Monday 17 September 2012

ஆறில் சனி

         ஒரு குடும்பத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்தான் என்று மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.

        ஆறு மனமே ஆறு!! இதனால் எத்தனை நன்மைகளிருக்கின்றன தெரியுமா? தாய்மார்களே, சமையல் எரிவாயுவைச் சேமிக்கும் பொருட்டு வெகு நேரம் கொதிக்க வைப்பது, வெகு நேரம் வறுப்பது எல்லாம் கட். அதனால் உங்களுக்கு டிவி சீரியல் பார்க்க அதிக நேரம் கிடைக்குமே!!.

        ஆறு சிலிண்டர்தான் என்றால் மீதி நாளுக்கு எப்படி சமைப்பது? சமைக்காமல் அப்படியே காய் கனிகளைச் சாப்பிட வேண்டியதுதான்!!. இதனால் எவ்வளவு நன்மைகள் -- உடல் எடை குறையும்; சர்க்கரை வியாதி, cholesterol எல்லாம் கட்டுக்கு வரும்; நேரம் மிச்சமாகும்.

         வயசானவங்களுக்கு இப்படி என்றால் இளைய தலைமுறைக்கு இன்னும் பல லாபங்கள். மனதிற்குப் பிடித்ததை ஹோட்டலில் சாப்பிடலாம்.  யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

        அரசாங்கத்துக்கும் எவ்வளவு நன்மை!!  இப்படி ஹோட்டலில் சாப்பிடுவது அதிகமானால் hotel industry வளரும்;  நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். ஹோட்டல் சாப்பாட்டில் வயறு கோளாறு வந்தால் ஹாஸ்பிட்டல் போவார்கள். மருத்துவத் துறையும் வளரும்!!!! 

       சமையல் கேசும் அதிகம் கிடைக்காது;  induction  அடுப்பு வேலை செய்ய மின்சாரமும் தொடர்ந்து கிடைக்காது என்றால் மக்கள் என்ன செய்வார்கள்?  லங்கணம் பரம ஔஷதம் என்று பாதி நாள் சாப்பிடாமல் இருக்க வேண்டியதுதான். இதனால் செலவும் கம்மி!! இந்தியர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று ஒபாமா உட்பட பல பேரிடம் ஏச்சு வாங்க வேண்டாம்.

         அதை எல்லாம் விட இந்த கேஸ் சிலிண்டர் கொண்டுதரும் தொழிலாள வர்க்கத்துக்குதான் எத்தனை மவுசு வரும்!!.  கற்பனை பண்ணிப் பாருங்கள்.

தலை தீபாவளிக்குச் ஜவுளி எடுத்து வந்த கணவனிடம் மனைவி கேட்கிறார்:
மனைவி: என்னங்க.. மாப்பிள்ளைக்கு இவ்வளவு பணத்தில் வான்ஹுசைன் சட்டை வாங்கியிருகீங்களே, ரொம்ப சந்தோஷங்க!!
கணவன்: அடியே, அது கேஸ் சிலிண்டர்காரருக்கு.  அதைப் பத்திரமா வை.  மாப்பிள்ளைக்கு முறுக்கே அவர் தயவில்தான் வரும் தெரிஞ்சிக்கோ!

கிராமத்தில் புதியதாக வந்தவர்: அது யாருங்க, MP யா இல்ல  MLA வா? எல்லாரும் வணக்கம் சொல்றாங்க?
நண்பர்: அதுதான் எங்க கிராமத்தில் கேஸ் சிலிண்டர் போடறவரு. நீங்களும் ஒரு வணக்கம் வைங்க, உங்களுக்கு உதவும்.

        அது சரி அது என்ன கணக்கு, ஐந்து, பத்து இல்லை, ஒரு டஜன் என்று round fingure ஆக இல்லாமல் ஆறு சிலிண்டர்கள் என்று முடிவு செஞ்சாங்க? ஏன்னா, எட்டில் சனி, ஏழரை சனி எல்லாம் கேள்விப்பட்டிருக்கோம், இப்ப இந்தியர்களுக்கு ஆறில் சனி!!! கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைச் சரி செய்ய முடியாமல் 6-8 மணி நேரம் வரை மின் தட்டுப் பாடு அமலுக்கு வந்தது. இப்போது எரிவாயு தட்டுப்பாட்டைச் சரி செய்ய முடியாமல் கேஸ் சிலிண்டருக்கு ரேஷன் வந்து விட்டது. இனிமேல் எந்த பிரச்சினையையும் சரி செய்ய யோசிக்காமல் குடிமக்களின் தேவைகளை அடக்கி சர்வாதிகாரமாக ஆளத் தயங்க மாட்டார்கள் போலிருக்கிறது. இந்திய மக்களை ஆறில் சனி பிடித்திருப்பதால் இனி இப்படியும் சட்டங்கள் வரலாம்:

1.பல இடங்களில் பருவ மழை பொய்த்து இருப்பதால் மக்களே ஒரு நாளுக்கு ஒரு குடும்பத்துக்கு ஆறு லிட்டர் தண்ணி தான் வழங்கப்படும்.
2.விளைச்சல் குறைவால் மக்களே, ஒரு குடும்பத்துக்கு வருடத்திற்கு 6 Kg அரிசிதான் வழங்கப்படும்.
3.ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம்தான் மின்சாரம் (க்கும், அதுதான் ஏற்கனவே இருக்கே!!!).
4.கடுப்பில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் சார்பாக ஒரு சட்டம்: ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம்தான் டிவி சீரியல் பார்க்கலாம்.
5.வெறுப்பிலிருக்கும் மக்கள் சார்பாக ஒரு சட்டம்: ஆறு கோடிக்கு மேல் எந்த அரசியல்வாதியும் ஊழல் செய்யக் கூடாது. ஆறு வருஷத்துக்கு மேல் எந்த அரசியல்வாதியும் அரசியலில் இருக்கக்கூடாது.