Friday 31 December 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்



பதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
(படம் :  வைபவி)

Friday 24 December 2010

பகிர்தலும் இன்பமே

            
             நான் என் நாய் டானுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.  13 வயது சிறுமியான எனக்கு டான்தான் நல்ல நண்பன்.  நான் சைக்கிள் ஓட்டி விளையாடும்போதும், ஸ்கேட்டிங் செய்யும்போதும் என்னுடன் ஓடி வந்து விளையாடுவான்.  எனக்கு அக்கா இருந்த போதும் வயது வித்தியாசம் காரணமாக அதிகம் விளையாடமாட்டாள்.  எங்கள் அக்கம்பக்கத்தில் என் வயது சிறுமிகளும் இல்லை.  எனக்கு டான்தான் சிறந்த தோழன்.

             என்றும்போல் அவனுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து அம்மாவுடன் டின்னர் ரெடி செய்ய உதவிக்கொண்டிருந்தேன்.  உள்ளே வந்த அப்பா என்னை அழைத்து, "Mr.Roth-க்கு மிகவும் உடல் நலம் சரியில்லை.  உனக்கே தெரியும் அவர் வீல்சேரில்தான் நகர்கிறார்.  கண்பார்வையும் சரியாக இல்லை. அவரின் மகனும் மகளும் வேலைக்குச் செல்வதால் பகல் நேரங்களில் மிகவும் தனிமையாக உணர்கிறார். அவருக்கு துணையாக ஒரு நாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்" என்றார்.  "ஓ! கடையில் வாங்கிக்கலாமே அப்பா.  நிறைய கடைகளில் கிடைக்கின்றனவே" என்று நான் ஒன்றும் புரியாதது போல் பதில் சொன்னேன். " ஏற்கனவே அவரின் ஆஸ்பத்திரி செலவு அதிகம்.  மேலும் சில மாதங்களே அவர் இருப்பார் என்று டாக்டர் சொல்கிறார்...." என்று நீட்டினார் அப்பா.  "அப்பா, டான் தான் எனக்கிருக்கும் ஒரே விளையாட்டுத் துணை.  அவனை என்னால் பிரிய முடியாது" என்று சொல்லிவிட்டு என் அறைக்கு அழுதுகொண்டே ஓடிவிட்டேன்.

              ஆனாலும் என் மனசாட்சி என்னை விடவில்லை.  'உன்னைவிட அதிகத் தனிமையில் வாடுவது Mr.Rothதான்.  டான் அவருக்கு எல்லா வகையிலும் துணையாக இருப்பான்.  இப்பொழுது சுயநலமாக இருந்துவிட்டு ராத்தின் மறைவுக்குப் பின் அழுது என்ன பயன்' என்று என்னைக் குடைந்தெடுத்தது.  ஒரு தீர்மானத்துடன் அப்பாவிடம்" அப்பா, இப்பவே வந்து அவர் மகனை டானைக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லுங்கள்.  நாளைக் காலை என் மனம் மாறினாலும் மாறிவிடும்" என்று அழுதுகொண்டே சொன்னேன்.  அப்பா என் கண்ணீரைத் துடைத்து முத்தமிட்டு நன்றி சொன்னார்.

               டான் என்னைவிட்டு பிரிந்து இன்றோடு மூன்று வாரம் ஆகிறது.  மாலை வேளைகளின் அவனில்லாமல் மிகவும் தனிமையாக உணர்கிறேன்.  எனக்கு சிறந்த நண்பன் மட்டுமில்லாமல் என்மீது வேறு யாரையும்விட அதிக அன்பைப் பொழிவது டான்தான். அவனும் நானில்லாமல் எப்படி தவிக்கிறானோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது எங்கிருந்தோ நான்கு கால் பாய்ச்சலில் ஓடிவந்த டான் என் மீது விழுந்து புரண்டது.  மிக்க அன்போடு என் முகம், கை என்று நக்கியது.  மூச்சு வாங்க பாய்ந்து வந்த டானுக்கு உடனே தண்ணீர் கொடுத்தேன்.  இடையிடையே என்னை நக்கி அன்பைத் தெரிவித்த வண்ணம் தண்ணீரை ஓரே மூச்சில் குடித்தான் டான்.  நானும் அவனைத் தடவிக் கொடுத்து என் அன்பை வெளிப்படுத்தினேன்.

              கால்மணி நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வந்த Mr.Roth-ன் மகன் டானைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.  "என்னால் நம்பவே முடியவில்லை.  நாங்கள் வெளியில் செல்லும்போது டான் மதிலேறி குதித்து அடிபட்டுக் கொள்ளாமல் இருக்க அவனைச் சங்கிலியால் கட்டுவோம். இன்று மதியம் என் அப்பாவுடன் டான் பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.  ஏதோ மறதியில் டானைக் கட்டிப் போடாமல் நாங்கள் கடைக்குச் சென்றுவிட்டோம்.  இந்த சமயத்தைச் சரியாகப் பயன்படுத்தி டான் மதிலைத் தாண்டிக் குதித்து உங்கள் மகளைப் பார்க்க ஓடிவந்திருக்கிறான்.  என் அப்பா ஃபோன் செய்யவும் உடனே உங்களைப் பார்க்க வந்தேன்.   எப்படி உங்கள் வீட்டை நோக்கிச் சரியாக இவ்வளவு தூரம் ஓடிவந்திருக்கிறதே! unbelievable!! டானுக்கும் உங்கள் மகளுக்கும் இடையேயுள்ள அன்பை இப்பொழுது நான் உணர்ந்துகொண்டேன்" என்று என் அப்பாவிடம் சொன்னார்.  நானும் டானும் ஓடி விளையாடத் தொடங்கினோம்.

               இதற்குப் பிறகும் டானை இரவல் கேட்க ராத்தின் மகனுக்கோ என் அப்பாவிற்கோ மனமில்லை.  ஆனால் ராத்தின் வயதான அப்பாவைத் தனிமையில் தவிக்கவிட எனக்கு மனம் வரவில்லை.  அதனால் அவரின் மகனிடம் "uncle! நீங்கள் டானைக் கூட்டிக்கொண்டு போங்க.  ஆனால் வாரத்திற்கு ஒருமுறை நான் உங்கள் வீட்டிற்கு வர என்னை அனுமதிக்க வேண்டும்.  என்னை மீண்டும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருந்தால் டானும் ஓடிவரமாட்டான்" என்றேன்.  எனக்கு நன்றி கூறிவிட்டு டானுடன் புறப்பட்டார் அந்த அங்கிள்.  மிகப் பெருமையோடு என்னை அணைத்துக்கொண்டார் என் தந்தை.

               இதற்குப் பின் வராவாரம் வெள்ளிக்கிழமை மாலை ராத் அங்கிள் வீட்டிற்குச் சென்று டானுடன் விளையாடலானேன்.  மேலும் ராத் அங்கிளுக்குப் புத்தகம் படித்துக் காட்டுவேன்.  அவரும் எனக்குப் பல கதைகள் சொல்வார்.  வெள்ளிக் கிழமை டானுடனும் ராத் அங்கிளுடனும் செலவழிக்கும் நேரம் எங்கள் மூவருக்குமே மிக நிறைவு தருவதாக இருந்தது.  இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் ராத் அங்கிள் சொர்கத்திற்குப் போய்விட்டார்.  டான் எங்கள் வீட்டிற்குத் திரும்பவும் வந்துவிட்டான்.  ராத் அவர்களின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிய நானும் டானும் உதவியது குறித்து அனைவருக்கும் மகிழ்ச்சி; எனக்கும் திருப்தி.

(இந்த உண்மை சம்பவம் A second chicken soup for the women's soul என்ற westland books pvt ltd பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.  இது போன்ற பல நெஞ்சைத்தொடும் சம்பவங்கள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. உங்கள் அம்மா/மனைவி/சகோதரிக்கு மிகச் சிறந்த பரிசாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறேன்)

(எங்கள் வீட்டு christmas tree)


                 wish you all  merry christmas. கிருஸ்மஸ் பண்டிகை மற்றவர்களுடன் பகிர்ந்து அளிப்பதை, ஈவதைக் குறிக்கும் பண்டிகை. க்ருஸ்மசில் மட்டுமன்றி எல்லா நாட்களிலும் நம்மால் முடிந்தவரை நேரம், பணம், பொருள், அன்பை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்போம்.
(பதிவின் தொடக்கத்தில் உள்ள படம் உதவி கூகிள்)

 

Wednesday 22 December 2010

மாதங்களில் அவள் மார்கழி

              சும்மாவா சொன்னார் கவியரசு 'மாதங்களில் அவள் மார்கழி' என்று?!!.  கொளுத்தும்  வெயிலிலிருந்தும், கொட்டும் வியர்வையிலிருந்தும் நம் சென்னை வாசிகளுக்குக் கொஞ்சம் விடிவு வருவது மார்கழி மாதத்தில்தானே.  சிறுவர் சிறுமியர் கூட குளித்துவிட்டுதான் கோவில் போவது வழக்கம்.  இதற்கு கொஞ்சம் விதிவிலக்கு மார்கழி மாதக் காலை பஜனைதானே!!.  காலையில் பல் துலக்கியவுடன்'எம்பாவாய் எம்பாவாய்' என்று கூட்டத்தோடு கோவிந்தா போட்டுவிட்டு மார்கழித் திங்களில் தானே 'மடி நிறைய பொங்கலோடு' என்ஜாய் பண்ணலாம்!!

              நான் பள்ளி போகும் பருவத்தில் மார்கழி மாதத்தை மிகவும் ரசித்திருக்கிறேன்.  என் அம்மா மிக நன்றாகப் பாடுவார்.  அதுவும் 'மார்கழி திங்கள்...' என்று திருப்பாவையை அவர் பாடும் அழகு எந்த கும்பகர்ணனையும் எழ வைக்கும்.  அரையாண்டு தேர்வுக்குப் படிக்கக் காலையில் எழும் நாங்கள் அம்மாவின் பாட்டால் கவரப்பட்டு திருப்பாவையில் தொடங்கி கிருஷ்ண பஜன் வரை அம்மாவிற்குப் பின்பாட்டு பாடுவதில் ஐக்கியமாகிவிடுவோம். இப்படியே காலைப் பொழுது படிக்காமல் போனதால் கிருஷ்ணர்தான் தேர்வில் நல்ல மார்க் வாங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணையிருப்பார் என்று நினைக்கிறேன்.

               மார்கழி பனிக்கு மஃப்ளர் கட்டிக் கொண்டு வாசல் முழுவதும் கோலம் போட்டதும் இனிமையான நினைவுதான்.  என் மூத்த சகோதரி கோலம் போட்டால் அதை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். இன்றைய அடுக்குமாடி சென்னையில் மார்கழியில் கோலம் போடுகிறார்களா தெரியவில்லை.

              எங்கள் பம்மல் ஸத்சங்கத்தில் திருப்பாவை/திருவெம்பாவை சொல்லிவிட்டு நாங்கள் பொங்கல் வாங்கி சாப்பிடுவோம்.  அந்தக் குளிருக்கு சுடச்சுட பொங்கல் எவ்வளவு சுவை!! ஆவணி அவிட்டத்திற்க்குக் கூட கோவில் போக அடம்பிடிக்கும் என் அண்ணன்மார்கள் மார்கழி மாதம் காலையிலேயே ஆஜராகிவிடுவார்கள் பொங்கல் வினியோகம் செய்ய!!

             பின்வரும் தைப் பொங்கல் விருந்துக்குக் கட்டியம் கூறும் வகையில் வைகுண்ட ஏகாதசி பொங்கல், கூடாரைவல்லி சர்க்கரைப் பொங்கல் (மூட நெய் பெய்து முழங்கை வழிவார... என்ன ஒரு taste ஆண்டாளுக்கு!!), 'கறவைகள் பின் சென்று' (கூடாரைவல்லிக்கு முன் தினம் என்று நினைவு),பாடலுக்குத் தயிர்சாதம், ஹனுமத் ஜெயந்தி வடை, ஆருத்ரா தரிசனம் களி/தாளகம் என்று மார்கழி மாத விருந்து பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கே ரகம். (எங்க ஆரம்பிச்சாலும் கரெக்டா சாப்பாட்டு மேட்டருக்கு வந்துவிடுவியே என்று நீங்கள் நினைப்பது கேட்கிறது).

             திருவாதிரை அன்று விடிகாலையில் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு நான் என் பாட்டியுடன் போவேன். அந்த அதிகாலைப் பொழுதில் மேளம் ஒலிக்க சிவனை வணங்குவது ஒரு தனி அனுபவம்.   திருவாதிரை அன்று  ஏன் களி செய்கிறார்கள் என்று என் அம்மா வேடிக்கையாக ஒரு விளக்கம் சொல்வார். 'திருவாதிரைக்கு ஒரு வாக்களி (வாக்கு அளி)' என்பதை 'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்று புரிந்து கொண்டதால் என்று.  குவைத் வந்த பின்னும் திருவாதிரை அன்று அதிகாலையிலேயே (நான் 5 மணிக்கு எழுவது திருவாதிரை மற்றும் தீபாவளி அன்று மட்டுமே) சிவனை வழிபடுவதும் ஒருவாக்களி உண்பதும் தொடர்ந்தது.  இந்த முறை காலில் அடிபட்டு சும்மா இருப்பதால் களி உண்டபின் இந்த களி விஷயத்தைக் கொஞ்சம் 'கிண்டுவோமே' என்று கூகிளில் தேடினேன்.

              திருவாதிரைக்குக் கேரளாவில் (சிவனால் எரிக்கப்பட்ட காமன் உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் வகையில்)  விரதமிருந்து திருவாதிரைக் களி (கூத்து) என்று பெண்கள் நடனமாடுவார்களாம்.  .  அதிலிருந்துதான் களி பிறந்ததோ?  சிவனின் நட்சத்திரமான ஆதிரை நட்சத்திரத்தைப் போற்றும் வகையிலும் நடனமாடுகிறார்கள் என்று சில செய்திகள் கூறுகின்றன.  'களி'க்க(நடனமாட) சோம்பல் பட்டு நம் மக்கள் களி உண்டு'களிக்க' ஆரம்பித்தார்களோ?


(படம் உபயம் : welcome2kerala.com.)

              இந்த களி பிரசாதத்திற்கு ஒரு கதையும் உண்டு.  சேந்தனாரென்ற ஒரு சிவபக்தர் சிவனடியாருக்கும் மற்றவர்களுக்கும் உணவு கொடுத்த பின்னரே உண்ணும் பழக்கம் கொண்டிருந்தாராம்.  ஒரு நாள் நல்ல மழையில் ஒரு சிவனடியார் வந்து பசிக்கு உணவு கேட்டாராம்.  விறகெல்லாம் நனைந்து ஈரமாகியிருக்க சேந்தனாரின் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு கொஞ்சம் விறகை எரியவைத்து சிவனடியாரை மேலும் காக்க வைக்கக் கூடாது என்று விரைவில் ஏதாவது சமைக்க எண்ணி வெல்லத்தையும் அரிசி மாவையும் வைத்து களி செய்தாராம்.  "இதுதான் இன்று செய்ய முடிந்தது.  தயை கூர்ந்து ஏற்க வேண்டும்" என்று சிவனடியாரிடம் வேண்டிக் கொண்டார்களாம்.  அதை மகிழ்சியோடு சிவனடியார் சாப்பிட்டு சென்றவுடன் கோவிலுக்குப் போன அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.  சிவன் கோவிலில் களி சிந்தியிருக்க சிவபொருமான் வாயிலும் களி ஒட்டிக் கொண்டிருந்ததாம்.

            இந்த மார்கழி மாதத்தை செவிக்கும் (இசை விழாவின் இசை மழையில் நனைந்து) வயிற்றுக்கும் ஈந்து கொண்டாடி மகிழுங்கள்.

Monday 13 December 2010

வாடகைத் தாய்

          


             சுந்தரிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.  குவைத்திலிருந்து அவளது புருஷன் அவளுக்கு விசா அனுப்பியிருந்தான்.  பத்தாவதுகூடப் படிக்காத தனக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பா என்று அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.  எல்லாம் இந்த குழந்தை பிறந்த அதிர்ஷ்டம்தான் என்று ஒரு வயதான தன் மகளை வாரி அணைத்து முத்தமிட்டாள்.  அவள் கணவன் குவைத்தில் கார் டிரைவராக இருக்கிறான்.  அவன் அங்கு போய் கிட்டதட்ட இரண்டு வருடங்களாகின்றன.  இப்பொழுது தானும் வெளி நாடு போவது குறித்து சுந்தரிக்குப் பெருமை  பிடிபடவில்லை.  என்ன ஒரே வருத்தம் என்றால் ஒரு வயதுதான் ஆகும் மகளை தன் தாயிடம் விட்டுவிட்டு போகவேண்டும். மகளைப் பிரியும் வருத்தம் இருந்தாலும் அவளுக்காக சம்பாதிக்கத்தானே போகிறோம் என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
 
            குவைத்தில் அவளுக்கு ஒரு நல்ல வீட்டில் வேலை கிடைத்தது.  சுந்தரிவேலை செய்யும் வீட்டு எஜமானி ஆஃபீசில் வேலை செய்வதால் அவளின் 8 மாதக் குழந்தை அபூர்வாவைப் பார்த்துக் கொள்ளும் வேலை சுந்தரிக்கு.  மகளிடம் காட்ட முடியாத அன்பை இந்தக் குழந்தையிடம் கொட்டினாள் சுந்தரி.  அந்தக் குழந்தைக்கு உணவு கொடுப்பது, விளையாடுவது என்று ஆர்வத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாள். குவைத் வந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டன.  இந்த நான்கு வருடங்களில் மகளுடன் போனில் பேசுவதும், அவளின் புகைப்படங்களைப் பார்பதும்தான் மகளுடன் அவளுக்கு இருந்த தொடர்பு. மாதாமாதம் மகளுக்காகக் கணிசமாகப் பணம் அனுப்ப முடிவதை நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொள்வாள். தன் மகளுக்காகத் தேக்கி வைத்த அன்பை அபூர்வாவிடம் காட்டி சந்தோஷப்படுவாள். அபூர்வா நடக்க ஆரம்பித்தது, பேசத் தொடங்கியது,  play school போனது, பின் பள்ளிக்குப் போனது என்று ஒவ்வொரு நிலையிலும் தன் மகளின் வளர்ச்சியை மனக் கண்ணால் கண்டு மகிழ்வாள் சுந்தரி.  அபூர்வாவும் அவளின் அம்மாவைவிட சுந்தரியிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டாள்.

            அடுத்த வாரம் ஒரு மாத விடுமுறையில் இந்தியா போவது பற்றி சுந்தரிக்கு மிகவும் ஆவலாக இருந்தது.  மகளுக்காகத் தங்கச் சங்கிலி, பொம்மைகள் என்று தன் சக்திக்கு ஏற்றவாறு வாங்கி வைத்திருந்தாள்.  அபூர்வாவின் பழைய பொம்மைகள், பிற விளையாட்டு சாமான்களை அவள் வீட்டு எஜமானி அவளுக்குக் கொடுத்திருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து தன் மகள் ஆசையோடு தன்னை முத்தமிடும் காட்சியை ஆயிரம் முறையாவது மனக் கண்ணில் கண்டு ரசித்திருப்பாள்.  அபூர்வாவை நினைத்தாலும் அவளுக்கு அழுகையாக வந்தது.  தான் ஊருக்குப் போவதை அறிந்து ஒருவாரமாக தினம் அழுவதோடு அவளிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக் கொண்டது அபூர்வா.  அபூர்வாவைச் சமாதானம் செய்வது பெரும்பாடாக ஆனது.

             சென்னை விமான நிலையத்தில் தன் தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு தயக்கத்துடன் எட்டிப் பார்க்கும் மகளை இழுத்து அணைத்துக் கொண்டாள் சுந்தரி.  அவள் மகளோ அழுகையுடன் பாட்டியிடம் இன்னும் அதிகமாக ஒட்டிக்கொண்டாள்.  "இப்பதானே வந்திருக்கே. பழகக் கொஞ்சம் நாளாகும் அவளுக்கு" என்றார் அம்மா.  ஒரு வாரமாகியும் சுந்தரி வாங்கி வந்த பொம்மைகளுடன் விளையாடினாளே தவிர அவள் மகள் சுந்தரியிடம் நெருங்கி வரவில்லை.  எட்ட நின்று சிரிப்பது, கேட்ட கேள்விக்குப் பாட்டிக்குப் பின்னால் நின்று பதில் சொல்வது என்ற அளவிலேயே நின்றது அவர்கள் உறவு.  குலதெய்வம் கோவில், உறவினர் வீடுகள் என்று அடுத்த பத்து நாட்களும் அலைய வேண்டிவந்தது.  மகளின் பள்ளியில் (கான்வெண்ட் பள்ளி ஆயிற்றே!!) லீவு தராததால் அவளை வழக்கம்போல் அம்மாவிடம் விட்டுவிட்டு சுந்தரியும் கணவரும் ஊர் ஊராகப் பயணித்தார்கள்.  இந்த பத்து நாள் இடைவெளியில் மகள் மீண்டும் அவர்களுக்கு அந்நியப்பட்டுப் போனாள். மகள் விலகி இருப்பதைக் கண்டு கண்ணீர்விடும் சுந்தரியை 'இன்னும் பத்து நாள்தான் இருக்கு.  நீ அவளை மாற்றி அவள் மனதில் இடம் பிடிப்பதற்குள் ஊருக்குப் போகும் நாளாகிவிடும்.  பின்னர் உன்னைப் பிரியும்போது குழந்தைக் கதறி அழும்.  எப்படி அவளைச் சமாதானப் படுத்துவாய்?  அபூர்வாவே எப்படி அழுதாள் தெரியுமில்ல.  இப்ப போனால் இன்னும் ஐந்து வருசமாகும் நாம வர.  அதுவரை குழந்தையின் கண்ணீர் முகம்தான் நமக்கு நினைவுக்கு வரும்.  அதனால எட்டி நின்றே அவளை ரசி.  இப்ப என்ன, அவள் உன் அம்மாகிட்டதானே இருக்கா.  அடுத்த முறை நாம் வரும்போது அவள் விவரம் தெரிந்த பெரிய பொண்ணா இருப்பா.  அப்ப உன்னைவிட்டுப் பிரியாம இருப்பா.  கவலைப் படாதே"  என்று அவள் கணவன் சமாதானப்படுத்தினான்.  கணவனின் வார்த்தைகளின் உண்மை அவளைத் தாக்கக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். தன்னை நினைத்து அழுதுகொண்டிருக்கும் அபூர்வாவிற்குத் தன்னால் இயன்ற பரிசுப் பொருட்களை வாங்க கடைக்குப் போகத் தயாரானாள்.

 'விலைமீது விலை வைத்து கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா...." என்று ரஜினி டிவியில் உருகிப் பாடிக் கொண்டிருந்தார்.


 

Thursday 9 December 2010

முக்காலின் முக்காபுலா

              காலை வேளையில் கடலைப் போட்டுக் கொண்டே கொஞ்சம் உடற்பயிற்சியும் செய்ய நானும் என் தோழியும் அருகே உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்வோம்.  நிறைய அரட்டையோடு கொஞ்சம் treadmill, கொஞ்சம் cycling, கொஞ்சம் rowing செய்வோம். wii-யில் கற்றுக் கொண்ட aerobics பயிற்சியையும் கொஞ்சம் செய்வோம்.  அன்றும் அப்படித்தான் ஏரோபிக்ஸ் செய்து கொண்டிருந்தேன்.


            

                 மூன்று aerobics step stoolsஐ மூன்றடி இடைவெளிவிட்டு வைத்து பாண்டி விளையாடுவது போல் தாண்டிக் குதித்துக் கொண்டிருந்தேன். வேறு ஒரு பெண் ஒரு ட்ரைய்னரிடம் கற்றுக் கொள்வதைப் பார்த்து நான் பழகியது இந்த பயிற்சி.  குரு தக்ஷிணை தராமல் பயின்றதல்லாவா, தண்டனை உடனே கிடைத்தது.  முதல் இரண்டு ஸ்டூலைத் தாண்டி மூன்றாவதைத் தாண்ட முயலும்போது கால் பிசகித் தடாலென்று விழுந்தேன்.  கொஞ்சம் வலி; ஆனால் வீக்கம் ஒன்றும் இல்லை.

             வீட்டிற்கு வந்ததும் தைலம் தடவி வழக்கமான வீட்டு வேலைகளைச் செய்தேன்.  வலி ஒன்றும் தெரியவில்லை.  பகல் ஒரு மணிக்கு என் மகளை அழைத்துவர பள்ளிக்குச் செல்லும் முன் ஒரு முறை தைலம் தடவலாமென்று பாதத்தைப் பார்த்தேன்.  இதுதான் நான் செய்த தவறோ?  அதுவரை வலியே தெரியாத எனக்கு, காலில் (ankle-ல்) மூட்டு டென்னிஸ் பந்துபோல் வீங்கியிருப்பதைப் பார்த்ததும் எப்படித்தான் அப்படி வலிக்கத் தொடங்கியதோ!
அதுவரை கூலாக நடந்து கொண்டிருந்தவள் நொண்டுவதற்கே சிரமப்பட ஆரம்பித்தேன். ortho doctorஐப் பார்க்க அடித்து பிடித்து ஓடினோம்.  நல்ல வேளை, எலும்பு முறிவு ஒன்றும் இல்லை என்றார்.  நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் "ligaments tare என்பதால் மாவுக்கட்டு போடவேண்டும். இரண்டு வாரங்களுக்கு அடிபட்டக் காலை தரையில் ஊன்றக் கூடாது" என்றார்.  ஐயயோ, எப்படி நடப்பது என்று கேட்டால், "கவலை வேண்டாம்.  ஒரு காலுக்கு பதில் இரு (ஊன்று)கால்களைத் தருகிறேன்" என்றார்.

          


               மூன்று காலில் நடப்பது முதலில் கடினமாக இருந்தது.  முதலில் இரு ஊன்று கோல்களையும் முன்னால் நகர்த்தி பின்னர் என் ஒரே காலால் குதித்து முன்னேற வேண்டும்.  இந்த sequence சரியாக நிதானமாக செய்தால் பிரச்சினை இல்லை.  நான் இரு ஊன்று கோல்களையும் தூக்கும்போதே என் ஒரே காலையும் தூக்குவது, அல்லது ஊன்றுகோலைத் தவறவிடுவது என்று ஏதோ தவறுகள் செய்து இப்பொழுதுதான் சரியாக நடக்கத் தொடங்கியிருக்கிறேன்.  ஒருவழியாக 'முக்காலும்' உணர்ந்த ஞானியாகிவிட்டேன்!!!.

             இரண்டு கால்களில் ஓரிடத்தில் நிற்காமல் ஏதாவது செய்துகொண்டே (அல்லது செய்வதுபோல் நடித்துக் கொண்டே) இருந்த நான் மூன்று காலிருந்தும் கணவர் மற்றும் மகளின் அன்புக் கட்டளைக்குப் பணிந்து
மூலையில் உட்காரும் நிலமை.  சமையல் மற்றும் உதவிக்கு ஒரு பெண்மணி வருகிறார்.  அதனால் சும்மாயிருப்பதுதான் எனக்கிருக்கும் ஓரே வேலை.

             இந்த முக்காலின் முக்காபுலாவால் என்ன நன்மைகள் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

             இதுவரை நான் 5-6 பதிவர்களின் வலைத் தளங்களையே ரெகுலராகப் படிப்பேன்.  இப்பொழுது நேரம் அதிகம் கிடைப்பதால் தமிழ்மணத்தில் போய் எல்லா புதிய இடுகைகளையும் ஒரு glance பார்க்க முடிகிறது. என் கணவர் வாங்கிக் குவித்திருக்கும் தன்னம்பிக்கைப் புத்தகங்கள் சிலவற்றைப் படிக்கிறேன்.  என் மகளோடு விளையாட்டு (உட்கார்ந்த இடத்தில்தான்), கதைகள் படித்துக் காட்டுவது என்று அதிக நேரம் செலவழிக்கிறேன். "நான் ஹெல்ப் பண்றேன்மா" என்று ஓடிவரும் அவள் அன்பில் சந்தோஷப்படுகிறேன். அவள் மட்டுமன்றி என் கணவர், பக்கத்துவீட்டுத் தோழி, மேல் வீட்டு மாமி, என் வீட்டில் வேலை செய்பவர் என்று பலரின் அன்பு உள்ளங்களை உணர நல்ல வாய்ப்பாகவும் இது அமைந்தது.

            இப்படி வேலையில்லாமல் உட்கார்ந்திருப்பதில் குறைகளும் உண்டு.  முன்பெல்லாம் தேர்வு நேரத்தில் மட்டும்தான் என் மகளைப் படிக்கவைப்பேன்.  அதுவும் அவளே படித்தபின் ஒரு கேள்வித்தாள் கொடுப்பதுதான் என் வேலை. இப்பொழுதோ எனக்குப் பொழுது போகாததால் crossword பண்ணு, maths puzzle பண்ணு என்று அவளை torture பண்ணிக் கொண்டிருக்கிறேன்.  உருப்படாத சீரியலைப் பார்க்கவும் பிடிக்காததால் டிவி சேனலை மாற்றிக் கொண்டேயிருப்பது ஒரு habbit ஆக மாறிவிடுமோ என்று கவலையாயிருக்கிறது.  இதெல்லாவற்றையும்விட வேலை எதுவும் செய்யாமலிருப்பதால் நான் கஷ்டப்பட்டுக் குறைத்த 2 kg கொழுப்பும் வட்டியும் முதலுமாக என் உடலில் சேமிப்பாகிவிடுமோ என்ற கவலைதான் பிரதான கவலையாக இருக்கு. முக்காலும் உணர்ந்த அந்தக் கடவுள்தான் இந்த முக்காலிலிருந்து சீக்கிரம் விடுதலை தரவேண்டும்!!.

Sunday 28 November 2010

அதிகமில்லை ஜெண்டில்மேன்!

               இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில்(26.11.2010) மழை வெள்ளத்தில் நீந்தி பள்ளி செல்லும் சிறார்களைப் பற்றிய செய்தி படித்ததும் மிகவும் வருத்தமாக இருந்தது.


அரசியல்வாதிகள் கோடி கோடியாக மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடித்த பணத்தில் கொஞ்சம் செலவழித்து இந்த மலைவாழ் மக்களுக்கு நல்ல பள்ளியோ, இந்த ஆற்றைக் கடந்து போக ஒரு பாலமோ கட்டிக் கொடுத்திருக்கலாம்.

              இல்லை துணை இல்லாவிட்டாலும் துணிவு இழக்காத இந்தப் பெண்கள் (நன்றி: இந்த வார ஆனந்த விகடன்) போல





 பலருக்கு குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றியிருக்கலாம்.

              இவர்களின் தேவையை நிறைவேற்ற தேவை, "அதிகமில்லை ஜெண்டில்மேன்! (உங்கள் கொள்ளையில்) ஒரு துளி போதுமே."

Thursday 25 November 2010

சித்திரமும் கைப்பழக்கம்

 scare crow
r
robot


 chef

படங்கள் : vaibhavi

Wednesday 17 November 2010

(ஃ)போகஸ் செய்திகள்

JPC- யில் சேரத் தயக்கம்

பல கோடி ரூபாய் ஊழலுக்காக JPC அமைக்க வேண்டும் என்று பார்லிமெண்டில் பெருங்கூச்சல் எழுப்பினார்கள் எம்பிக்கள்.  ஆனாலும் 1.75 lakh crores-க்கு எத்தனை சைபர் என்ற குழப்பத்தின் காரணமாக அந்தக் குழுவில் இடம் பெற அரசியல் தலைவர்கள் தயக்கம் காட்டி வருவதாகச் செய்திக் குறிப்பு கூறுகிறது.

சேரும் ஷேரும்.

'சேர் (chair) என்பது தோளில் தொங்கும் துண்டைப் போன்றது; ஷேர்(share) என்பது இடுப்பில் கட்டிய வேட்டி போன்றது. அதனால் கண்மணிகளே, சேர் போனாலும் ஷேர் இருப்பதால் கவலை வேண்டாம்' என்று தலைவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

எடியூரப்பா பெயர்  மாற்றம்.

எடியூரப்பா என்ற பெயர் சமயத்தில் இடையூரப்பா என்று ஒலிப்பதால்தான் அடுத்தடுத்து இடையூறாக வருவதாகத் தன் குடும்ப ஜோசியர் கூறியதால் அவரின் ஆலோசனைப்படி எடியூரப்பா தனது பெயரை உடையூரப்பா என்று மாற்றிக் கொள்ளப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்கிறார்கள்.

CBI அதிகாரிகள் ஒட்டுமொத்த ராஜினாமா

காமன்வெல்த் கேம்ஸ், ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று இடைவிடாமல் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதோடு எதற்கெடுத்தாலும் CBI விசாரணைக்கு உத்தரவிடுவதால் வேலைப் பளு தாங்காமல் தாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ராஜினாமா செய்யப் போவதாக CBI அதிகாரிகள் மிரட்டல்.

ஓரவஞ்சனை - ஓபாமாவின் புலம்பல்

அடுத்தடுத்து கோடிக் கணக்கில் ஊழல் புரியும் இந்திய அரசியல்வாதிகள் தனது இந்தியப் பயணத்தின் போது வெறும் நடனமாட மட்டும் கற்றுக் கொடுத்துவிட்டு ஊழல் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொடுக்காமல் விட்டது பெரும் ஓர வஞ்சனை என்று அமெரிக்க அதிபர் ஓபாமா வன்மையாகக் கண்டித்தார்.

சினிமா தியேட்டரில் ஈ ஓட்டினார்கள்

இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் திறமை பற்றிய விவரம் விறுவிறுப்பாகவும் அவர்களின் உரைகள் சரியான காமெடி பீஸாகவும் இருப்பதால் தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுவதால் பெரும்பான்மையான திரையரங்குகளில் கூட்டமே இல்லை என்று தெரிய வருகிறது.

Wednesday 10 November 2010

1980 - 2010





1980

             மாலை ஆறரை மணியாகிவிட்டது. சீதாவோ எத்தனை முறை கூப்பிட்டாலும் "அஞ்சே நிமிஷம்மா" என்று தோழிகளுடன் பக்கத்து மைதானத்தில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக ஏழு மணிக்கு வீட்டிற்கு வந்தாள்.  வந்தவுடன் அக்கா அண்ணாக்களுடன் விளையாட்டு, சண்டை etc.,.  "ஏண்டி நாளைக்கு ஸ்கூல்ல பேச்சுப் போட்டின்னு சொன்னியே. prepare பண்ணியாச்சா?" என்று அம்மா சமையலறையில் சமைத்தபடியே கேட்டாள்.  "அம்மா, அதெல்லாம் அக்கா என்னென்ன points சொல்லனும்னு சொல்லியிருக்கா,  நான் develop பண்ணிப்பேன்.  கவலைப் படாதே.  நான் இப்ப homework பண்ணிண்டு இருக்கேன்." என்றாள் சீதா.  ஹோம் வொர்க் முடித்த பின்னர் அடுத்த நாளுக்காக time-tableபடி புத்தகத்தை அடுக்கி வைத்துக் கொண்டாள்.  இதற்குள் அம்மா டின்னருக்குக் கூப்பிட அனைவரும் ஒன்றாக அமர்ந்து கதை பேசியபடி சாப்பிட்டனர்.

              மறு நாள் ஸ்கூலுக்குப் போகும்போது 'அம்மா, நான் நல்லா பண்ணனும்னு சாமிகிட்ட வேண்டிக்கோ" என்று சொல்லியபடி குதூகலத்துடன் ஸ்கூலுக்குப் போன சீதா பேச்சுப் போட்டியில் தன்னம்பிக்கையுடன் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றாள்.  மாலையில் பெருமிதத்துடன் வந்த மகளை அணைத்து " நீ நல்லா பண்ணுவேன்னு தெரியும். very good. சரி போய் விளையாடு" என்று அனுப்பி வைத்தாள் அம்மா.

2010

              நான்கு மணிக்கு ஸ்கூலிலிருந்து வந்தாள் அனன்யா.  அம்மா வைத்திருந்த பூஸ்டையும் டிபனையும் சாப்பிடும்போதே ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தாள்.  " அனன்யா, சீக்கிரம் ஹோம் வொர்க் பண்ணு.  இன்னைக்கு விளையாடப் போக வேண்டாம்.  ரெண்டு நாள் கழிச்சு பேச்சுப் போட்டி இருக்கில்ல.  தினமும் இரண்டு தடவை சொல்லிப் பாரு.  நான் இண்டர் நெட்டில் பார்த்து நிறைய points எழுதி வச்சிருக்கேன்.  அதையும் சேர்த்து மனப்பாடம் பண்ணிக்கோ.  ஆறு மணிக்குப் பாட்டு க்ளாஸ் வேற இருக்கு." என்றாள் அம்மா.  அன்றும் அதற்கு மறு நாளும் விளையாட்டு கட்.  பேச்சுப் போட்டிக்கு முதல் நாள் அம்மா டென்ஷனாக இருந்தாள்.  "யார் யாரெல்லாம் போட்டியில் இருக்காங்க?  யார் ஜட்ஜ் தெரியுமா?" என்று ஏதாவது கேட்ட வண்ணம் இருந்தாள்.  ஒரு நான்கு முறையாவது அனன்யாவைச் முழு உரையையும் சொல்ல வைத்திருப்பாள். கையால் இப்படி action பண்ணு, முகத்தில் expression இன்னும் கொஞ்சம் வேணும், இந்த இடத்தில் modulation இன்னும் கொஞ்சம் better-ஆ இருக்கட்டும் என்று அட்வைஸ் கொடுத்த வண்ணம் இருந்தாள்.  இத்தனை ரிஹர்ஸலுக்குப் பிறகும் அனன்யா ரொம்ப டென்ஷனாகவே இருந்தாள்.  'அம்மா நான் நல்லா பண்ணுவேனாமா?' என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள். டிவி பார்த்துக் கொண்டிருந்த அப்பா ' என்ன, மணி ஏழரை ஆறதே.  பிட்சா ஆர்டர் பண்ணவா.  பாவம் நீங்க ரெண்டு பேரும் போட்டிக்கு பிஸியா prepare பண்ணிண்டு இருக்கேளே" என்றார்.  எட்டு மணிக்கு சுனைனா பார்த்த வண்ணம் அனன்யாவும், ஏதோ சீரியல் பார்த்த வண்ணம் அப்பாவும் அம்மாவும் பீட்ஸா சாப்பிட்டனர். டின்னருக்குப் பிறகு அப்பா அம்மா இருவருக்கும் பேச்சுப் போட்டிக்கான உரையை இருமுறை சொல்லிக் காட்டிய பிறகே அனன்யா தூங்கப் போனாள்.

             காலையில் அனன்யாவைச் சீக்கிரம் எழுப்பிய அம்மா அவளுக்கு முக்கிய points எல்லாம் ஒரு முறை நினைவூட்டினாள்.  'relaxed-ஆ இரு. confident-ஆ பேசு. all the best" என்ற அட்வைஸுடன் மகளை முத்தமிட்டுப் பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். அன்று முழுவதும் 'இப்ப போட்டி ஆரம்பித்திருக்கும்; இப்ப அனன்யா பேசியிருப்பாள்; இப்ப முடிவு சொல்லியிருப்பார்கள்' என்று அம்மாவின் எண்ணங்கள் அனன்யாவைப் பற்றியே இருந்தது.

            மாலை அனன்யா ' அம்மா, நான் நல்லா பேசினேன். எனக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது" என்று கூறிய வண்ணம் வந்தாள். " கவலைப் படாதே.  உங்க ஸ்கூலில் இருக்கும் பாலிடிக்ஸுக்கு உனக்கு மூன்றாம் பரிசு கிடைத்ததே பெரிசு. I am very happy that you got some prize. be happy. we will buy you a nice gift today " என்று மகளைத் தேற்றினாள்.  மாலை அப்பா வந்ததும் மூவரும் பேச்சுப் போட்டியில் வென்றதற்காக அனன்யாவிற்கு கிஃப்ட் வாங்க கடைக்குப் போனார்கள்.

Tuesday 2 November 2010

உச்சி மீது வெடிவந்து வீழுகின்ற போதிலும்....





              நம் பண்டிகைகளிலேயே நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து இருப்பது தீபாவளிக்குத்தான். பள்ளியில் படிக்கும்போது என் தோழிகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே தீபாவளி countdown ஆரம்பித்துவிடுவோம்.  புது ஆடையை உடுத்தி பெருமையோடு வலம் வருவதில் ஒரு ஆர்வம். அன்று முதல் இன்று வரை எல்லா வயதினருக்கும் ( பிற மதத்தினருக்குக் கூட) தீபாவளி ஸ்பெஷல் வெடிகள்தான். என் அக்கா, அண்ணன்மார்களின் உதவியால் வெடி வெடிப்பது என் ஆர்வத்தைத் தூண்டியதே அன்றி ஒருபோதும் பயமே இருந்ததில்லை. சிறு வயதில் என் அம்மா வெடிகளை வாங்கி எங்களுக்குள் பங்கு போட்டுக் கொடுப்பார்.  அதை வெயிலில் காய வைத்து தீபாவளியன்று ஒரு வெடிகூட வீணாகாமல் போட்டி போட்டுக் கொண்டு வெடிப்போம். என்னுடைய favorite  எலக்ட்ரிக் சரம் மற்றும் atom bomb தான்.  அதுபோல் புஸ்வானத்தை யார் வீட்டில் வைத்தாலும் அது முடியும் வரை ரசிப்பேன்.



              கல்யாணமாகி முதலில் அபுதாபி, பின்னர் கனடாவில் வசித்தபோது தீபாவளியானால் இந்த வெடிகளை வெடிக்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருக்கும்.

              என் மகள் வெடிகளை வெடிக்க வாய்ப்பு கிட்டாதோ என்ற என் ஏக்கம் குவைத் வந்ததும் தீர்ந்தது.  நல்ல வேளை, குவைத்தில் வெடிகளுக்குத் தடையில்லை.  கடந்த நான்கு வருடங்களாக எல்லோரும் ஒன்று கூடி வெடித்து மகிழ்கிறோம்.  என் மகளுக்கும் என்னைப் போல் வெடி வெடிப்பதில் ஆர்வம் உண்டு (உடனே அவள் ரொம்ப தைரியசாலி என்று எண்ணாதீர்கள். She is afraid of anything that moves and has more than two legs . ஆனால் amusement park-ல் எல்லா rides -லும் தைரியமாகப் போவாள்.  நான்தான் பயந்து அவள் இறங்கி வரும்வரை கண்களை இறுக்க மூடிக் கொண்டிருப்பேன்)..முதலில் கொஞ்சம் தயங்கினாலும் மத்தாப்பு, சங்கு சக்கரமென்று மூன்று வயதிலேயே (அதுதான் அவள் கொண்டாடிய முதல் தீபாவளி) வெடிக்கத் துவங்கினாள். அப்பொழுது எங்கிருந்தோ வந்த ராக்கெட் சரியாக அவள் தலையில் லேண்டாகியது.  கொஞ்சம் தலைமுடியையும் பொசுக்கிவிட்டது.  பயத்தில் அவள் கத்த, கூட இருந்த நானும் நடுங்கக் கொண்டாட்டம் போய் திண்டாட்டமாகியது.  பக்கத்திலிருந்தவர்கள் '  paste தடவினால் சரியாகும், பௌடர் போட்டால் சரியாகும்...' என்று எது சொன்னாலும் உடனே அங்கிருந்த கடையில் நுழைந்து எடுத்து அவள் தலையில் தடவி அவள் தலையை ஒரு வண்ணக் களஞ்சியமாக்கிவிட்டேன். இதற்குள் அவள் தலையில் ஒன்றும் பெரிய காயமில்லை என்று எனக்குப் புரிந்துவிட்டதால் நான் நிதானமானேன்.  ஆனால் என் மகளோ அழுகையை நிறுத்தவேயில்லை.  நாங்கள் அப்பொழுதுதான் புது வீட்டிற்கு குடி புகுந்து ஒரு வாரமாகியிருந்தது.  என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு டாக்டர்.  அவரிடம் கொண்டு காட்டினோம். அவரும் கவலைப் பட ஒன்றுமில்லை என்று கூறினார்.  அவர் ஒரு டாக்டர் என்று அறியாததால் (மூன்று வயது குழந்தைதானே.  அவர் வீட்டில் casual dress-ல் இருந்ததால் அவரை டாக்டரென்று நம்ப மறுத்தாள்).  "எனக்கு டாக்டர்கிட்ட போகணும்" என்று கீறல் விழுந்த ரெகார்ட் போல அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.  பின்னர் ஹாஸ்பிடல் போய் வந்ததும்தான் அழுகையை நிறுத்தினாள். எங்கள் பக்கத்து வீட்டு டாக்டர் இன்றும் அவளைப் பார்க்கும்போது "டாக்டர்கிட்ட போகணும்னு அடம்பிடித்த முதல் குழந்தை நீதான்" என்று சொல்லிச் சிரிப்பார்.

            அடுத்த வருடம் கொஞ்சம் பயந்தாலும் நாங்கள் தைரியம் கூறவே வெடிக்கத் தயாரானாள்.  நாங்களும் மற்றவர்களெல்லாம் வருவதற்கு முன்னரே வெடித்துவிட்டு வர முடிவு செய்தோம் (எங்கள் நண்பர் வட்டாரத்தில் எங்களுக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்ற பட்டப் பெயர் உண்டு).  புஸ்வாணம், சங்கு சக்கரம், மத்தாப்பு எல்லாம் கொளுத்தி திருப்தியுடன் வீட்டிற்குத் திரும்ப எத்தனித்தோம். அப்போது சுமார் ஒரு மீட்டர் தள்ளி யாரோ விட்ட தரைச் சக்கரம் சூப்பர்மேன் போல் ஒரு தாவு தாவிக் குதித்து எங்களனைவரையும் விட்டுவிட்டு சரியாக வைபவியின் காலில் வந்து விழுந்து வணக்கம் சொல்லியது.  'ஒரு காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே...' பாட்டுக்கு அபிநயம் பிடிப்பது போல் அவள் குதிக்கத் தொடங்கினாள். ஒருமாதிரி அவளைச் சமாதானப்படுத்தி வீட்டிற்குக் கூட்டி வந்தோம்.

             சென்ற முறை தீபாவளியை எந்த சிக்கலும் இல்லாமல் நன்றாக வெடித்துக் கொண்டாடினோம்.  பட்ட காலிலே படும் என்ற பழமொழிக்குப் பயந்து மற்றவர்களிடமிருந்து தள்ளி நின்றே வெடித்தோம். இந்த முறை தீபாவளிக்கு வெடி வாங்கியாகிவிட்டது.  என் மகள் தூக்கத்தில் கூட மத்தாப்பு, சங்கு சக்கரம் என்று புலம்பும் அளவு மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாள். நாங்களும் ஆவலுடன் தீபாவளியை எதிர் நோக்கி இருக்கிறோம்.

             lநீங்களும் நிறைய வெடித்து தீபாவளியை மகிழ்சியுடன் கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் எண்ணச்சிதறல் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

(மேலேயுள்ள diwali greeting ஐ வரைந்தது எங்கள் மகள் வைபவி)

Tuesday 26 October 2010

Happy birthday

            



                இன்றுடன் எண்ணச் சிதறலுக்கு ஓராண்டு நிறைவு பெறுகிறது. எண்ணச்சிதறலின் Happy birthday அன்று நான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி மேலும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                எழுத ஆசையிருந்தும் முடியுமா என்ற தயக்கம் கொண்டிருந்த என் போன்ற எத்தனையோ பேரை எழுதத் தூண்டிய google eblogger-க்கு முதல் நன்றி.

               எண்ணச்சிதறலைத் தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடும் அப்பாதுரை, சாய்ராம், ஸ்ரீராம், LK, முத்துலக்ஷ்மி, மீனாக்ஷி, சாந்தி அவர்களுக்கும், அதன் followers-க்கும், படித்து என்னிடம் நேரிலும், இமெயிலிலும் தொடர்பு கொள்ளும் என் நண்பர்களுக்கும் நன்றி.



என்னடா பொல்லாத வாழ்க்கை

        
              சாப்பிட்டு முடித்தபின் வெற்றிலை பாக்குப் பெட்டியுடன், ஈஸிசேரையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.  ஈஸிசேரில் சாய்ந்தபடி வானத்திலுள்ள நட்சத்திரங்களை வெறித்து நோக்கினேன். உள்ளே 'கடவுளே, அவருக்கு இந்த வேலை எப்படியாவது கிடைக்கட்டும்' என்று குழந்தைகளுக்குத் தெரியாவண்ணம் கண்ணீர் சிந்தி வேண்டிக்கொண்டிருப்பாள் என் மனைவி.   என்னவோ எல்லாமே சலிப்பாக இருந்தது.  இத்துடன் நான் வேலையை உதறிவிட்டு வருவது பத்தாவது முறை.  எதிர்த்த வீட்டு ராமசாமி போலவோ, அடுத்த வீட்டு பத்மநாபன் போலவோ என்னால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்து போக முடிவதில்லை.

            Born with the silver spoon என்பார்களே அப்படி செல்வத்தில் பிறந்து திகட்டத் திகட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவன். வாழ்க்கையின் வலி அறியாமல் வளர்ந்தவன்.  நன்றாக போய்க்கொண்டிருந்த என் தந்தையின் பிஸினஸ் என்னுடைய தவறான ventures மூலம் நிர்மூலமானது.  இன்று என் மனைவி, இரு குழந்தைகளுக்காக இன்னொருவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டிய நிலமை. ஊழல், மரியாதையில்லாத செய்கை, மற்றவர்களின் அதிகப் பிரஸங்கித்தனமான/ முட்டாள்தனமான பேச்சு என்று ஏதாவது ஒரு விஷயம் என் மூக்கின்மேல் எப்போதும் இருக்கும் கோவத்தை விசிறிவிட நான் பத்து முறை வேலை மாறியாகிவிட்டது.

              நினைத்தால் சலிப்பாக இருக்கிறது. எனக்கு நன்றாகக் கதை எழுத வரும்.  மிக அழகாக ஓவியமும் வரைய வரும்.  ஆனால் இதில் எதிலுமே பெரு வளர்ச்சி பெறவில்லை.  எந்த வேலையில் சேர்ந்தாலும் அதில் முதன்மையாக வரக்கூடிய திறமை, மேலதிகாரியின் பாராட்டைப் பெறுமளவு உழைப்பு எல்லாமிருந்தும் என்னால் ஒரு வேலையிலும் நிலைத்து நிற்க முடியவில்லையே. இன்னும் எத்தனை நாள் இப்படிப் போராடுவது.  என்னடா இது பொல்லாத வாழ்க்கை!!

            இந்த மாதிரி மனம் சலிப்படையும்பொதெல்லாம் எனக்கு ஆறுதலாயிருக்கும் என் மாமனாரை நினைத்துக் கொள்கிறேன்.  ஒரு நண்பன் போல் புரிந்து கொள்ளுதலும், ஒரு சகோதரனைப் போல் ஆதரிப்பதிலும் அவர் எனக்குப் பெரும் பலமாக இருந்தார்.  எனக்குச் சரிவு ஏற்படும் போது என்னை ஊக்கப்படுத்துவார்.  அவர் என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் சாப்பிட்டபின் இது போல் வெளியில் அமர்ந்து விடியும் வரை பேசுவோம். என் வருங்காலம், அவரின் இறந்த காலக் கதைகள் என்று எங்களுக்குப் பேச விஷயத்திற்குக் குறைவே இல்லை. அவர்தான் எத்தனை உயர்ந்த மனிதர். தன்னைச் சேர்ந்தவர்களின் முகத்தில் மகிழ்சியைக் கொண்டு வர எதுவும் செய்யத் தயங்கமாட்டார். யாருக்கும் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் பாரத்தைக் கூடக் கொடுக்காமல் தனிமையில் மாரடைப்பால் காலமானவர். அவர் இறந்தது என்னால் ஏற்க முடியாத பெரும் இழப்பு. அவரிடம் பேசும்போதெல்லாம் என் மனச்சுமை குறைந்திருக்கிறது.

            'அப்பா, நேரமாச்சு, தூங்கலாம் வா' என்ற மகளின் குரல் என் நினைவுகளைக் கலைத்தது. என் மோட்டார் சைக்கிளில் சாய்ந்த வண்ணம் என்னைக் கூப்பிட்டாள் அவள். மோட்டர் சைக்கிள் மீண்டும் என் நினைவுகளைக் கிளறியது.  மார்கெட்டிங் துறையில் வேலை கிடைத்தவுடன் இந்த மோட்டார் சைக்கிளை வாங்க பணம் ஏற்பாடு செய்தவர் என் மாமனார்தான். அதில் போக எனக்கு முதலில் கொஞ்சம் பயம்.  அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'ஓய், நீர் சும்மாதானே இருக்கீர். என்னோட வாருமேன்" என்று துணையாக அவரை பின்னால் வைத்துக் கொண்டு போவேன்.  எதிரில் ஒரு வாகனம் வந்தால் போதும், அவரை இறங்கச் சொல்லி வண்டியை ரோட்டின் ஓரத்திற்கே கொண்டு போய் நிறுத்திவிடுவேன்.  இப்படி எவ்வளவு நேரம்தான் ஏறி இறங்கிப் போக முடியும்!.  கொஞ்ச நேரத்தில் பார்த்தால் எதிரில் வரும் வாகனங்களெல்லாம் ஒதுங்கிப் போக எனக்கு ஓட்டுவது எளிதானது.  மாமனார் முன் மானம் போகாமல் இருந்ததற்காக மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே 'ஓய் பார்த்தீரா, எவ்வளவு ஜோரா ஓட்டினேன்" என்றேன் பெருமிதமாக. அவரோ " ஆமாமாம். நான் பின்னாலிருந்து கொண்டு வண்டி டிரைவர்களுக்கு ஒதுங்கிப் போகச் சைகை செய்தேன்.  நீ எளிதாக ஓட்ட முடிந்தது" என்றார்.  இருவரும் வெகு நேரம் இந்தப் பயணத்தைப் பற்றி பேசிச் சிரித்தோம்.

              "ஏண்ணா, நாளைக்குத் திருச்சிக்கு இண்டர்வ்யூ போகவேண்டாமா?  கொஞ்சம் தூங்குங்கோ" என்ற மனைவியின் குரல் கேட்டு வீட்டிற்குள் போய் படுத்துக் கொண்டேன். தூக்கம் பிடிக்கவில்லை.  ஏனோ இன்று என் மாமனாரைப் பற்றிய எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்தன. நெடுந்தூரம் பயணம் செய்ய நேரிடும்போதெல்லாம் அவர் என்னுடன் பின்னால் உட்கார்ந்து வர நாங்கள் கதைகள் பேசிச் செல்வோம்.  வேலையில்லாவிட்டாலும் திருநீர்மலை, திரிசூலம் என்று சென்று நெடு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.  இப்பொழுது மட்டும் அவரிருந்தால் என்னுடைய இன்றைய மனச்சலிப்பை அவருடைய பேச்சால் குறைத்திருப்பார்.  தூக்கம் வராமல் புரண்டு கொண்டே அந்த இரவைக் கழித்தேன்.

             விடிகாலையில் கிளம்பி என்னுடைய மோட்டார் சைக்கிளிலேயே திருச்சி இண்டர்வ்யூவிற்குச் சென்றேன்.  எல்லாம் நன்றாக நடந்தது என்றாலும் நான் பலமுறை வேலை மாறியதைச் சுட்டிக் காட்டி வேலைத் தரத் தயங்கினார்கள். எப்படியோ அவர்களைச் சரிகட்டி கொஞ்சம் குறைந்த சம்பளமானாலும் பரவாயில்லை என்று வேலையை ஒத்துக் கொண்டேன்.
சென்னை திரும்பி வரும்போது மனம் மிகவும் சோர்ந்து, சலிப்படைந்திருந்தது. சே, இன்னும் எத்தனை நாள் இப்படி அடுத்தவனிடம் கைகட்டி வாழ்வது!  எனக்கு மட்டும் ஒரு சரியான வாய்ப்புக் கிடைத்தால் இவர்களையெல்லாம்  overtake செய்து பெரிய பிசினஸ் மேனாகிவிடுவேன்!!

              கோவத்திலும் சலிப்பிலும் தன்னிச்சியாக கியர் மாற்றி வேகமாகச் சென்றேன்.  முன்னால் சென்ற ஸ்கூட்டரை ஒவர்டேக் செய்ததும் மனதில் ஒரு நிறைவு.  எல்லாரையும் வென்று வீழ்த்தியதைப் போல் ஒரு பெருமிதம். ஒரு வெறியுடன் மேலும் சீறிப் பாய்ந்து எனக்கு முன்னால் செல்லும் கார், லாரியென்று எல்லோரையும் முந்தினேன்.  மனம் 'சபாஷ்டா ராஜா. நீ யாரென்று இவர்களெல்லாம் புரிந்து கொள்ளட்டும்" என்று கொக்கரித்தது.  வந்த வேகத்தில் சாலையைக் கடக்கும் ஒரு முதியவருக்காகக் கொஞ்சம் ஒதுங்கும்போது எதிரே வந்த லாரியின் மேல் மோதி அப்படியே தூக்கி எறியப்பட்டேன்.  காற்றில் பறந்து கீழே விழப்போனேன். அப்போது எதிரே தும்பைப்பூ போல் வெள்ளை வேட்டியுடன், அள்ளி முடியப்பட்டக் குடுமியுடன் சிரித்தபடி வந்த என் மாமனார் என்னை இரு கைகளால் தாங்கிக் கொண்டார். ஒரு இனம் புரியாத நிம்மதி என்னை ஆட்கொண்டது.

               பின்னர் நான் படுத்துக் கிடக்க, என் மனைவியும், மாமியாரும் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  குழந்தைகளோ ஒன்றும் புரியாமல் மருட்சியுடன் இருக்கிறார்கள்.  கொஞ்சம் தொலைவில் என் மச்சினர்கள் கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு என்ன ஆயிற்று??.








                மெதுவாகக் கண்களை விழித்துப் பார்க்கிறேன்.  என் அசைவைக் கண்டதும் என் மனைவி ' ஏண்ணா! இப்படி பயமுறுத்திவிட்டீர்களே!' என்று பெரிதாக அழத்தொடங்கினாள்.  குரல் கேட்டு என் குழந்தைகள் 'அப்பா" என்று ஓடிவந்து என்னை அணைத்து கொண்டனர்.  "பார்த்துப் போகவேண்டாமா மாப்பிள்ளை.  உங்க மாமனார் இருந்திருந்தால் பின்னால் உட்கார்ந்து வழிகாட்டியிருப்பார்" என்று மெல்லிய குரலில் என் மாமியார் சொல்லவும் "அவர்தானே அம்மா வழிகாட்டினார்.  இனி ரோட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நிதானத்தைக் கடைபிடிக்க அவர்தானே நல்வழிகாட்டினார்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.  என் குழந்தைகளை அள்ளி அணைத்துக் கொண்டேன்.  எங்களை வருடிச் சென்ற சில்லென்ற காற்றில் கலந்திருந்த என் மாமனாருக்கு மனதால் நன்றி சொன்னேன்.

Friday 22 October 2010

ஹலோ யூரோப் - வெனிஸ்

             வெனிஸ் நகரின் அழகைப் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம் (சமீபத்தில் வந்த 'houseful' ஹிந்தி படத்தில்கூட பார்த்திருக்கலாம்).  அதனால் வெனிஸ் நகரத்திற்குப் போவதை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.  ஆனால் அந்த நகரின் கொடுமையான வெயிலிலும் கொட்டும் வியர்வையிலும் என் ஆவல் நொடியில் காலியாகிவிட்டது. கட்டாயமாக sunscreen lotion, cooling glass, cap, umbrella, ஒரு டவல், நிறைய தண்ணீர் இவை அத்தனையும் எடுத்துக் கொண்டு போனால் ஏதோ கொஞ்சம் பிழைப்போம்.

             வெனிஸ் நகரம் 117 சிறு தீவுகள் இணைந்தது.  இந்தத் தீவுகளை 150 கால்வாய்கள் இணைக்கின்றன.  இந்த கால்வாய்களைக் கடக்க சுமார் 409 சிறு சிறு பாலங்கள் உள்ளன.  இதிலிருந்தே இந்த நகரம் நீரால் சூழ்ந்த நகரம் என ஊகிக்கலாம்.



               நீருக்கடியில் மிக ஆழத்தில் மரக்கட்டைகளை இறக்கி சம நிலைப்படுத்தி அதன்மேல் கட்டிடங்களை எழுப்பி இருக்கிறார்கள். நீருக்கடியில் மரம் உளுத்துப் போகுமே!  ஆனால் நீருக்கடியில் ஆழத்தில் மண்ணுக்குள் புதைத்திருப்பதால் இந்த மரக்கட்டைகள் இத்தனை வருடங்களான பின்னும் உளுத்துப் போகாமலிருக்கின்றன. அதன் மேல் எழுப்பப்பட்ட கட்டிடங்களும் நிலைத்திருக்கின்றன.  ஆனால் எல்லா கட்டிடங்களுமே அதன் பழமையை உணர்த்தும் வகையில் காரை பெயர்ந்தும், விரிசல்களுடனும் இருக்கின்றன. வெள்ள ஆபாயத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் முதல் தளத்தில் யாரும் வசிப்பதில்லை.

            
               நகரெங்கும் சுற்றுலா வந்த வெளி நாட்டவர்களைப் பார்க்க முடிகிறது.  கடைத்தெருக்களிலும் நல்ல கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.  உலகத்திலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப்படும் புகழ்பெற்ற St.Mark square (piazza)இங்குதான் இருக்கிறது. போகும் வழியெல்லாம் கடைகளும், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிறைந்திருக்கிறார்கள். உங்கள் பர்ஸையும், பாஸ்போர்ட்டையும் மிக பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 St.Marks Basilica

               St.Mark square பிற ஐரோப்பிய நகரச் சந்தை சதுக்கத்தைப் போல நிறைய கடைகளும், நீண்ட பெரிய கட்டிடங்களும் கொண்டதாக இருக்கிறது.  ஒருபுறம் பெரிய மேடையும் (நாடகம் மற்றும் கூட்டங்கள் நடத்த) மற்ற புறங்களில் அழகிய நீண்ட கட்டிடங்களும் அமைந்துள்ளன.  ஒரு மூலையில் பெரிய மணிக்கூண்டும் உள்ளது.  இந்த சதுக்கத்தில் மிக அதிக அளவில் உள்ள புறாக்கள் நம் கையில் கொஞ்சம் தானியத்தை வைத்திருந்தால் நம் தலை மற்றும் கையில் வந்தமர்கின்றன. இப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.

          
  வெனிஸ் நகரத்தின் தனிச்சிறப்பே அங்குள்ள gondola (பொன்னியின் செல்வனில் வரும் ஓடம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது) தான்.  அதிலேறி வெனிஸ் நகரக் கால்வாய்களில் பயணம் செய்து அந்நகரின் பழமையானக் கட்டிடங்களைப் பார்ப்பது சுவையான அனுபவமாக இருந்தது. மிகக் குறுகிய கால்வாயிலும் திருப்பங்களிலும் gondola- வை லாவகமாக ஓட்டிச் செல்வதை ரசித்தபடியே நகரை ஒரு சுற்று சுற்றி வந்தோம்.

              Bridge of sigh எனும் பாலம் வெனிஸ் நகரை அந்நகரின் சிறைச்சாலையிருக்கும் தீவோடு இணைக்கிறது.  சிறைக்குச் செல்லும் கைதிகள் இந்தப் பாலத்தின் ஜன்னல் வழியே வெனிஸைப் பார்த்து பெருமூச்சுவிட்டு செல்வார்களாம்.   அதனால் அந்தப் பெயர்.


 இந்தக் காலத்தில், காதலர்கள் இந்த பாலத்தினடியில் மாலை வேளையில் gondola-வில் ஒன்றாகச் சென்றால் காதல் கைகூடும் என்ற மூட நம்பிக்கை இருக்கிறதாம். (ஓடக்காரர்களே கிளப்பிவிட்டிருப்பார்கள்.  சும்மாவா, ஒரு முறை ஓடத்தில் வலம் வர 100 யூரோ!!. ஒரு ஓடத்தில் அதிகபட்சமாக 6 பேர் உட்காரலாம்; அதனால் நாங்கள் அந்த வாடகையைப் பகிர்ந்துகொண்டோம்).

               வெனிஸ் கண்ணாடி பொருட்களின் வேலைப்பாட்டுக்கும் புகழ் பெற்றது.

அங்குள்ள முரானோ கண்ணாடி தொழிற்சாலைக்குச் சென்று அவர்களின் வேலைப்பாடுகளைப் பார்த்தோம்.  கண்ணாடியில் இவ்வளவு கைத்திறனைக் காட்ட முடியுமா என்று வியந்தோம்.  கண்ணாடியில் செய்யப்பட்ட நகைகள் மிகவும் அழகாக இருந்தன.  இத்தாலியில், கல்யாணத்திற்கு நேர்த்தியான வேலைப்பாடு மிக்க கண்ணாடி குவளைகளைப் பரிசாக அளிப்பார்களாம்.
பி.கு: நாங்கள் கேள்விப்பட்ட இன்னொரு சுவையான விஷயம்: இங்கு Bar-ல் நின்று கொண்டு மது அருந்துவது உட்கார்ந்து மது அருந்துவதைவிட செலவு குறைவானதாம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!!!.

Thursday 21 October 2010

ஹலோ யூரோப் - அம்ஸ்டர்டம், மடுரோடம்

             அம்ஸ்டர்டம் நகரம் முழுதும் தெருக்களைப் போல் கால்வாய்கள் குறுக்கும் நெடுக்குமாகக் காணப்படுகிறன. (இந்த கால்வாய்கள் UNESCO heritage site-ஆகப் பதுகாக்கப்படுகின்றன). சிறிய மற்றும் பெரிய படகுகள் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகும்.  நாங்கள் ஒரு ship cruise-ல் நகரைச் சுற்றிப் பார்த்தோம். நகரமே கால்வாய்களால் சூழப்பட்டுள்ளதால் இங்கும் நிறைய மேம்பாலங்களைப் பார்க்கமுடிகிறது. அவற்றுள் skinny bridge பாலம் மிகவும் குறுகலான (அதுவே பெயர்க்காரணமாயிற்று) ஒன்றாக இருந்தபோதிலும் இரவு நேரத்தில் அழகாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.


 இந்த பாலம், காதலர்கள் விரும்பி சந்திக்கும் lovers paradise சொல்கிறார்கள்.  அந்த பாலமே, அம்ஸ்டல் நதியின் இருபுறங்களில் வசித்த இரு சகோதரிகள் தினமும் சந்தித்துக்கொள்ள கட்டப்பட்ட பாலமாம்!! (தமிழ் நாட்டு உடன்பிறவா சகோதரிகள் போல செல்வாக்கு மிக்கவர்கள் போலும்!). அம்ஸ்டர்டம்மில் Nemo learning centre என்ற மிதக்கும் அறிவியல் அருங்காட்சியகமும் உள்ளது.  எங்களுக்கு உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.  உங்களுக்கு அம்ஸ்டர்டம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கட்டயமாக இந்த இடத்தைச் சுற்றிப் பாருங்கள்.

             அம்ஸ்டர்டம் ஷ்கிஃபோல் விமான நிலையத்தின் terminals ரோட்டின் இருபுறங்களிலும் அமைந்திருக்கிறது.  விமானங்கள் ஒரு டெர்மினலிலிருந்து மற்றொன்றிற்கு மேம்பாலங்கள் மேல் ஊர்ந்து செல்கின்றன.  ரோட்டில் நாம் செல்லும்போது நமக்கு மேல் விமானங்கள் ஊர்ந்து செல்லும் காட்சி வினோதமாக இருந்தது.


              பின்னர் அம்ஸ்டர்டம் நகரின் மினியேச்சரான மடுரோடம் சென்றோம்.  அம்ஸ்டர்டம் நகரில் உள்ள ஒவ்வொரு முக்கிய கட்டிடமும், தெருக்களும், அதன் ஒரிஜினல் அளவில் 1/25 அளவோடு இங்கு நிறுவப்பட்டுள்ளன.  அது மட்டுமில்லாமல் ஒரிஜினல் கட்டிடங்கள் எப்படியிருக்குமோ அதை அப்படியே replicate செய்திருக்கிறார்கள். மாடல்களின் நேர்த்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  இந்த மாடல்களெல்லாம் synthetic material-ல் செய்யப்பட்டவையாம். ஒவ்வொரு மாடலையும் செய்ய 1-3 வருடங்கள் வரை தேவைப்படுமாம்.  இந்த நகரை கவனித்துக் கொள்ள 35 பேர் வேலை செய்கிறார்கள்.  ஒரிஜினல் அளவில் 1/25 இருக்க வேண்டும் என்பதால் மரங்களைக் கூட இடைவிடாது இலைகளைக் வெட்டிக்கொண்டே (pruning) இருக்கிறார்கள். மடுரொடமில் சுற்றிப் பார்க்கும்போது மக்களெல்லாம் ஒரு giant போல் தோன்றுகிறார்கள்.

rijks museum model
rijks museum



weighing house and cheese market model

shopping mall model


மடுரோடம் உண்மையில் ஜார்ஜ் மடுரோ என்ற வீரரை கௌரவிக்கும் வகையில் கட்டப்பட்டதாம்.  ஹேக் நகரிலுள்ள பள்ளிக் குழந்தைகளால் இந்த நகருக்கு முனிசிபல் கௌன்சில் அமைக்கப்பட்டுள்ளது.  அவர்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்/மாணவியே ஒவ்வொரு புது மாடலையும் திறந்து வைக்கிறார்.
குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய இடம் மடுரோடம்.

Tuesday 12 October 2010

குவைத்தில் நவராத்திரி

          
               நவராத்திரி எப்பொழுதுமே எனக்கு ஒரு சுவாரசியமான பண்டிகையாகத்தான் இருந்திருக்கிறது.  சிறுவயதில் எங்கள் வீட்டில் கொலு வைக்க வீட்டிலுள்ள மேஜை, பெட்டிகள் மற்றும் பலவற்றைக் கொண்டு கொலுப் படிகள் அமைப்பதில் தொடங்கி கொலு பொம்மைகள் அடுக்குவது வரை உற்சாகமாகச் செய்வோம்.  நானும் என் சகோதரியும் ராதா-க்ருஷ்ணா, மடிசார் மாமி என்று வித விதமாக வேஷமிட்டுக் கொண்டு எங்கள் தெருவில் எல்லோரையும் கொலுவிற்கு அழைப்போம்.(சிறுமிகள் இப்போதும் இந்த மாதிரி வேஷம் போட்டுக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை). எல்லோர் வீட்டிலும் பாடச்சொல்லிக் கட்டாயப் படுத்துவார்கள்.  ஏதோ பெரிய பாடகி போல் நானும் என் சகோதரியும் தாளமெல்லாம் போட்டுப் பாடுவோம் . கொஞ்சம் வளர்ந்த பின் கொலுவிற்கு முன் ரங்கோலி, முத்தாலத்தி (ஜவ்வரிசியால் தட்டில் கோலம் போடுவது) போடுவது என்று பிற விஷயங்களில் ஆர்வம் வந்தது. பொதுவாகவே நவராத்திரி என்பது நமது creativity -ஐ வளர்க்கவும், வெளிக்காட்டவும் ஒரு நல்ல வாய்ப்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து.

              நான் சிறுமியாக இருந்த போதெல்லாம் நவராத்திரி simple-ஆகவேக் கொண்டாடப்பட்டது.  ஒரு பொட்டலத்தில் சுண்டலைக் கட்டி வெத்திலை, பாக்குடன் கொடுப்பார்கள்; பெரியவர்களுக்கு மிஞ்சிப்போனால் ஒரு ரவிக்கை துணி. அவ்வளவுதான்.

             ஆனால் குவைத்தில் நவராத்திரி ஒரு விழாவாகவே நடக்கிறது.  இந்தியாவில் கூட இவ்வளவு விமரிசையாக நடக்கிறதா என்று தெரியவில்லை. இங்கு எல்லோரும் நவராத்திரிக்குக் குடும்ப சகிதமாகவே  அழைக்கிறார்கள்.  குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வயதிற்கேற்ப பரிசுப்பொருள் கொடுக்கிறார்கள்.  ஒரு சுண்டல் மட்டும் கொடுத்து escape பண்ண முடியாது.  குறைந்தது ஒரு ஸ்வீட், ஒரு காரம் இவற்றுடன் சுண்டலும் என்று குறைந்த பட்ச மெனுவில் தொடங்கி தோசை (சுடச் சுட வார்த்து பரிமாறப்படும்!!), இட்லி, பூரி என்று ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு விரிவான மெனுவுடன் பெரிய விருந்தும் நடைபெறும்.  சில வீடுகளில் கச்சேரிகளும் உண்டு.  இங்குள்ள தமிழர்கள் நவராத்திரியை ஒரு பண்டிகையாக மட்டும் கொண்டாடுவதில்லை.  தெரிந்தவர் அனைவரையும் குடும்பத்துடன் கண்டு உரையாடக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கிறார்கள்.  அதனால் ஒவ்வொரு வீட்டிலும் நவராத்திரி சமயத்தில் குறைந்த பட்சம் 25 முதல் 70-75 குடும்பங்களுக்கு வெற்றிலை-பாக்கு மற்றும் விருந்து அளிக்கிறார்கள். பொதுவாக ஜீன்ஸ்-டீ ஷர்ட்டில் உலாவரும் பெண்களெல்லாம் நவராத்திரியில் பட்டுப் புடவை, நகைகள் அணிந்தும் ஆண்கள் குர்தா-பைஜாமா அணிந்தும் வருவார்கள்.  இந்த உடையலங்காரமும், சிறுவர் சிறுமிகளின் கல கலவென்ற ஆரவாரமும் ஒரு கல்யாண வீடுபோன்ற தோற்றத்தை உண்டாக்கிவிடும். நம் வீட்டில் விருந்தளித்த நாள் போக மற்ற நாட்களில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3-8 வீடுகளுக்குப் போக நேர்வதால் இரவு 10.30 மணிவரை நகரமே கலகலவென்று இருக்கும். இது தவிர தாண்டியா நிகழ்ச்சிகளும் நடக்கும்.


               தமிழர்கள் நவராத்திரி விழாவை விமரிசையாகக் கொண்டாடுவது போல் வட இந்தியர்கள் தீபாவளியை ஒட்டி 'open house' என்று வைத்து நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்தளிப்பார்கள்.  அநேகமாக எல்லா இந்தியர்களின் வீடுகளும் serial light அலங்காரத்தில் ஜொலிக்கும்.


தீபாவளியன்றும் மறுநாளும் எல்லோரும் பொது இடத்தில் ஒன்று கூடி வெடிகளை வெடித்து மகிழ்வோம். நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை நாம் இருப்பது குவைத்தா இல்லை இந்தியாவா என்று சந்தேகம் வருமளவு இங்கு நகரமே விழாக்காலம் பூண்டிருக்கும்.

அப்படியே எங்க வீட்டு கொலுவையும் பார்த்துவிட்டு பக்கத்திலுள்ள பிரசாதத்தையும் எடுத்துக்கோங்க!!










Thursday 30 September 2010

எந்திரன்- திரை விமர்சனம்


            

 குவைத்தில் எந்திரன் வியழக்கிழமையே ரிலீசாகிவிட்டது. முதல் நாள் முதல் ஷோ பார்த்த அனுபவம் முதல் முதலாகக் கிடைத்தது.

                முதலில் பாராட்ட நினைப்பது ரஜினிகாந்தின் dedication-ஐத்தான்.  ஒவ்வொரு ஷாட்டிலும் அவரின் உழைப்பும் ஈடுபாடும் தெரிகிறது.  பின் பாதியில் ஷங்கர் விஸ்வரூபம் எடுக்கிறார்.  இயந்திரன் ரஜினியுடன் scientist ரஜினி போராடும் காட்சிகளில் ஷங்கர், ரஜினி & ரஹ்மான் துணையுடன் ருத்ரதாண்டவமே ஆடுகிறார்.  அந்த graphics காட்சிகள் தமிழ் சினிமாவை வேறு ஒரு லெவெலுக்குத் தூக்கிச் சென்றுவிட்டது.

             மோஹஞ்சதாரோ பாடலும் எந்திரா பாடலும் மிக நன்றாகப் படமாக்கப் பட்டுள்ளன.  மொஹஞ்சதாரோ பாடலுக்கு ஐஸ்வர்யா பச்சனின் நடனம் கொஞ்சமும் விரசமில்லாமல் நன்றாக இருந்தது.  எந்திரா (அரிமா அரிமா) பாடலிலும் அவர் நன்றாக நடனம் ஆடியிருக்கிறார்.

           

             ரஜினிகாந்திற்கு மேக்கப் போட்டவரைப் பாராட்ட வேண்டும்.  ஐஸ்வர்யா   பச்சன்கூட சில ஃப்ரேம்களில் வயதானவராகத் தெரிகிறார். ஆனால் ரஜினிகாந்த் இளமையாகத் தெரிகிறார்.

             இவ்வளவு செலவு செய்தவர்கள் கதையோட்டத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.  சுஜாதாவின் இறப்பு கதையோட்டத்தில் வரும் தொய்வில் தெரிகிறது.  ஆனால் graphics சிறப்பால் அதை compensate செய்துவிட்டார் ஷங்கர்.

             தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் மிகுந்த பொருட் செலவில், அதைவிட அதிக அளவு உழைப்பையும் கொட்டி எடுத்திருக்கிறார்கள்.  அவர்களைப் பெருமை படுத்தும் வகையில் நாம் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்ப்போம்.  இந்தப் படத்தைத் திரையரங்கில்  பார்த்தால்தான் ரசிக்கமுடியும்.

எந்திரன்























                  என்ன யோசிக்கிறீங்க?  Photography எனக்குப் பிடித்த ஒன்று.  அதில் எந்திரனை (என் திறனை) வளர்க்க முயற்சி செய்கிறேன்.  எந்திறன் படம் செய்து கிடப்பதே.  எப்படி எந்திறன்? (என் திறன்).


ஹி ஹி, எந்திரன் விளம்பரத்தில் கொஞ்சம் குளிர் காயலாம் என்றுதான்...

Tuesday 28 September 2010

ஹலோ யூரோப் - ப்ரஸ்ஸல்ஸ், அம்ஸ்டர்டம்


             லண்டனிலிருந்து யூரோ ஸ்டார் இரயில் மூலம் ஃப்ரான்ஸ் நாட்டின் calais என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  இங்கலீஷ் கால்வாயின் அடியில் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதை (tunnel)  வழியாக இந்த இரயில் செல்கிறது. இரயில் பெட்டியில் எங்களை பஸ்ஸோடு அப்படியே ஏற்றிவிட்டார்கள்.  நம் வாகனத்தோடு அப்படியே ஏற்றி இறங்குமிடத்தில் வாகனத்தோடு இறங்கிக் கொள்ளலாம்.  இதற்கு முன்பதிவு செய்யவேண்டும்.  கடலுக்கு அடியில் செல்லப் போகிறோம் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.  ஆனால் 98% நேரம் சுரங்கப் பாதையில் செல்வதால் இருட்டைத் தவிர வேறு ஒன்றும் பார்க்கவில்லை.  முழுவதும் சுரங்கப்பாதையில் செல்வதால் ஏதாவது பெரும் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றாமலில்லை.  தீ விபத்தை அறிய கருவிகள் இருப்பதால் பயமில்லை என்கிறார்கள்.  அந்த கருவியின் வேலையில் (interfere) குழப்பம் உண்டு செய்யும் என்பதால் (flash)ஃபோட்டோ எடுக்கக் கூட அனுமதியில்லை. பயணத்தின்போது நாம் நமது வாகனத்திலிருந்து இறங்கி இரயில் முழுவதும் நடக்க வசதி உள்ளது. இந்தப் பயணம் த்ரில்லாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

             ஃப்ரான்ஸில் இறங்கினாலும் அங்கிருந்து நாங்கள் முதலில் பெல்ஜியம் சென்றோம்.  முதலில் ப்ரஸ்ஸல்ஸிலுள்ள 'அட்டொமியம்' (atomium) பார்த்தோம்.



 ப்ரஸ்ஸல்ஸில் 1958-ம் வருடம் உலக வர்த்தகக் கண்காட்சியின்போது கட்டப்பட்டதாம் இது.  இரும்பு மூலக்கூறு (ஒன்றுமில்லீங்க, a molecule of Iron என்பதைத்தான் தமிழில் எழுதினேன்!!) வடிவத்தில் அமைக்கப்பட்டது இந்த அட்டோமியம்.  அதன் ஒவ்வொரு கோளத்திலும் ஒரு கண்காட்சி இருப்பதாகச் சொல்கிறார்கள்.  அடித்த வெயிலில் அலுமினியத்தால் செய்யப்பட்ட அந்த அட்டோமியம் மிகவும் சூடாக இருக்கும் (குளிர்சாதன வசதிக்கும் மீறி) என்று சொல்கிறார்கள்.  நாங்கள் வெளியிலிருந்து ஃபோட்டோ மட்டும் எடுத்துக் கொண்டோம்.  அதன் மேலுள்ள கோளத்தின் முனையிலிருந்து( சுமார் 102 மீ உயரம்) கீழே கயிற்றில் சறுக்கி சாகசம் புரிந்துகொண்டிருந்தனர் சிலர்.
அதை ரசித்துவிட்டு பஸ்ஸிலேறி ப்ரஸ்ஸல்ஸின் சந்தை சதுக்கத்தை (market square) நோக்கிப் போனோம். நகரத்தின் மையத்திலிருந்த market square மிகப் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது.



கட்டிடங்களின் அழகு மனதைப் பறிப்பதாக இருந்தது.  பண்டைக் காலத்திலிருந்து இன்று வரை பல பொதுக்கூட்டங்கள், பெரு நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் இந்த market square-ல்தான் நடக்குமாம்.  அங்கு எல்லா நேரத்திலும் கொஞ்சம் கூட்டமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

 இங்கிருந்து சிறிது தொலைவில்தான் பெல்ஜியத்தின் icon ஆகச் சொல்லப்படும் manniken piss என்ற சிலை இருக்கிறது.


 இந்த சிலை மிகவும் சிறியது.  இதைப் பற்றி பல கதைகள் சொல்லப்பட்டாலும் இது எப்படி ஒரு நாட்டின் icon ஆகக் கருதப்படுகிறது என்ற வியப்பு நீங்கவில்லை.  இந்த சிலைக்கு விதவிதமான அலங்கார ஆடைகள் இருக்கின்றனவாம்.  அந்த ஆடைகளுக்காக டவுன் ஹாலில் ஒரு அருங்காட்சியகமும் இருக்கிறதாம்!!!

               மூட நம்பிக்கைகள் இந்தியாவில்தான் அதிகம் என்று நினைத்திருந்தேன்.   யூரோப்பிலும் சில நகரங்களில் மக்களின் மூட நம்பிகையைப் பற்றி அறிய முடிந்தது.  Market square அருகிலேயே உள்ள இந்த சிலையின் பாதங்களைத் தடவிச் சென்றால் அதிர்ஷ்ட்டம் கிட்டும் என்று சொல்கிறார்கள்.


 அங்கு வரும் அனைவரும் அந்த சிலையை வருடிவிட்டுச் செல்வதைப் பார்க்க முடிந்தது.
.

               ப்ரஸ்ஸல்ஸ், லேஸ், சாக்லேட், waffels இவற்றிற்குப் புகழ் பெற்றது.  லேஸில் பின்னப்ப்ட்ட பல கலைப் பொருட்களை இங்கு வாங்கலாம்.

 waffels

waffels சாப்பிட்டோம்.  எங்களுக்கு என்னவோ அதன் சுவை பிடிக்கவில்லை.

              ப்ரஸ்ஸல்ஸ் நகர வீதியில் சுற்றிவிட்டு நெதர்லேண்ட் (நீதர்லேண்ட் என்றுதான் சொல்கிறார்கள்) நோக்கிப் போனோம். ஹாலந்த் என்றும் அழைக்கப்படும் நீதர்லேண்ட்ஸில் அம்ஸ்டர்டம், ஹேக் போன்ற நகரங்களை நன்றாகச் சுற்றிப் பார்த்தோம்.

முதலில் அம்ஸ்டர்டம் பற்றிய சில சுவையான செய்திகள்:

              நீதர்லேண்ட் நாடுதான் உலகிலேயே அதிக அளவு மக்கள் நெருக்கம் கொண்டது. மக்கள் நெருக்கத்தாலும், உள்ளேறி வரும் கடலைத் தடுக்கவும் land reclamation மூலம் கடல் நீரைத் தள்ளி நிலத்தை வாழ மற்றும் பயிர் செய்ய வசதியாக்கியிருக்கிறார்கள்.

dykes

கடல் நீரைப் புறம் தள்ள dykes கட்டி தண்ணீரைக் காற்றாலைகளின் உதவி கொண்டு கால்வாய்காளில் விட்டு நிலத்தை வாழ்வதற்கேற்றவாறு பண்படுத்தியிருக்கிறார்கள். இப்பொழுது காற்றாலைகளின் வேலையைப் பெட்ரோலால் இயங்கும் பம்புகளால் செய்கிறார்கள்.

               இந்த நாடு டூலிப் மலர்களுக்குப் பெயர்போனது.  உலகில் ஏற்றுமதி செய்யப்படும் மலர்களில் பெருமளவு இங்கிருந்துதான் செய்யப்படுகிறது.(திருப்பதி வெங்கடமலையானுக்கும் இங்கிருந்து பூ வருகிறது என்று கேள்விப்பட்டேன்!).

               அம்ஸ்டர்டமில் மக்கள் சைக்கிளைத்தான் அதிக அளவு உபயோகிக்கிறார்கள்.  முதன்முதலில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காகத் தனி பாதை அமைக்கப்பட்டதும் இங்குதான் (கி.பி.1930).  நகரத்தின் இடையில் தெருக்கள் போல கால்வாய்கள் இருப்பதால் படகையும் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

               ஹை வேயில் செல்லும் வாகனங்களின் இரைச்சலால் மக்கள் பாதிக்கப்படாமலிருக்க ரோட்டின் இரு பக்கமும் fiber wall அமைத்திருக்கிறார்கள்.


 அரசுக்குத்தான் மக்கள் மேல் எத்தனை கரிசனம்!!.

             இங்கு குளிர் காலங்களில் மக்கள் பெரும்பாலும் மரத்தாலான காலணிகளையே அணிகிறார்கள்.  இந்த ஷூக்கள் பல வண்ணங்களில் கண்ணைக் கவருவதாக இருக்கின்றன.



பண்டை நாட்களில் தன் மனம் கவர்ந்த பெண்ணுக்குத் தன் கையாலேயே ஷூ செய்து அவள் வீட்டு வாயிலில் வைப்பார்களாம் காதலர்கள்.  அவள் அந்த ஷீவை ஏற்றுக் கொண்டால் காதலுக்குச் சம்மதம் என்று பொருளாம்.  (இந்தக் காலத்தில் ஷூவுக்குள் பேங்க் கணக்குப் புத்தகத்தையும் வைக்க வேண்டியிருக்கும்!!).

              முன் காலத்தில் இங்கு வீட்டின் வாயிலின் அளவை வைத்து வரி வசூலிக்கப்பட்டதாம்.  அதனால் பெரும்பாலான வீடுகளின் வாசற்கதவு மிகவும் சிறியதாகவே இருக்கும்.  பின் எப்படி வீட்டிற்குத் தேவையான furnitures-ஐ வீட்டுக்குள் கொண்டு செல்வது?  ஜன்னல் வழியாகத்தான் கொண்டு வருவார்களாம்.



அதற்கு உதவும் வகையில் கட்டிடங்களின் மேலே ஒரு கொக்கி உள்ளது.  அதன் மூலம் கயிற்றைக் கட்டி, கயிற்றில் furnitures -ஐக் கட்டித் தூக்கி ஜன்னல் வழியே வீட்டிற்குள் இறக்குவார்களாம். (நம்மாட்களாக இருந்தால் வீட்டிற்கு வாசற் கதவே வைக்காமல் ஜன்னல் வழியே எகிறி குதித்துப் போயிருப்பார்கள்!).

அம்ஸ்டர்டம்மின் அடையாளமாகக் கருதப்படுவது அந்த நகரிலுள்ள காற்றாலைகள்தான் (windmill).


 முற்காலத்தில் நீரை அகற்ற கட்டப்பட்ட அவை பெரும்பாலும் பயன்பாடு இழந்து போனதால் அழிக்கப்பட்டுவிட்டன.  இருக்கும் 1000 காற்றாலைகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்ததனால் அவை பிழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  காற்றாலைகளின் பருத்த அடிப்பாகத்தில் கதவமைத்து பல ஏழை மக்களுக்கான குடியிருக்கும் வீடுகளாக மாற்ற்றிக் கொண்டுள்ளனர்.

               அம்ஸ்டர்டம் நகரைப் பற்றியும், மடுரோடம் என்ற சின்னஞ்சிறிய (miniature) அம்ஸ்டர்டம் நகர் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.