Thursday 28 January 2010

LUNCH BOX

                   நினைத்துப் பார்த்தால் இந்த lunch box ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு வில்லனாகவே இருந்து வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.  பள்ளி, கல்லூரிக் காலங்களில் lunch box-ல் எது எடுத்துக் கொண்டு போனாலும் அது ஆறி அவலாகிப் (அவலமாகி) போய்விடும். பள்ளி நாட்களில் மிகவும் கொடுமை. தயிர் சாதம், ரசம் சாதம் கூடக் கொண்டு போயிருக்கிறேன். சில நேரங்களில் excess ரசமோ தயிரோ கொட்டி என் நோட்டு புத்தகங்களெல்லாம் நனைந்து போயிருக்கின்றன.   Wet-grinder வழக்கத்திற்கு வந்தபின் நிலமை கொஞ்சம் பரவாயில்லை.  என் அம்மாவும் வேலைக்குப் போனபடியால் எங்கள் வீட்டில் ஞாயிறன்று இட்லி மாவு அரைக்கப்பட்டு இட்லி, தோசை, தோசை , இட்லி என்று மாறி மாறி lunch box-ல் வைக்கப்படும். சில நாட்கள் நான் பருப்பு சாதம் கூடக் கொண்டு போயிருக்கிறேன். என் தோழி இத்தனை வருடங்கள் கழித்து சமீபத்தில் இமெயிலில் இதைப் பற்றி எழுதியிருந்தாளென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் சிறப்பை.


                கல்லூரியோடு இந்த பிரச்சினை முடிந்தது என்று நினைத்தேன்.
ம் ஹூம்!!!. Post doctorate செய்ய கனடா சென்றபோது இந்த பிரச்சினையும் என்னோடு கூடவே வந்தது. முதல் நாள் எனக்குத் தெரிந்த வகையில் லெமன் ரைஸ் (அதுதான் என் முதல் சமையல் அனுபவம்) செய்து stainless steel டப்பாவில் எடுத்துக்கொண்டு போனேன். எங்கள் லேபில் எல்லோரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். என்னைத் தவிர எல்லோருமே கனடாவைச் சேர்ந்தவர்கள். அவர்களெல்லாம் அழகாக ஒரு food saver -ல் (டப்பர் வேர் என்று மெட்ராஸில் சொல்கிறார்கள்) கொஞ்சம் பிரெட்டும், நிறைய பழங்களும் கொண்டு வந்திருந்தார்கள். எனக்கு ஒரு மாதிரி கூச்சமாக ஆகிவிட்டது.  அன்று மாலையே கடைக்குச் சென்று ஒரு டப்பாவை வாங்கிக் கொண்டேன். அவர்களைப் போலவே நிறைய பழங்களும் கொஞ்சம் சாதமும் சாப்பிடப் பழகினேன்!!!.

                  இப்போது குழந்தை பிறந்த பின்பும் அந்த lunch box பிரச்சினை விடாமல் துரத்துகிறது. முதலில் என் மகள் கொண்டு போன lunch -ஐத் தொடாமலே அப்படியே கொண்டு வருவாள். சாம, தான பேத தண்ட முறைகளைப் பயன்படுத்தி எப்படியோ சாப்பிடப் பழக்கினேன். பின்னர், ஒவ்வொரு நாளும் விதவிதமாக lunch தரவேண்டும் என்றாள். (இரண்டு நாள் இட்லி, இரண்டு நாள் தோசை என்றெல்லாம் பஜனை பண்ண முடியாது!!!). எப்படியோ ஐந்து நாட்களுக்கும் விதவிதமாக கொடுக்கப் பழகினேன். இப்பொழுது "அம்மா! break பத்து நிமிஷம்தான். எனக்கு விளையாட வேண்டும். அதனால் கையில் வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டே சாப்பிடுவது மாதிரி lunch வை" என்கிறாள். எத்தனை யோசித்தாலும் தோசை, பிரெட், சப்பாத்தியைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. தினமும் பீட்சா, கேக் என்று தரவும் மனமில்லை. என்ன செய்ய?!!! இந்த lunch box பிரச்சினை என்னை வில்லனைப் போல் விடாமல் துரத்துகிறது!!!.

Sunday 17 January 2010

Birthday party

                               நான் சிறுமியாக இருக்கும்போது பிறந்த நாளென்றால் புது உடையும் கோவிலுக்குப் போவதும்தான் நினைவுக்கு வரும். என் மகளுக்கோ பிறந்த நாளென்றால் party-யும், gifts தான் நினைவுக்கு வருகிறது. காலத்திற்கேற்ப கொண்டாட்டங்களையும் மாற்றிக்கொண்டோம்.


                             மெழுகுவத்தியை அணைத்து கேக் வெட்டுவது எல்லோரும் செய்யும் ஒரு விஷயமாகிவிட்டது. சிலர் (பிறந்த நாள் கொண்டாடும்) தன் குழந்தையின் ஃபோட்டோவை கேக்கில் வரைந்து அதை அந்தக் குழந்தையைவிட்டே கத்தியால் cut செய்யச் சொல்கிறார்கள். நீடூழி வாழ்க என்று வாழ்த்தவேண்டிய நேரத்தில் இப்படி செய்யலாமா?

                               எங்கள் நண்பரின் மகனுக்கு முதலாம் ஆண்டு நிறைவின்போது மிக்க மகிழ்ச்சியோடு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விழா நடக்கும் இடத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஒரு நிபுணரிடம் ஒப்படைத்திருந்தார் எங்கள் நண்பர். அவர் அழகு செய்வதில் நிபுணரோ இல்லையோ, அவருக்கு நமது கலாச்சாரத்தைப் பற்றி கொஞ்சமும் தெரியவில்லை. பார்ட்டி ஹாலின் நுழைவாயிலில் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தையின் ஃபோட்டோவை வைத்து அதற்கு மாலை போட்டு அதற்கு முன் ஒரு அகல் விளக்கையும் ஏற்றி வைத்திருந்தார். இவையெல்லாம் வேறு எதற்கோ செய்ய வேண்டியவை அல்லவா? அதைப் பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  பகட்டிற்காக

 நம் பாரம்பரிய வழக்கங்களை மறந்தது மட்டுமில்லாமல் முற்றிலும் ஆகாததாகக் கருதப்படும் விஷயங்களை செய்யுமளவிற்குக் கீழிறங்க வேண்டாமே!

                                 சென்ற வாரம் என் தோழியின் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்.  நம் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் கேக்கிற்கு முன் அழகாக மூன்று (அவரின் மகனுக்கு அது மூன்றாம் பிறந்த நாள்) அகல்  விளக்குகளை ஏற்றி பின்னர் கேக்கை வெட்டினார்கள். இவர்களைப் போல் மேலை நாட்டு வழக்கங்களில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு நம் பாரம்பரியத்திற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் விழாக்களைக் கொண்டாடலாமே!.

Sunday 10 January 2010

அந்த ஏழு நாட்கள்

               
                  யோகா, aerobics, walking, jogging என்று எல்லாம் முயற்சி செய்தும் size zero வேண்டாம், அட,கொஞ்சமாவது இளைக்குமா என்றால் ஒன்றும் பயன் தரவில்லை. வழக்கம்போல் இணையத்தில் வலைபோட்டு தேடியதில் கிட்டியது sevendays miracle diet. சரி, முயன்றுதான் பார்ப்போமே என்று ஆரம்பித்தேன்.

                   முதல் நாள் பழங்கள் (வாழைப் பழம் தவிர) மட்டுமே உண்ண வேண்டும். காலையில் சுறுசுறுப்பாக ஆரம்பித்த diet மாலைவரை தாக்குப் பிடித்ததே பெரிய சாதனையாக இருந்தது. எப்படியோ அன்றைய பொழுது கழிந்தது.

                    இரண்டாம் நாள் வேக வைத்த அல்லது பச்சை காய்கறிகள் மட்டும் சாப்பிடலாம். இருந்த பசிக்கு வேக வைக்கவெல்லாம் பொறுக்காமல் அப்படியே கடித்து வயிறைக் கொஞ்சம் சமாதானப்படுத்தினேன். பின்னர்தான் நாக்கு என்னையும் கொஞ்சம் கவனி என்று ஈன ஸ்வரத்தில் சொல்வது கேட்டது. அடுத்த வேளைக்கு கொஞ்சம் உப்பு போட்டு காய்கறிகளை வேக வைத்து சாப்பிட்டேன்.

                    மூன்றாம் நாள் பழம் மற்றும் காய்கறிகள் மட்டும் உண்ண வேண்டும். நான் கடையில் போய் கண்ணில் பட்ட காய் கனிகளையெல்லாம் அள்ளிய வேகத்தைப் பார்த்து கடைக்காரர் 'நான் வேணுமானால் கோடவுனிலிருந்து கூடையோடு அனுப்பவா அம்மா?' என்றார். அன்றைக்கும் உப்பு சப்பில்லாமல் உணவு கொடுத்ததால் என் நாக்கும் வயிறும் பெரும் போராட்டம் செய்யத் தொடங்கின.

                      நான்காம் நாள் '(கர்ணன் படப் பாடலைப் போல்) என்ன கொடுப்பாள், ஏது கொடுப்பாள்' என்றிவர்கள் (நாக்கும் வயிறும்) எண்ணும் முன்னே பழம் கொடுத்தேன், வாழைப் பழம் கொடுத்தேன் -- போதாது போதாது என்றதால் இன்னும் கொடுத்தேன் -- இவையும் குறைவென்றதால் பின்னொன்றும் கொடுத்தேன். (இன்றைக்கு   menu - 8 வாழைப் பழங்களும் பாலும் ). தயா நிதியே என்று வாயும் வயிறும் வாழ்த்தவில்லை என்றாலும் மறு நாள் காலைகடன் கஷ்டமில்லாமல் கழிந்தது.

                  ஐந்தாம் நாள் என்ன என்று மெனுவை ஆவலுடன் பார்த்தேன். ஒரு கப் சாதமும், 6 தக்காளியுமாம். எப்படியோ நான்கு நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் அரிசியைக் கண்டதும் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.

                   இந்த ஐந்து நாட்களுக்குள் வயிறு அனைத்தையும் தாங்கும் பக்குவத்துடன் ஒருமாதிரி தவ நிலைக்கே போய்விட்டது. அதனாலோ இல்லை சக்தியில்லாததாலோ ஆறாம் நாள் மெனுவைப் பார்த்ததும் (காய்கறிகள் மட்டுமே உண்ண வேண்டும்) வயிறும் நாக்கும் பெரிதாக போராட்டத்தில் இறங்கவில்லை.

                   ஆறாம் நாளன்று நானே முகம் வெளுத்து, கண்கள் பஞ்சடைந்து காற்றில் பறப்பது போல்தான் இருந்தேன். (டைரக்டர் பாலா பார்த்திருந்தால் அடுத்த படத்திற்கு புக் பண்ணியிருப்பார்!!!).

                   ஏழாம் நாள் ஒரு கப் சாதம் மற்றும் ஒரு டம்ளர் ஜூசும் மட்டும் குடித்து எப்படியோ அன்றைய பொழுதையும் கழித்தேன்.

                   அப்பாடா, விடுதலை, விடுதலை விடுதலை என்று சந்தோஷமாகக் குதித்தபடியே அடுத்த நாள் எழுந்தேன். இருந்த சக்தி அனைத்தயும் சேர்த்து, சூப்பராக வெங்காய சாம்பார், மைசூர் ரசம், சேப்பங்கிழங்கு கறியென்று நாக்கிற்குச் சுவையான விருந்து சமைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டேன். தொண்டனுக்கும் உண்டான உண்ட களைப்பில் சுகமாக தூங்கினேன்.

                   விழித்ததும் மகளும் கணவரும், என்ன எத்தனை கிலோ இளைத்தாய்? என்று கேட்டவுடன்தான் எடை பார்க்கும் நினைவே வந்தது. அதற்குள் நாக்கும் வயிறும் இன்னொரு ஏழு நாள் தண்டனைக்குத் தயாராக இல்லை என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தன. எண் ஜான் உடம்பிற்கு வயிறே பிரதானம் என்ற முதுமொழிக்கு மதிப்பளித்து என் நாக்கிற்கும் வயிற்றுக்கும் அடிபணிந்து 'இனிமேல் எடை பார்க்கும் கருவி பக்கமே போவதில்லை' என்று சபதம் செய்தேன்.

Wednesday 6 January 2010

good samaritans

                             2009-ம் வருட முடிவில் பல பத்திரிகைகளும், இணையப் பதிவர்களும் 2009-ம் வருடத்திற்கான --- விருது என்று பலருக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன. நானும் எண்ணச்சிதறல் சார்பில் மூன்று பேருக்கு 2009-ம் வருடத்திற்கான good samaritans விருதை வழங்கலாமென்றிருக்கிறேன்.

                              பிரபலமானவர்கள் சின்ன நல்ல காரியம் செய்தாலும் அதிக publicity பெறுகிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பாருங்கள், தீவிரவாதத்தை ஒழிக்க நினைத்ததற்கே நொபெல் பரிசெல்லாம் பெற்றார். அப்படியிருக்க உங்களையும் என்னையும் போல் சதாரணமானவர்கள் கூட கொஞ்சம் முயன்றால் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என்று உணர்த்திய கீழ்காணும் மூன்று பேருக்குத்தான் அந்த good samaritans விருது.

1. ஆராதனா - தன் தோழி ருசிக்காவின் வாழ்க்கையைச் சீர்குலைத்து அவளின் தற்கொலைக்குக் காரணமான ராதோருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தால்தான் ஓய்வேன் என்று 19 வருடங்களாக விடாமல் போராடிய கொள்கை பிடிப்பு, சமூக அக்கறை, அதிகாரத்திற்கு அடிபணியாத நெஞ்சுரம் என்ற குணங்களால் No.1 இடத்தைப் பிடிக்கிறார்.

2. சுகந்தி டீச்சர் - 'good morninig' என்று greet செய்யும் குழந்தைக்கு பதில் வணக்கம் சொல்லாது, 'சரி, சரி போய் உட்கார்" என்று எரிந்து விழும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ஓட்டுனரின் கவனக்குறைவால் van-னோடு குளத்தில் விழுந்த பல குழந்தைகளைக் காப்பாற்றியதோடு, அந்த முயற்சியிலேயே இரு குழந்தைகளைப் பிடித்த வண்ணம் உயிர் இழந்த சுகந்தி டீச்சரின் கடமை உணர்வு என்னை மிக அதிகமாக பாதித்தது.

3. கனகசுப்பிரமணியன் (bus conductor): கூட்டத்தைப் பார்த்தாலே கடுப்பாகும், சில்லறை பாக்கியைக் கேட்டால் கூட சலித்துக் கொள்ளும் நடத்துனர்கள்தான் நாம் சென்னையில் அதிகம் பார்ப்பது. குன்னூரில் நடத்துனராக வேலை பார்க்கும் இவரைப் பற்றி இட்லி வடை ப்ளாகில் படித்ததும் மிகவும் வியந்து போனேன். இட்லி வடை blog-ல் அவரைப்பற்றி படித்த செய்தி இதோ:

பயணம் தொடங்கும் முன் தினம் ஒரு திருக்குறளும் அதற்குப் பொருளும் சொல்கிறார். பஸ்சில் பயணிக்கும் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாகவும் கொடுக்கிறார்.பஸ்சில் வரும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை கருத்துகளை தெரிவிக்கும் கனக சுப்ரமணியம், ஏழைக்குழந்தைகளுக்கு, இலவச சீருடையும் வாங்கித் தருகிறார். தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவருக்குப் பயணிகளுக்கு மத்தியில் சந்தன மாலை அணிவித்து கவுரவிக்கிறார்."செந்தமிழ்' அறக்கட்டளையை நடத்தும் கனகு, சிறைத்துறையின் அனுமதியோடு, கைதிகளுக்குப் போட்டிகளை நடத்தி பரிசும் வழங்குகிறார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து கோவையில் இவர் நடத்தும் "சாரோன்' முதியோர் இல்லத்தில் இப்போது இருக்கும் ஆதரவற்ற முதியோர் எண்ணிக்கை 15.எச்.ஐ.வி.,யால் பாதித் தோருக்கு, கோவை "சினேகம்' அறக்கட்டளையுடன் இணைந்து, இலவச மருந்து, சத்து மாவு வழங்கி வருகிறார்.

                        இந்த மூவரைப் போல் நம்மால் முடிந்த அளவு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதைப் புத்தாண்டு உறுதி மொழியாக கொள்வோம்.