Friday 31 December 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்



பதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(படம் :  வைபவி)

Friday 24 December 2010

பகிர்தலும் இன்பமே

            
             நான் என் நாய் டானுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.  13 வயது சிறுமியான எனக்கு டான்தான் நல்ல நண்பன்.  நான் சைக்கிள் ஓட்டி விளையாடும்போதும், ஸ்கேட்டிங் செய்யும்போதும் என்னுடன் ஓடி வந்து விளையாடுவான்.  எனக்கு அக்கா இருந்த போதும் வயது வித்தியாசம் காரணமாக அதிகம் விளையாடமாட்டாள்.  எங்கள் அக்கம்பக்கத்தில் என் வயது சிறுமிகளும் இல்லை.  எனக்கு டான்தான் சிறந்த தோழன்.

             என்றும்போல் அவனுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து அம்மாவுடன் டின்னர் ரெடி செய்ய உதவிக்கொண்டிருந்தேன்.  உள்ளே வந்த அப்பா என்னை அழைத்து, "Mr.Roth-க்கு மிகவும் உடல் நலம் சரியில்லை.  உனக்கே தெரியும் அவர் வீல்சேரில்தான் நகர்கிறார்.  கண்பார்வையும் சரியாக இல்லை. அவரின் மகனும் மகளும் வேலைக்குச் செல்வதால் பகல் நேரங்களில் மிகவும் தனிமையாக உணர்கிறார். அவருக்கு துணையாக ஒரு நாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்" என்றார்.  "ஓ! கடையில் வாங்கிக்கலாமே அப்பா.  நிறைய கடைகளில் கிடைக்கின்றனவே" என்று நான் ஒன்றும் புரியாதது போல் பதில் சொன்னேன். " ஏற்கனவே அவரின் ஆஸ்பத்திரி செலவு அதிகம்.  மேலும் சில மாதங்களே அவர் இருப்பார் என்று டாக்டர் சொல்கிறார்...." என்று நீட்டினார் அப்பா.  "அப்பா, டான் தான் எனக்கிருக்கும் ஒரே விளையாட்டுத் துணை.  அவனை என்னால் பிரிய முடியாது" என்று சொல்லிவிட்டு என் அறைக்கு அழுதுகொண்டே ஓடிவிட்டேன்.

              ஆனாலும் என் மனசாட்சி என்னை விடவில்லை.  'உன்னைவிட அதிகத் தனிமையில் வாடுவது Mr.Rothதான்.  டான் அவருக்கு எல்லா வகையிலும் துணையாக இருப்பான்.  இப்பொழுது சுயநலமாக இருந்துவிட்டு ராத்தின் மறைவுக்குப் பின் அழுது என்ன பயன்' என்று என்னைக் குடைந்தெடுத்தது.  ஒரு தீர்மானத்துடன் அப்பாவிடம்" அப்பா, இப்பவே வந்து அவர் மகனை டானைக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லுங்கள்.  நாளைக் காலை என் மனம் மாறினாலும் மாறிவிடும்" என்று அழுதுகொண்டே சொன்னேன்.  அப்பா என் கண்ணீரைத் துடைத்து முத்தமிட்டு நன்றி சொன்னார்.

               டான் என்னைவிட்டு பிரிந்து இன்றோடு மூன்று வாரம் ஆகிறது.  மாலை வேளைகளின் அவனில்லாமல் மிகவும் தனிமையாக உணர்கிறேன்.  எனக்கு சிறந்த நண்பன் மட்டுமில்லாமல் என்மீது வேறு யாரையும்விட அதிக அன்பைப் பொழிவது டான்தான். அவனும் நானில்லாமல் எப்படி தவிக்கிறானோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது எங்கிருந்தோ நான்கு கால் பாய்ச்சலில் ஓடிவந்த டான் என் மீது விழுந்து புரண்டது.  மிக்க அன்போடு என் முகம், கை என்று நக்கியது.  மூச்சு வாங்க பாய்ந்து வந்த டானுக்கு உடனே தண்ணீர் கொடுத்தேன்.  இடையிடையே என்னை நக்கி அன்பைத் தெரிவித்த வண்ணம் தண்ணீரை ஓரே மூச்சில் குடித்தான் டான்.  நானும் அவனைத் தடவிக் கொடுத்து என் அன்பை வெளிப்படுத்தினேன்.

              கால்மணி நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த Mr.Roth-ன் மகன் டானைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.  "என்னால் நம்பவே முடியவில்லை.  நாங்கள் வெளியில் செல்லும்போது டான் மதிலேறி குதித்து அடிபட்டுக் கொள்ளாமல் இருக்க அவனைச் சங்கிலியால் கட்டுவோம். இன்று மதியம் என் அப்பாவுடன் டான் பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.  ஏதோ மறதியில் டானைக் கட்டிப் போடாமல் நாங்கள் கடைக்குச் சென்றுவிட்டோம்.  இந்த சமயத்தைச் சரியாகப் பயன்படுத்தி டான் மதிலைத் தாண்டிக் குதித்து உங்கள் மகளைப் பார்க்க ஓடிவந்திருக்கிறான்.  என் அப்பா ஃபோன் செய்யவும் உடனே உங்களைப் பார்க்க வந்தேன்.   எப்படி உங்கள் வீட்டை நோக்கிச் சரியாக இவ்வளவு தூரம் ஓடிவந்திருக்கிறதே! unbelievable!! டானுக்கும் உங்கள் மகளுக்கும் இடையேயுள்ள அன்பை இப்பொழுது நான் உணர்ந்துகொண்டேன்" என்று என் அப்பாவிடம் சொன்னார்.  நானும் டானும் ஓடி விளையாடத் தொடங்கினோம்.

               இதற்குப் பிறகும் டானை இரவல் கேட்க ராத்தின் மகனுக்கோ என் அப்பாவிற்கோ மனமில்லை.  ஆனால் ராத்தின் வயதான அப்பாவைத் தனிமையில் தவிக்கவிட எனக்கு மனம் வரவில்லை.  அதனால் அவரின் மகனிடம் "uncle! நீங்கள் டானைக் கூட்டிக்கொண்டு போங்க.  ஆனால் வாரத்திற்கு ஒருமுறை நான் உங்கள் வீட்டிற்கு வர என்னை அனுமதிக்க வேண்டும்.  என்னை மீண்டும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் டானும் ஓடிவரமாட்டான்" என்றேன்.  எனக்கு நன்றி கூறிவிட்டு டானுடன் புறப்பட்டார் அந்த அங்கிள்.  மிகப் பெருமையோடு என்னை அணைத்துக்கொண்டார் என் தந்தை.

               இதற்குப் பின் வராவாரம் வெள்ளிக்கிழமை மாலை ராத் அங்கிள் வீட்டிற்குச் சென்று டானுடன் விளையாடலானேன்.  மேலும் ராத் அங்கிளுக்குப் புத்தகம் படித்துக் காட்டுவேன்.  அவரும் எனக்குப் பல கதைகள் சொல்வார்.  வெள்ளிக் கிழமை டானுடனும் ராத் அங்கிளுடனும் செலவழிக்கும் நேரம் எங்கள் மூவருக்குமே மிக நிறைவு தருவதாக இருந்தது.  இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் ராத் அங்கிள் சொர்கத்திற்குப் போய்விட்டார்.  டான் எங்கள் வீட்டிற்குத் திரும்பவும் வந்துவிட்டான்.  ராத் அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிய நானும் டானும் உதவியது குறித்து அனைவருக்கும் மகிழ்ச்சி; எனக்கும் திருப்தி.

(இந்த உண்மை சம்பவம் A second chicken soup for the women's soul என்ற westland books pvt ltd பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.  இது போன்ற பல நெஞ்சைத்தொடும் சம்பவங்கள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் அம்மா/மனைவி/சகோதரிக்கு மிகச் சிறந்த பரிசாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன்)

(எங்கள் வீட்டு christmas tree)


                 wish you all  merry christmas. கிருஸ்மஸ் பண்டிகை மற்றவர்களுடன் பகிர்ந்து அளிப்பதை, ஈவதைக் குறிக்கும் பண்டிகை. க்ருஸ்மசில் மட்டுமன்றி எல்லா நாட்களிலும் நம்மால் முடிந்தவரை நேரம், பணம், பொருள், அன்பை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்போம்.
(பதிவின் தொடக்கத்தில் உள்ள படம் உதவி கூகிள்)

 

Wednesday 22 December 2010

மாதங்களில் அவள் மார்கழி

              சும்மாவா சொன்னார் கவியரசு 'மாதங்களில் அவள் மார்கழி' என்று?!!.  கொளுத்தும்  வெயிலிலிருந்தும், கொட்டும் வியர்வையிலிருந்தும் நம் சென்னை வாசிகளுக்குக் கொஞ்சம் விடிவு வருவது மார்கழி மாதத்தில்தானே.  சிறுவர் சிறுமியர் கூட குளித்துவிட்டுதான் கோவில் போவது வழக்கம்.  இதற்கு கொஞ்சம் விதிவிலக்கு மார்கழி மாதக் காலை பஜனைதானே!!.  காலையில் பல் துலக்கியவுடன்'எம்பாவாய் எம்பாவாய்' என்று கூட்டத்தோடு கோவிந்தா போட்டுவிட்டு மார்கழித் திங்களில் தானே 'மடி நிறைய பொங்கலோடு' என்ஜாய் பண்ணலாம்!!

              நான் பள்ளி போகும் பருவத்தில் மார்கழி மாதத்தை மிகவும் ரசித்திருக்கிறேன்.  என் அம்மா மிக நன்றாகப் பாடுவார்.  அதுவும் 'மார்கழி திங்கள்...' என்று திருப்பாவையை அவர் பாடும் அழகு எந்த கும்பகர்ணனையும் எழ வைக்கும்.  அரையாண்டு தேர்வுக்குப் படிக்கக் காலையில் எழும் நாங்கள் அம்மாவின் பாட்டால் கவரப்பட்டு திருப்பாவையில் தொடங்கி கிருஷ்ண பஜன் வரை அம்மாவிற்குப் பின்பாட்டு பாடுவதில் ஐக்கியமாகிவிடுவோம். இப்படியே காலைப் பொழுது படிக்காமல் போனதால் கிருஷ்ணர்தான் தேர்வில் நல்ல மார்க் வாங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணையிருப்பார் என்று நினைக்கிறேன்.

               மார்கழி பனிக்கு மஃப்ளர் கட்டிக் கொண்டு வாசல் முழுவதும் கோலம் போட்டதும் இனிமையான நினைவுதான்.  என் மூத்த சகோதரி கோலம் போட்டால் அதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். இன்றைய அடுக்குமாடி சென்னையில் மார்கழியில் கோலம் போடுகிறார்களா தெரியவில்லை.

              எங்கள் பம்மல் ஸத்சங்கத்தில் திருப்பாவை/திருவெம்பாவை சொல்லிவிட்டு நாங்கள் பொங்கல் வாங்கி சாப்பிடுவோம்.  அந்தக் குளிருக்கு சுடச்சுட பொங்கல் எவ்வளவு சுவை!! ஆவணி அவிட்டத்திற்க்குக் கூட கோவில் போக அடம்பிடிக்கும் என் அண்ணன்மார்கள் மார்கழி மாதம் காலையிலேயே ஆஜராகிவிடுவார்கள் பொங்கல் வினியோகம் செய்ய!!

             பின்வரும் தைப் பொங்கல் விருந்துக்குக் கட்டியம் கூறும் வகையில் வைகுண்ட ஏகாதசி பொங்கல், கூடாரைவல்லி சர்க்கரைப் பொங்கல் (மூட நெய் பெய்து முழங்கை வழிவார... என்ன ஒரு taste ஆண்டாளுக்கு!!), 'கறவைகள் பின் சென்று' (கூடாரைவல்லிக்கு முன் தினம் என்று நினைவு),பாடலுக்குத் தயிர்சாதம், ஹனுமத் ஜெயந்தி வடை, ஆருத்ரா தரிசனம் களி/தாளகம் என்று மார்கழி மாத விருந்து பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே ரகம். (எங்க ஆரம்பிச்சாலும் கரெக்டா சாப்பாட்டு மேட்டருக்கு வந்துவிடுவியே என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது).

             திருவாதிரை அன்று விடிகாலையில் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு நான் என் பாட்டியுடன் போவேன். அந்த அதிகாலைப் பொழுதில் மேளம் ஒலிக்க சிவனை வணங்குவது ஒரு தனி அனுபவம்.   திருவாதிரை அன்று  ஏன் களி செய்கிறார்கள் என்று என் அம்மா வேடிக்கையாக ஒரு விளக்கம் சொல்வார். 'திருவாதிரைக்கு ஒரு வாக்களி (வாக்கு அளி)' என்பதை 'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்று புரிந்து கொண்டதால் என்று.  குவைத் வந்த பின்னும் திருவாதிரை அன்று அதிகாலையிலேயே (நான் 5 மணிக்கு எழுவது திருவாதிரை மற்றும் தீபாவளி அன்று மட்டுமே) சிவனை வழிபடுவதும் ஒருவாக்களி உண்பதும் தொடர்ந்தது.  இந்த முறை காலில் அடிபட்டு சும்மா இருப்பதால் களி உண்டபின் இந்த களி விஷயத்தைக் கொஞ்சம் 'கிண்டுவோமே' என்று கூகிளில் தேடினேன்.

              திருவாதிரைக்குக் கேரளாவில் (சிவனால் எரிக்கப்பட்ட காமன் உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் வகையில்)  விரதமிருந்து திருவாதிரைக் களி (கூத்து) என்று பெண்கள் நடனமாடுவார்களாம்.  .  அதிலிருந்துதான் களி பிறந்ததோ?  சிவனின் நட்சத்திரமான ஆதிரை நட்சத்திரத்தைப் போற்றும் வகையிலும் நடனமாடுகிறார்கள் என்று சில செய்திகள் கூறுகின்றன.  'களி'க்க(நடனமாட) சோம்பல் பட்டு நம் மக்கள் களி உண்டு'களிக்க' ஆரம்பித்தார்களோ?


(படம் உபயம் : welcome2kerala.com.)

              இந்த களி பிரசாதத்திற்கு ஒரு கதையும் உண்டு.  சேந்தனாரென்ற ஒரு சிவபக்தர் சிவனடியாருக்கும் மற்றவர்களுக்கும் உணவு கொடுத்த பின்னரே உண்ணும் பழக்கம் கொண்டிருந்தாராம்.  ஒரு நாள் நல்ல மழையில் ஒரு சிவனடியார் வந்து பசிக்கு உணவு கேட்டாராம்.  விறகெல்லாம் நனைந்து ஈரமாகியிருக்க சேந்தனாரின் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் விறகை எரியவைத்து சிவனடியாரை மேலும் காக்க வைக்கக் கூடாது என்று விரைவில் ஏதாவது சமைக்க எண்ணி வெல்லத்தையும் அரிசி மாவையும் வைத்து களி செய்தாராம்.  "இதுதான் இன்று செய்ய முடிந்தது.  தயை கூர்ந்து ஏற்க வேண்டும்" என்று சிவனடியாரிடம் வேண்டிக் கொண்டார்களாம்.  அதை மகிழ்சியோடு சிவனடியார் சாப்பிட்டு சென்றவுடன் கோவிலுக்குப் போன அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.  சிவன் கோவிலில் களி சிந்தியிருக்க சிவபொருமான் வாயிலும் களி ஒட்டிக் கொண்டிருந்ததாம்.

            இந்த மார்கழி மாதத்தை செவிக்கும் (இசை விழாவின் இசை மழையில் நனைந்து) வயிற்றுக்கும் ஈந்து கொண்டாடி மகிழுங்கள்.

Monday 13 December 2010

வாடகைத் தாய்

          


             சுந்தரிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.  குவைத்திலிருந்து அவளது புருஷன் அவளுக்கு விசா அனுப்பியிருந்தான்.  பத்தாவதுகூடப் படிக்காத தனக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பா என்று அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.  எல்லாம் இந்த குழந்தை பிறந்த அதிர்ஷ்டம்தான் என்று ஒரு வயதான தன் மகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.  அவள் கணவன் குவைத்தில் கார் டிரைவராக இருக்கிறான்.  அவன் அங்கு போய் கிட்டதட்ட இரண்டு வருடங்களாகின்றன.  இப்பொழுது தானும் வெளி நாடு போவது குறித்து சுந்தரிக்குப் பெருமை  பிடிபடவில்லை.  என்ன ஒரே வருத்தம் என்றால் ஒரு வயதுதான் ஆகும் மகளை தன் தாயிடம் விட்டுவிட்டு போகவேண்டும். மகளைப் பிரியும் வருத்தம் இருந்தாலும் அவளுக்காக சம்பாதிக்கத்தானே போகிறோம் என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
 
            குவைத்தில் அவளுக்கு ஒரு நல்ல வீட்டில் வேலை கிடைத்தது.  சுந்தரிவேலை செய்யும் வீட்டு எஜமானி ஆஃபீசில் வேலை செய்வதால் அவளின் 8 மாதக் குழந்தை அபூர்வாவைப் பார்த்துக் கொள்ளும் வேலை சுந்தரிக்கு.  மகளிடம் காட்ட முடியாத அன்பை இந்தக் குழந்தையிடம் கொட்டினாள் சுந்தரி.  அந்தக் குழந்தைக்கு உணவு கொடுப்பது, விளையாடுவது என்று ஆர்வத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாள். குவைத் வந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டன.  இந்த நான்கு வருடங்களில் மகளுடன் போனில் பேசுவதும், அவளின் புகைப்படங்களைப் பார்பதும்தான் மகளுடன் அவளுக்கு இருந்த தொடர்பு. மாதாமாதம் மகளுக்காகக் கணிசமாகப் பணம் அனுப்ப முடிவதை நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொள்வாள். தன் மகளுக்காகத் தேக்கி வைத்த அன்பை அபூர்வாவிடம் காட்டி சந்தோஷப்படுவாள். அபூர்வா நடக்க ஆரம்பித்தது, பேசத் தொடங்கியது,  play school போனது, பின் பள்ளிக்குப் போனது என்று ஒவ்வொரு நிலையிலும் தன் மகளின் வளர்ச்சியை மனக் கண்ணால் கண்டு மகிழ்வாள் சுந்தரி.  அபூர்வாவும் அவளின் அம்மாவைவிட சுந்தரியிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டாள்.

            அடுத்த வாரம் ஒரு மாத விடுமுறையில் இந்தியா போவது பற்றி சுந்தரிக்கு மிகவும் ஆவலாக இருந்தது.  மகளுக்காகத் தங்கச் சங்கிலி, பொம்மைகள் என்று தன் சக்திக்கு ஏற்றவாறு வாங்கி வைத்திருந்தாள்.  அபூர்வாவின் பழைய பொம்மைகள், பிற விளையாட்டு சாமான்களை அவள் வீட்டு எஜமானி அவளுக்குக் கொடுத்திருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து தன் மகள் ஆசையோடு தன்னை முத்தமிடும் காட்சியை ஆயிரம் முறையாவது மனக் கண்ணில் கண்டு ரசித்திருப்பாள்.  அபூர்வாவை நினைத்தாலும் அவளுக்கு அழுகையாக வந்தது.  தான் ஊருக்குப் போவதை அறிந்து ஒருவாரமாக தினம் அழுவதோடு அவளிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக் கொண்டது அபூர்வா.  அபூர்வாவைச் சமாதானம் செய்வது பெரும்பாடாக ஆனது.

             சென்னை விமான நிலையத்தில் தன் தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தயக்கத்துடன் எட்டிப் பார்க்கும் மகளை இழுத்து அணைத்துக் கொண்டாள் சுந்தரி.  அவள் மகளோ அழுகையுடன் பாட்டியிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக்கொண்டாள்.  "இப்பதானே வந்திருக்கே. பழகக் கொஞ்சம் நாளாகும் அவளுக்கு" என்றார் அம்மா.  ஒரு வாரமாகியும் சுந்தரி வாங்கி வந்த பொம்மைகளுடன் விளையாடினாளே தவிர அவள் மகள் சுந்தரியிடம் நெருங்கி வரவில்லை.  எட்ட நின்று சிரிப்பது, கேட்ட கேள்விக்குப் பாட்டிக்குப் பின்னால் நின்று பதில் சொல்வது என்ற அளவிலேயே நின்றது அவர்கள் உறவு.  குலதெய்வம் கோவில், உறவினர் வீடுகள் என்று அடுத்த பத்து நாட்களும் அலைய வேண்டிவந்தது.  மகளின் பள்ளியில் (கான்வெண்ட் பள்ளி ஆயிற்றே!!) லீவு தராததால் அவளை வழக்கம்போல் அம்மாவிடம் விட்டுவிட்டு சுந்தரியும் கணவரும் ஊர் ஊராகப் பயணித்தார்கள்.  இந்த பத்து நாள் இடைவெளியில் மகள் மீண்டும் அவர்களுக்கு அந்நியப்பட்டுப் போனாள். மகள் விலகி இருப்பதைக் கண்டு கண்ணீர்விடும் சுந்தரியை 'இன்னும் பத்து நாள்தான் இருக்கு.  நீ அவளை மாற்றி அவள் மனதில் இடம் பிடிப்பதற்குள் ஊருக்குப் போகும் நாளாகிவிடும்.  பின்னர் உன்னைப் பிரியும்போது குழந்தைக் கதறி அழும்.  எப்படி அவளைச் சமாதானப் படுத்துவாய்?  அபூர்வாவே எப்படி அழுதாள் தெரியுமில்ல.  இப்ப போனால் இன்னும் ஐந்து வருசமாகும் நாம வர.  அதுவரை குழந்தையின் கண்ணீர் முகம்தான் நமக்கு நினைவுக்கு வரும்.  அதனால எட்டி நின்றே அவளை ரசி.  இப்ப என்ன, அவள் உன் அம்மாகிட்டதானே இருக்கா.  அடுத்த முறை நாம் வரும்போது அவள் விவரம் தெரிந்த பெரிய பொண்ணா இருப்பா.  அப்ப உன்னைவிட்டுப் பிரியாம இருப்பா.  கவலைப் படாதே"  என்று அவள் கணவன் சமாதானப்படுத்தினான்.  கணவனின் வார்த்தைகளின் உண்மை அவளைத் தாக்கக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். தன்னை நினைத்து அழுதுகொண்டிருக்கும் அபூர்வாவிற்குத் தன்னால் இயன்ற பரிசுப் பொருட்களை வாங்க கடைக்குப் போகத் தயாரானாள்.

 'விலைமீது விலை வைத்து கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா...." என்று ரஜினி டிவியில் உருகிப் பாடிக் கொண்டிருந்தார்.


 

Thursday 9 December 2010

முக்காலின் முக்காபுலா

              காலை வேளையில் கடலைப் போட்டுக் கொண்டே கொஞ்சம் உடற்பயிற்சியும் செய்ய நானும் என் தோழியும் அருகே உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்வோம்.  நிறைய அரட்டையோடு கொஞ்சம் treadmill, கொஞ்சம் cycling, கொஞ்சம் rowing செய்வோம். wii-யில் கற்றுக் கொண்ட aerobics பயிற்சியையும் கொஞ்சம் செய்வோம்.  அன்றும் அப்படித்தான் ஏரோபிக்ஸ் செய்து கொண்டிருந்தேன்.


            

                 மூன்று aerobics step stoolsஐ மூன்றடி இடைவெளிவிட்டு வைத்து பாண்டி விளையாடுவது போல் தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தேன். வேறு ஒரு பெண் ஒரு ட்ரைய்னரிடம் கற்றுக் கொள்வதைப் பார்த்து நான் பழகியது இந்த பயிற்சி.  குரு தக்ஷிணை தராமல் பயின்றதல்லாவா, தண்டனை உடனே கிடைத்தது.  முதல் இரண்டு ஸ்டூலைத் தாண்டி மூன்றாவதைத் தாண்ட முயலும்போது கால் பிசகித் தடாலென்று விழுந்தேன்.  கொஞ்சம் வலி; ஆனால் வீக்கம் ஒன்றும் இல்லை.

             வீட்டிற்கு வந்ததும் தைலம் தடவி வழக்கமான வீட்டு வேலைகளைச் செய்தேன்.  வலி ஒன்றும் தெரியவில்லை.  பகல் ஒரு மணிக்கு என் மகளை அழைத்துவர பள்ளிக்குச் செல்லும் முன் ஒரு முறை தைலம் தடவலாமென்று பாதத்தைப் பார்த்தேன்.  இதுதான் நான் செய்த தவறோ?  அதுவரை வலியே தெரியாத எனக்கு, காலில் (ankle-ல்) மூட்டு டென்னிஸ் பந்துபோல் வீங்கியிருப்பதைப் பார்த்ததும் எப்படித்தான் அப்படி வலிக்கத் தொடங்கியதோ!
அதுவரை கூலாக நடந்து கொண்டிருந்தவள் நொண்டுவதற்கே சிரமப்பட ஆரம்பித்தேன். ortho doctorஐப் பார்க்க அடித்து பிடித்து ஓடினோம்.  நல்ல வேளை, எலும்பு முறிவு ஒன்றும் இல்லை என்றார்.  நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் "ligaments tare என்பதால் மாவுக்கட்டு போடவேண்டும். இரண்டு வாரங்களுக்கு அடிபட்டக் காலை தரையில் ஊன்றக் கூடாது" என்றார்.  ஐயயோ, எப்படி நடப்பது என்று கேட்டால், "கவலை வேண்டாம்.  ஒரு காலுக்கு பதில் இரு (ஊன்று)கால்களைத் தருகிறேன்" என்றார்.

          


               மூன்று காலில் நடப்பது முதலில் கடினமாக இருந்தது.  முதலில் இரு ஊன்று கோல்களையும் முன்னால் நகர்த்தி பின்னர் என் ஒரே காலால் குதித்து முன்னேற வேண்டும்.  இந்த sequence சரியாக நிதானமாக செய்தால் பிரச்சினை இல்லை.  நான் இரு ஊன்று கோல்களையும் தூக்கும்போதே என் ஒரே காலையும் தூக்குவது, அல்லது ஊன்றுகோலைத் தவறவிடுவது என்று ஏதோ தவறுகள் செய்து இப்பொழுதுதான் சரியாக நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.  ஒருவழியாக 'முக்காலும்' உணர்ந்த ஞானியாகிவிட்டேன்!!!.

             இரண்டு கால்களில் ஓரிடத்தில் நிற்காமல் ஏதாவது செய்துகொண்டே (அல்லது செய்வதுபோல் நடித்துக் கொண்டே) இருந்த நான் மூன்று காலிருந்தும் கணவர் மற்றும் மகளின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து
மூலையில் உட்காரும் நிலமை.  சமையல் மற்றும் உதவிக்கு ஒரு பெண்மணி வருகிறார்.  அதனால் சும்மாயிருப்பதுதான் எனக்கிருக்கும் ஓரே வேலை.

             இந்த முக்காலின் முக்காபுலாவால் என்ன நன்மைகள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

             இதுவரை நான் 5-6 பதிவர்களின் வலைத் தளங்களையே ரெகுலராகப் படிப்பேன்.  இப்பொழுது நேரம் அதிகம் கிடைப்பதால் தமிழ்மணத்தில் போய் எல்லா புதிய இடுகைகளையும் ஒரு glance பார்க்க முடிகிறது. என் கணவர் வாங்கிக் குவித்திருக்கும் தன்னம்பிக்கைப் புத்தகங்கள் சிலவற்றைப் படிக்கிறேன்.  என் மகளோடு விளையாட்டு (உட்கார்ந்த இடத்தில்தான்), கதைகள் படித்துக் காட்டுவது என்று அதிக நேரம் செலவழிக்கிறேன். "நான் ஹெல்ப் பண்றேன்மா" என்று ஓடிவரும் அவள் அன்பில் சந்தோஷப்படுகிறேன். அவள் மட்டுமன்றி என் கணவர், பக்கத்துவீட்டுத் தோழி, மேல் வீட்டு மாமி, என் வீட்டில் வேலை செய்பவர் என்று பலரின் அன்பு உள்ளங்களை உணர நல்ல வாய்ப்பாகவும் இது அமைந்தது.

            இப்படி வேலையில்லாமல் உட்கார்ந்திருப்பதில் குறைகளும் உண்டு.  முன்பெல்லாம் தேர்வு நேரத்தில் மட்டும்தான் என் மகளைப் படிக்கவைப்பேன்.  அதுவும் அவளே படித்தபின் ஒரு கேள்வித்தாள் கொடுப்பதுதான் என் வேலை. இப்பொழுதோ எனக்குப் பொழுது போகாததால் crossword பண்ணு, maths puzzle பண்ணு என்று அவளை torture பண்ணிக் கொண்டிருக்கிறேன்.  உருப்படாத சீரியலைப் பார்க்கவும் பிடிக்காததால் டிவி சேனலை மாற்றிக் கொண்டேயிருப்பது ஒரு habbit ஆக மாறிவிடுமோ என்று கவலையாயிருக்கிறது.  இதெல்லாவற்றையும்விட வேலை எதுவும் செய்யாமலிருப்பதால் நான் கஷ்டப்பட்டுக் குறைத்த 2 kg கொழுப்பும் வட்டியும் முதலுமாக என் உடலில் சேமிப்பாகிவிடுமோ என்ற கவலைதான் பிரதான கவலையாக இருக்கு. முக்காலும் உணர்ந்த அந்தக் கடவுள்தான் இந்த முக்காலிலிருந்து சீக்கிரம் விடுதலை தரவேண்டும்!!.