Friday 30 October 2009

தீபாவளி பிரச்சினை!!!

இந்த வருடம் தீபாவளிக்கு ஏதாவது specielஆகச் செய்து அசத்தலாம் என்று net-ல் தேடிப்பார்த்தேன்.


அல்வா? நமக்குக் கொடுக்கத்தானே வரும், கிண்ட வராதே என்று reject செய்தேன். குலோப்ஜாமூன்? குடும்ப பாட்டு போல் எங்கள் குடும்ப பஷணம் அது. என் சகோதர, சகோதரி குடும்பங்களில் தீபாவளி தோறும் செய்யப்படும் ஒன்று. அதனால் அதையும் reject செய்தேன். புதிதாக ஏதாவது என்று மேலும் தேடினேன். கண்ணில் பட்டது 'மோஹந்தால்'. செய்முறையைப் பார்த்தேன். கடலை மாவை வறுத்து, condensed milk மற்றும் நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருந்து, கடைசியில் நெய் தடவிய plate-ல் கொட்டி துண்டம் போடவும் என்று இருந்தது. ஆஹா, easy யாக இருக்கே , இதையே செய்வோம் என்று முடிவு செய்தேன். (இவ்வளவு easy யா, இதில் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்று யோசித்திருக்க வேண்டாமோ?). கடலை மாவையும் மற்ற பொருட்களையும் சேர்த்து கிளறினேன், கிளறினேன், கிளறிக்கொண்டே இருந்தேன். It looked like a never ending process. அது ஒரு மாதிரி கோந்து போலவே இருந்தது. ஒரு level-க்குப் பின்னர், இதுதான் சரியான பதம் என்று நானே மனசைத் தேற்றிக்கொண்டு, plate-ல் கொட்டினேன். அதைத் துண்டங்களாக்குவது அதைவிட பெரிய கஷ்டமான வேலையாக இருந்தது. கத்தியால் லேசாகக் கோடு போட்டால், கத்தியை எடுத்தவுடனே ஒன்றாகச் சேர்ந்தது. கொஞ்சம் அழுத்தி வெட்டினால், மொத்தமாகக் கத்தியுடனே ஒட்டிக்கொண்டு வந்தது (இது கோந்துதான், சந்தேகமே இல்லை!!!!). சரி, ஆறினால் சரியாகி விடும் என்று ஒன்று, இரண்டு மணி நேரம் wait பண்ணியும் சரியாகததால், overnight இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். காலையில் எல்லோருக்கும் முன்னால் எழுந்து மெதுவாகப் பூனை போல் வந்து திறந்து பார்த்தேன். ம் ஹூம், ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு வேளை, 'மோஹன் தான்' வந்து அதைத் தட்டிலிருந்து எடுக்க வேண்டுமோ?!!. எனக்கு அறிந்தவர், தெரிந்தவர்களில் மோஹன் என்று யாரும் இல்லாததால் அதைச் சத்தம் போடாமல் dustbinனில் கொட்டினேன். கடையில் போய் காஜூ கட்லி, ஜாங்கிரி என்று வாங்கினேன்.


என் அம்மா தீபாவளியன்று காலையில் போன் செய்தார்.

அம்மா: "தீபாவளிக்கு என்ன பண்ணினே?"

நான்: "காஜூ கட்லி, ஜாங்கிரியெல்லாம்....."

அம்மா: (சந்தோஷமாக)"very good"

நான்: "பண்ணியிருந்ததை வாங்கி வந்துட்டேன்!"

அம்மா: (சுரத்தில்லாமல்)"ஓஹோ".

 
கடைசியில் என் அக்காவிடம் மட்டும், மோஹந்தால் மேட்டரைச் சொன்னேன். அவள் கூலாக, குலோப் ஜாமூன் பண்ணியிருக்க வேண்டியதுதானே என்றாள்!!!!

Thursday 29 October 2009

NOT SO NOBLE?!!!!!!

நான், எனது என்று பெருமை கொள்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. 'என்னோட அப்பவோட, அக்காவோட,நாத்தனாரோட'-----என்று ஓட ஓட உறவுகளின் சாதனைகளையும் தற்பெருமையடிப்பதில் தனி திருப்தி. அப்படியிருக்க நம் நாட்டில் பிறந்த (கவனிக்க, only பிறந்த) ஒருவர் நோபல் பரிசு வாங்கினால் விடுவோமா? தமிழர்களெல்லோரும் சந்தோஷத்தில் திளைத்து பெருமிதத்தில் மிதந்தோம். வலைஞர் பலரும் அவருக்கு email மேல் email அனுப்பி அவருடைய inbox யே fill பண்ணிவிட்டோம். அவர் பாவம், காலையில் mail open பண்ணி படித்து முடிக்கவே 2-3 மணி நேரமாகி கடுப்பாகிப் போனார்.(கீழே அவரின் பேட்டியைப் படிக்கவும்).


எனக்கு சில விஷயங்கள் புரியவில்லை.

(1). என்னைப் போன்ற மிக சாதாரணமானவர்களே முக்கியமானவற்றிற்கு ஒரு email idயும், சாதரண மேட்டர்களுக்கு (net ல் பல websitesல் register செய்வது போன்ற விஷயங்களுக்கு) தனி mail idயும் வைத்திருக்கும்போது, அவர் range-க்கு ஒரு நாலு mail id யாவது வைத்திருக்க வேண்டாமா?

(2). அவருக்கு இந்த வேலைகளைப் (mail-களைப்) பார்க்க personal assistant கிடையாதா?

(3). நம் மக்களும் free யாக முடியுமே என்று email அனுப்பி மகிழ்ச்சியை முடித்துக்கொள்ளாமல் அவரவர் சந்தோஷத்திற்கும், சம்பளத்திற்கும் ஏற்றவாறு ஒரு greeting card-யோ, பூங்கொத்தையோ அனுப்பியிருக்கலாம். இரு நாட்டு ailing postal department ம் கொஞ்சம் பிழைத்திருக்கும்!!!!.



அவருடைய பேட்டி உங்களுக்காக:



Nobel laureate Venkatraman Ramakrishnan has expressed disenchantment with people from India "bothering" him "clogging" up his email box and dubbed as "strange" their sudden urge to reach out to him.

"All sorts of people from India have been writing to me, clogging up my email box. It takes me an hour or two to just remove their mails," he said. He said the deluge of emails had buried important communications from colleagues or from journals concerning papers we have in press.

"Do these people have no consideration? It is OK to take pride in the event, but why bother me?" the 57-year-old Indian-American scientist wondered in an email interview.

"There are also people who have never bothered to be in touch with me for decades who suddenly feel the urge to connect. I find this strange," said Ramakrishnan, who shared this year's Nobel Prize for Chemistry with two others.

Monday 26 October 2009

தூர்தர்ஷனும் துர் தர்ஷனும்

தூர்தர்ஷனுக்கு 50 வயதாகிறதாம். வாழ்த்துக்கள். நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுதுதான் எங்களுக்கு டிவி அறிமுகமான நேரம். ஒலிபரப்பு தொடங்கும் நேரத்திற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பே டிவியின் முன் அமர்ந்து லோகோவையே பார்த்துக்கொண்டு தீம் ம்யூசிக்கைக் கேட்டுக்கொண்டு ஆவலுடன் காத்திருப்போம். வெள்ளிக்கிழமையென்றால் ஒலியும் ஒளியும், ஞாயிறு என்றால் மலரும் நினைவுகள் என்று பட்டியலிட்டுப் பார்த்திருப்போம். ஆனால் போகப்போக சிந்திக்க ஒரு நொடி (தலைவர் பெயர் நேவில் ஆரம்பித்து ருவிமுடியும், நடுவில் ஒன்றும் கிடையாது. அவர் யார் என்ற ரேஞ்சுக்குக் கேள்விகளைக் கேட்டு சாகடித்து), செவ்வாய் சாபமாக நாடகங்கள் என்று வாட்டி எடுத்தார்கள். சன் டிவி போன்ற சேனல்கள் வந்து அபயக்கரம் நீட்டி காப்பாற்றினார்கள்.

ஆனால் விதி வலியது. முடிவே இல்லாத மகாமக சீரியல்களாலும், தமிழைக் கொல்லும் தொகுப்பாளினிகளாலும், பார்க்கவும் கேட்கவும் கூசும் ரியாலிடி ஷோக்களாலும் நொந்து நூலாகிப்போன
மக்கள் தூர்தர்ஷனுக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுப்பதற்கு ரெடி. துர் தர்ஷனிலிருந்து மக்களைக் காப்பாற்றி கிடைத்த சான்ஸைத் தக்கவைத்துக்கொள்ள தூர்தர்ஷன் ரெடியா?

இதனால் நான் சொல்வது யாதெனில்.......

என்னுடைய குடும்பத்தில் எல்லோருக்கும் எழுத்தார்வம், தமிழ்ப் பற்று உண்டு. என் பாட்டி (அப்பாவின் அம்மா) பேசினாலும் ஏசினாலும் கவிதை நடையில் கலக்குவார் (ஆதியிலே அலமேலு, பாதியிலே பாகீரதி..... என்று). என் அப்பாவும் கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய கதைகள் இரண்டை அவரின் தமிழ் நடைக்காகவும் முத்து முத்தான கையெழுத்திற்காகவும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். என் அண்ணா இருவரும் சிறுவயதிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்கள். என் சகோதரிகளும் கதை, கவிதை எழுதுவார்கள். இவர்களைப் பற்றி அறிந்ததாலும் அவர்களின் ஞானம் எனக்கும் உண்டு என்ற அஞானத்தினாலும் என் கணவர் என்னை எழுதச்சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருப்பார். அவர் தொடர்ந்து ஊக்குவித்ததாலும், தார்குச்சி போட்டுக்கொண்டே இருந்ததாலும் (சலித்துப்போய் குச்சியால் போட்டு விடுவாரோ என்ற பயத்தாலும்) இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்தேன். அதனால் இந்த ப்ளாக் படித்து திட்ட நினைப்பவர்கள் முதலில் மேற்சொன்ன அனைவரையும் திட்டிவிட்டு கடைசியாக என்னைத் திட்டவும்.

பிள்ளையார் சுழி

இணையத்தில் நிறைய தமிழ் பதிவுகளைப் படிக்க படிக்க எனக்கும் ஒன்றை ஆரம்பிக்க எண்ணம் வந்தது. பொழுது போக வேண்டாமா?. சிறு வயதிலிருந்தே எதையும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் பழக்கம் உள்ளதால் முதலில் விநாயகரைப் பற்றி ஏதாவது எழுத நினைக்கிறேன். இந்த பழக்கம் என்னுடைய பாட்டி மற்றும் அம்மாவிடமிருந்து வந்திருக்க வேண்டும். பிள்ளையாரை வேண்டிக்கொண்டால் எல்லாமே கிடைக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடைய நண்பர் மற்றும் உறவினர் அனைவரும் இதை அறிவர்.
எனக்கு இந்த ஜெயன்ட் வீலில் ஏறுவது என்றாலே ரொம்ப பயம். ஒரு முறை சிலரின் கட்டாயத்தின் பேரில் ஏறினேன். என் மன்னியும் என்னுடன் வந்தார். மேலே போனவுடன் பயத்தில் முருகா முருகா என்று கத்தத் தொடங்கினேன். என் மன்னி உடனே "எப்போதும் பிள்ளையாரைத் தானே கூப்பிடுவீர்கள். இப்பொழுது என்ன முருகனைக் கூப்பிடுகிறீர் கள்?" என்றார். ஐயையோ, இது என்னடா குழப்பம்!! கோவத்தில் இரண்டு பேருமே காப்பாற்றாமல் விட்டுவிடுவார்களோ என்று பயந்து, "பிள்ளையாரே, முருகா... " என்று மாறி மாறி கத்தி கதறி அலறி அழுது ஒரு வழியாகக் கீழே இறங்கினேன்.
எனக்குத் தெரிந்த ஒருவர் என்னைவிட ஒரு படி அதிக பக்தி உடையவர். காமெரா வாங்கினால் முதலில் பிள்ளையாரைப் படம் பிடிப்பார் (பிள்ளையார் போட்டோவைச் சொன்னேன்.). விடியோ காமெராவிலும் அப்படியே. அவர் செல்ஃபோன் வாங்கியபோது என்ன செய்தார் என்று நான் யோசிப்பது உண்டு.எது எப்படியோ, இந்த ப்ளாக் எழுதும் என்னையும், முக்கியமாக படிக்கும் உங்களையும் பிள்ளையார் காப்பாராக!!!!!