Thursday 15 September 2011

திண்ணைப் பேச்சு

                நம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி பித்து இருப்பது தெரியும்.  அதுவும் அதில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் வாய்ப்பு கிடைத்தால் போதும் அவர்கள் தன்னை மறந்துவிடுகிறார்கள்.  உலகம் முழுதும் பெரும்பான்மை மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் என்ன பேசுகிறோம் என்று வரையரையில்லாமல் பேசுகிறார்கள்.  கோபிநாத் அவர்கள் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தாயைப் பற்றி குற்றப் பத்திரிகை வாசித்தது கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அம்மாவைப் பற்றி புரிந்து கொள்ளாதது ஒரு குறை; அவர்களின் அன்பை உணராததும் குறை; ஆனால் அதெல்லாம்விட பலர் முன்னிலையில் அம்மாவைப் பற்றி குறை கூறுவது என்னைப் பொறுத்தவரை பெரிய குற்றம் எனலாம். 
தொலைக்காட்சி, கணிணி போன்ற இயந்திரங்களுடன் manual கொடுப்பதுபோல் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் வருபவர்களுக்கு ஒரு code of conduct கொடுத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

               அது போல் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கும் code of conduct கொடுத்தால்கூட பரவாயில்லை.  'மாமா வீபுதி குங்குமம் கொடுங்க' என்று கை நிறைய வாங்கிக் கொண்டு ஒரு சொட்டு இட்டுக் கொண்டு மீதியைச் சுவற்றில் கொட்டி கோவிலின் சுவற்றை அழுக்காக்குவது குற்றம் என்று சட்டமே போடலாம் என்று தோன்றும்.  நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் (ஷீரடியில் உதி வைத்திருப்பது போல்) ஒரு விரல் மட்டும் செல்லும் அளவு துளை போட்ட மூடியால் விபூதி இருக்கும் ட்ரேயை மூடி வைத்திருப்பதால் இங்கு அந்த மாதிரி அழுக்கு செய்யாமலிருக்கிறார்கள்.  இதை எல்லா  கோவிலிலும் நடைமுறைப்படுத்தலாம்.  (அப்படியே ஒரு கொசுறு தகவல்.  நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ஐயர் கடையில் காபி கிடைக்கிறது.  ஒன்லி காபி மட்டும்தான் விற்கிறார்.  சூப்பரான காபி.)

            வேளச்சேரியருகே மெயின் ரோடுக்கருகிலேயே ஒரு அம்மன் கோவிலில் போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கும்பலாகக் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். இரவு வீடு திரும்பி வரும் நேரத்தில் பார்த்தால் மக்கள் கூழைக் காய்ச்சி முடித்துவிட்டு அந்தக் கோயில் வாசல் முழுவதும் பிளாஸ்டிக் பேப்பர் பைகளை அப்படியே குப்பையாகப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். சுத்தம் சோறு போடும் என்பார்கள்.  இவர்கள் சோறு சாப்பிட்டு குப்பையைப் போடுகிறார்கள்!!

              கோவில் பற்றி பேசும்போது இந்த கோடை விடுமுறையில் கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் பார்த்த நினைவு வருகிறது.  ஒரு வாரம் நடந்த அந்த விழாவில் பல விஷயங்கள் கவனத்தைக் கவர்ந்தன. (1) ஒரு வாரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போன போதிலும் ஒரு இடத்திலும் குப்பையே காணப்படவில்லை. (2) மெயின் ரோடிலேயே இருந்த போதிலும் பெரிய அளவில் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படவில்லை. (3).  போலீஸ், மருத்துவம், தீயணைப்பு என்று பல விஷயங்களுக்குச் செய்யப்பட்ட முன்னேற்பாடு. (4). கோவிந்தபுரம் போல் ஒரு உள்ளடங்கிய கிராமத்திலிருந்து அந்த நிகழ்ச்சியை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தது. (5) கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் பாண்டுரங்கனையும் ருக்குமணியையும் ஊர்வலமாகக் கொண்டு வந்தது மறக்க முடியாத நிகழ்ச்சி. (6) எல்லா நிகழ்ச்சிகளையும் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடித்தது.

              காஞ்சிபுரமென்றால் சங்கர மடமும், காஞ்சி காமாக்ஷி கோவிலும், வரத ராஜ பெருமாள் கோவிலும் நினைவுக்கு வரும். இந்த முறை அங்குள்ள கைலாச நாதர் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது.  கோவிலெங்கும் சிற்பங்கள் மாமல்லபுரத்தை நினைவூட்டியது.  அங்கு பிரகாரத்துக்குள் ஒரு சுரங்கப் பாதை போல் உள்ளது.  பாதையின் நுழைவுப் பகுதி மரணவாயில் என்று அழைக்கப்படுகிறது.  தலையை முதலில் நுழைத்து குப்புறப் படுத்துதான் உள்ளே நுழைய முடியும். இப்படி நுழைந்தவுடனே ஒரு பெரிய இறக்கம் (படிகளெதுவும் கிடையாது.)  பின்னர் எழுந்து நடக்குமளவு உயரம் இருக்கிறது.  வெளியில் வரும் வழி ஜனன வாயிலென்று சொல்லப்படுகிறது.  அது மிகவும் சிறியது.  மீண்டும் குப்புறப்படுத்து ஒரு உன்னல் உன்னித்தான் (குழந்தை கர்ப்பவாயிலிலிருந்து வெளிவருவது போல்) வெளியே வர முடிகிறது.  அதனுள் சென்று வந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.  இந்தக் கோயில் பற்றிய ஒரு கதையும் உண்டு.  பூசல நாயனார் அவர்கள் மனதிற்குள் கற்பனையாக சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டி அதற்கு கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறித்தாராம்.  கைலாச நாதர் கோவில் கட்டிய மன்னனும் அதே நாளில் இந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் குறித்திருந்தாராம்.  சிவன் மன்னன் கனவில் தோன்றி தான் பூசல நாயனார் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால் மன்னனின் கோவில் கும்பாபிஷேகத்தைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.  இந்தக் கோவிலின் அழகைப் பார்த்ததும் நாயனாரின் பக்தியை வியக்காமல் இருக்க முடியவில்லை.