந்தான்." என்று கூறி சிரிப்பார். நானும் "போங்கப்பா. நீங்க ரெண்டு பேரும் ஒழுங்க குழந்தைங்களை வளர்ப்பீங்களா என்று என்னை முதலில் பிறக்கவிட்டு மூணு வருஷம் டெஸ்ட் செய்துவிட்டு அப்புறம்தான் அவன் பிறந்தானாக்கும்" என்று கேலி செய்வேன்.

             அவன் கொஞ்சம் வளரும் வரை நாங்கள் வாசல் கதவைத் திறந்து வைத்துக் காற்று வாங்கிக் கொண்டு கதை பேசுவோம். இப்பொழுதெல்லாம் வாசல் கேட்டுக்கு ஒரு பூட்டு, கிரில் கதவுக்கு ஒரு பூட்டு, மரக் கதவிற்கு ஒரு பூட்டு என்று அடுக்கடுகானப் பாதுகாப்பு எங்கள் வீட்டுக்கு. காலமும் கொஞ்சம் கெட்டுக் கிடக்கு என்றாலும் இது கொஞ்சம் அதிகமாகப்படுகிறது எனக்கு. ஒவ்வொரு முறையும் மூன்று பூட்டுக்களைத் திறந்து வெளியே போகும்போதும் 'நம்ம வீட்டுக்கு ஒரு திருடன் வந்தால் அன்னிலேர்ந்து அவன் திருட்டுத் தொழிலையே விட்டுவிடுவான்' என்று சலித்துக் கொள்வேன். அதுவும் வீட்டைப் பூட்டிகொண்டு வெளியே போகும்போது என்னவோ அடி பம்பில் தண்ணி அடிப்பதுபோல் அவன் அந்தக் கதவு தாழ்ப்பாளைப் பிடித்துத் தொங்கும்போது கோவத்தைவிட சிரிப்புதான் வரும்.

               ஒரு முறை இப்படித்தான் எங்கள் அப்பா ஊரில் இல்லாத சமயம் இரவு பனிரெண்டு மணிக்கு வாசல் கேட்டைத் தட்டும் சத்தம் கேட்டது. லைட்டைப் போட்டு ஜன்னல் வழியாக என் அம்மா பார்த்தபோது கேட்டருகில் ஒரு தபால் ஊழியர் நின்றுகொண்டு "அம்மா பாம்பேயிலிருந்து தந்தி வந்திருக்கு" என்றார். எங்கள் மு.மு.வோ கதவைத் திறக்க்ப்போன அம்மாவைத் தடுத்து, " எங்கேயிருந்து தந்தி வந்திருந்தாலும் சரி, காலையில் ஆறு மணிக்கு மேல வாங்க" என்று அதட்டினான். அந்தப் பெரியவரோ அழும் குரலில் "அப்பா, தந்தி வந்தால் உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று ரூல். நான் பாவம், பல்லாவரத்திலிருந்து இந்தக் குளிரில் சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் தயவு செய்து வந்து வாங்கிக்கங்க" என்று கெஞ்சினார். இதற்குள் பக்கத்து வீட்டிலிருந்து எழுந்து வெளியில் வரவே என் தம்பி தைரியமாகக் கதவைத் திறந்து வந்து தந்தியை வாங்கிக் கொண்டான். அந்தப் பெரியவர் ஒரு பெரிய கும்பிடு போட்டு அவனுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

              எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நிச்சயதார்த்தத்துக்கு முன் என் அம்மா அப்பாவிடம் கூட சொல்லாமல் இரண்டு நாட்கள் என் கணவரை வீடு, ஆஃபீஸ், கடைகளென்று துரத்திச் சென்று கண்காணித்திருக்கிறான் இந்த பாச மு.மு. மூன்றாம் நாள் என் கணவரே இவனை அழைத்து, "அப்பா மைத்துனரே. நான் உண்மையிலேயே நல்லவந்தான். நம்பு. இப்படி ஆஃபீஸ் முன்னால் நின்று என்னைச் சங்கடப்படுத்தாதே" என்று கெஞ்சாத குறைதான். இப்பவும்கூட வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர் இவனைக் கிண்டல் செய்யத் தவற மாட்டார்.

              இந்தப் பாசக்காரத் தம்பிக்கு நாளைத் திருமணம் - அதுவும் காதல் திருமணம். எப்படி இவனைப் பிடித்தாயென்று இவனின் காதலியைக் கேட்டால் "அக்கா. அவர் எப்பவும் முன் ஜாக்கிரதையாக இருப்பார். எதையும் முன்னேற்பாட்டோடுதான் செய்வார். ஒரு நாலு வருஷமா இவரைப் பார்த்து இவரின் நல்ல குணங்களை அலசியபின், என் அம்மா அப்பாவின் சம்மதத்தோடுதான் இவரிடம் என் காதலைச் சொன்னேன்" என்றவாறு தன் ஹேண்ட் பேகைத் திறந்து, அதிலிருந்து ஒரு pouch-ஐ  எடுத்துத் திறந்து அதிலிருந்து ஒரு சாவியை எடுத்து தன் காரைத் திறந்தாள். ஜாடிக்கேத்த மூடிதான் போங்க!!!.




Wednesday 21 November 2012

திண்ணைப் பேச்சு


           வாங்க, வாங்க, உட்காருங்க!.  ரொம்ப நாளாச்சு திண்ணைப் பேச்சு பேசி. தீபாவளியெல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? நாங்களும் இங்கு குவைத்தில் வெடியெல்லாம் வெடித்துக் கொண்டாடினோம். தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னால் குவைத் கவர்மெண்டே ஒரு மெகா வான வேடிக்கை நடத்தியது. பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. என்னது, ஒபாமா தீபாவளி கொண்டாடியது போல் இங்கும் கொண்டாடினாங்களான்னு கேட்கிறீங்களா? இல்ல, இல்ல, இந்த வான வேடிக்கை குவைத்தின் constitution-க்கான 50-ம் ஆண்டு விழாவிற்காக. ஒரு மணி நேரம் தொடர்ந்து வெடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது இந்த விழா.



 மேலும் அதிகப் புகைப்படங்களையும், காணொளியையும் இங்குபார்க்கலாம்.

            தீபாவளிக்கு இன்னொரு விசேஷம்: சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் விண்வெளியிலிருந்து நம் மக்களுக்குத் தீபாவளி வாழ்த்து சொல்லியிருக்கிறார். (அவரென்ன அமிஞ்சிக்கரைக்குப் போவது போல் அடிக்கடி விண்வெளிக்குப் போய் வருகிறார்!!!). அவர் விண்கலத்தில் தன் அறையில் ஓம் என்று ஒட்டியிருந்ததையும், அவரின் தந்தை அளித்த உபநிஷத்துக்களை அங்கு படித்தார் என்றும் அறிந்து ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

             இரண்டு வாரங்களுக்கு முன் என் மகளுக்காக To the Arctic என்ற 3D டாகுமெண்டரி படம் பார்த்தோம்.

                    

              உண்மையிலேயே என்னையும் அந்தப் படம் கவர்ந்தது. வெள்ளை வெளேரென்ற பனிமலையில் இரு குட்டிகளைக் காக்க அந்தத் தாய் polar bear படும் பாட்டைப் பார்த்தால் பாவமாக இருக்கு. இந்தக் குட்டிகளுக்கு வில்லன் யாருன்னு பார்த்தால் இன்னொரு male polar bear தான். சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லைன்னு இந்த குட்டி polar bear- ஐச் சாப்பிடத் துரத்துகிறது. அதனிடமிருந்து காப்பாற்றப் போராடி, முடியாது என்று தெரிந்தவுடன், "முதல்ல என்னைக் கொல்லுடா தைரியமிருந்தா...!!!" என்று உருமி சவால்விட்டு அந்த male polar bear-ஐ அரண்டு ஓட வைக்கும்போது  தாய் போலார் பியரின் தாய்மை உணர்வு 'அட' போட வைக்கிறது. அண்டம் வெப்பமயமாக்கலால் பனி உருகி, நீண்ட கோடைக்காலத்தால் ஆர்டிக்கில் வாழும் உயிரினங்கள் படும் கஷ்டத்தைப் பார்க்கும்போது நாம் என்ன ஒரு சுய நலத்துடன் கார், a/c என்று பயன்படுத்தி வெப்ப மயமாக்கலை அதிகப் படுத்துகிறோமே என்று வெட்கமாக இருந்தது. வெடி வெடிப்பது, எரிபொருளை தேவையில்லாமல் பயன்படுத்துவது எல்லாம் குறைத்து Reduce, Reuse, Recycle என்ற 3R கொள்கையை முடிந்தவரை பின்பற்றுவோமாக!!!.

          சென்ற வாரம் குவைத்தில் வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் காயத்ரி வீணை இசையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜயலக்ஷ்மி அவர்கள் கண் பார்வையற்றவர். ஆனால் அவரின் வீணை இசையைக் கேட்டால் எப்படி இப்படி வாசிக்க முடிகிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.


 இந்த மார்கழி சீசனில் இவரின் கச்சேரி இருந்தால் கட்டாயம் போய் கேளுங்கள்.

           என் மகள் ஃப்ரென்ச் பாடம் படிக்கையில் சமஸ்கிருதத்துக்கும் ஃப்ரென்ச்சுக்கும் எண்ணிக்கையில் (ordinal numbers) இருக்கும் ஒற்றுமையை கவனித்து வியந்தேன்.
english      french                          sanskrit
seventh- septieme (செப்டிமி) - சப்தமி
eighth -  huitieme (விட்டிமி) - அஷ்டமி
ninth -   neuvueme (நுவேமி) - நவமி
tenth -   dixieme (டிக்சிமி) - தசமி
சரிங்க, அடிக்கடி வாங்க. இன்னொரு நாள் இந்த மாதிரி பேசலாம்..

Monday 17 September 2012

ஆறில் சனி

         ஒரு குடும்பத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் என்று மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.

        ஆறு மனமே ஆறு!! இதனால் எத்தனை நன்மைகளிருக்கின்றன தெரியுமா? தாய்மார்களே, சமையல் எரிவாயுவைச் சேமிக்கும் பொருட்டு வெகு நேரம் கொதிக்க வைப்பது, வெகு நேரம் வறுப்பது எல்லாம் கட். அதனால் உங்களுக்கு டிவி சீரியல் பார்க்க அதிக நேரம் கிடைக்குமே!!.

        ஆறு சிலிண்டர்தான் என்றால் மீதி நாளுக்கு எப்படி சமைப்பது? சமைக்காமல் அப்படியே காய் கனிகளைச் சாப்பிட வேண்டியதுதான்!!. இதனால் எவ்வளவு நன்மைகள் -- உடல் எடை குறையும்; சர்க்கரை வியாதி, cholesterol எல்லாம் கட்டுக்கு வரும்; நேரம் மிச்சமாகும்.

         வயசானவங்களுக்கு இப்படி என்றால் இளைய தலைமுறைக்கு இன்னும் பல லாபங்கள். மனதிற்குப் பிடித்ததை ஹோட்டலில் சாப்பிடலாம்.  யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

        அரசாங்கத்துக்கும் எவ்வளவு நன்மை!!  இப்படி ஹோட்டலில் சாப்பிடுவது அதிகமானால் hotel industry வளரும்;  நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். ஹோட்டல் சாப்பாட்டில் வயறு கோளாறு வந்தால் ஹாஸ்பிட்டல் போவார்கள். மருத்துவத் துறையும் வளரும்!!!! 

       சமையல் கேசும் அதிகம் கிடைக்காது;  induction  அடுப்பு வேலை செய்ய மின்சாரமும் தொடர்ந்து கிடைக்காது என்றால் மக்கள் என்ன செய்வார்கள்?  லங்கணம் பரம ஔஷதம் என்று பாதி நாள் சாப்பிடாமல் இருக்க வேண்டியதுதான். இதனால் செலவும் கம்மி!! இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று ஒபாமா உட்பட பல பேரிடம் ஏச்சு வாங்க வேண்டாம்.

         அதை எல்லாம் விட இந்த கேஸ் சிலிண்டர் கொண்டுதரும் தொழிலாள வர்க்கத்துக்குதான் எத்தனை மவுசு வரும்!!.  கற்பனை பண்ணிப் பாருங்கள்.

தலை தீபாவளிக்குச் ஜவுளி எடுத்து வந்த கணவனிடம் மனைவி கேட்கிறார்:
மனைவி: என்னங்க.. மாப்பிள்ளைக்கு இவ்வளவு பணத்தில் வான்ஹுசைன் சட்டை வாங்கியிருகீங்களே, ரொம்ப சந்தோஷங்க!!
கணவன்: அடியே, அது கேஸ் சிலிண்டர்காரருக்கு.  அதைப் பத்திரமா வை.  மாப்பிள்ளைக்கு முறுக்கே அவர் தயவில்தான் வரும் தெரிஞ்சிக்கோ!

கிராமத்தில் புதியதாக வந்தவர்: அது யாருங்க, MP யா இல்ல  MLA வா? எல்லாரும் வணக்கம் சொல்றாங்க?
நண்பர்: அதுதான் எங்க கிராமத்தில் கேஸ் சிலிண்டர் போடறவரு. நீங்களும் ஒரு வணக்கம் வைங்க, உங்களுக்கு உதவும்.

        அது சரி அது என்ன கணக்கு, ஐந்து, பத்து இல்லை, ஒரு டஜன் என்று round fingure ஆக இல்லாமல் ஆறு சிலிண்டர்கள் என்று முடிவு செஞ்சாங்க? ஏன்னா, எட்டில் சனி, ஏழரை சனி எல்லாம் கேள்விப்பட்டிருக்கோம், இப்ப இந்தியர்களுக்கு ஆறில் சனி!!! கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைச் சரி செய்ய முடியாமல் 6-8 மணி நேரம் வரை மின் தட்டுப் பாடு அமலுக்கு வந்தது. இப்போது எரிவாயு தட்டுப்பாட்டைச் சரி செய்ய முடியாமல் கேஸ் சிலிண்டருக்கு ரேஷன் வந்து விட்டது. இனிமேல் எந்த பிரச்சினையையும் சரி செய்ய யோசிக்காமல் குடிமக்களின் தேவைகளை அடக்கி சர்வாதிகாரமாக ஆளத் தயங்க மாட்டார்கள் போலிருக்கிறது. இந்திய மக்களை ஆறில் சனி பிடித்திருப்பதால் இனி இப்படியும் சட்டங்கள் வரலாம்:

1.பல இடங்களில் பருவ மழை பொய்த்து இருப்பதால் மக்களே ஒரு நாளுக்கு ஒரு குடும்பத்துக்கு ஆறு லிட்டர் தண்ணி தான் வழங்கப்படும்.
2.விளைச்சல் குறைவால் மக்களே, ஒரு குடும்பத்துக்கு வருடத்திற்கு 6 Kg அரிசிதான் வழங்கப்படும்.
3.ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்தான் மின்சாரம் (க்கும், அதுதான் ஏற்கனவே இருக்கே!!!).
4.கடுப்பில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் சார்பாக ஒரு சட்டம்: ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம்தான் டிவி சீரியல் பார்க்கலாம்.
5.வெறுப்பிலிருக்கும் மக்கள் சார்பாக ஒரு சட்டம்: ஆறு கோடிக்கு மேல் எந்த அரசியல்வாதியும் ஊழல் செய்யக் கூடாது. ஆறு வருஷத்துக்கு மேல் எந்த அரசியல்வாதியும் அரசியலில் இருக்கக்கூடாது.

Sunday 26 August 2012

நீல் நிலா

“That’s one small step for man, one giant leap for mankind,”

Hats off to you.