Tuesday 26 October 2010

Happy birthday

            



                இன்றுடன் எண்ணச் சிதறலுக்கு ஓராண்டு நிறைவு பெறுகிறது. எண்ணச்சிதறலின் Happy birthday அன்று நான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி மேலும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                எழுத ஆசையிருந்தும் முடியுமா என்ற தயக்கம் கொண்டிருந்த என் போன்ற எத்தனையோ பேரை எழுதத் தூண்டிய google eblogger-க்கு முதல் நன்றி.

               எண்ணச்சிதறலைத் தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடும் அப்பாதுரை, சாய்ராம், ஸ்ரீராம், LK, முத்துலக்ஷ்மி, மீனாக்ஷி, சாந்தி அவர்களுக்கும், அதன் followers-க்கும், படித்து என்னிடம் நேரிலும், இமெயிலிலும் தொடர்பு கொள்ளும் என் நண்பர்களுக்கும் நன்றி.



என்னடா பொல்லாத வாழ்க்கை

        
              சாப்பிட்டு முடித்தபின் வெற்றிலை பாக்குப் பெட்டியுடன், ஈஸிசேரையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.  ஈஸிசேரில் சாய்ந்தபடி வானத்திலுள்ள நட்சத்திரங்களை வெறித்து நோக்கினேன். உள்ளே 'கடவுளே, அவருக்கு இந்த வேலை எப்படியாவது கிடைக்கட்டும்' என்று குழந்தைகளுக்குத் தெரியாவண்ணம் கண்ணீர் சிந்தி வேண்டிக்கொண்டிருப்பாள் என் மனைவி.   என்னவோ எல்லாமே சலிப்பாக இருந்தது.  இத்துடன் நான் வேலையை உதறிவிட்டு வருவது பத்தாவது முறை.  எதிர்த்த வீட்டு ராமசாமி போலவோ, அடுத்த வீட்டு பத்மநாபன் போலவோ என்னால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்து போக முடிவதில்லை.

            Born with the silver spoon என்பார்களே அப்படி செல்வத்தில் பிறந்து திகட்டத் திகட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவன். வாழ்க்கையின் வலி அறியாமல் வளர்ந்தவன்.  நன்றாக போய்க்கொண்டிருந்த என் தந்தையின் பிஸினஸ் என்னுடைய தவறான ventures மூலம் நிர்மூலமானது.  இன்று என் மனைவி, இரு குழந்தைகளுக்காக இன்னொருவனிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டிய நிலமை. ஊழல், மரியாதையில்லாத செய்கை, மற்றவர்களின் அதிகப் பிரஸங்கித்தனமான/ முட்டாள்தனமான பேச்சு என்று ஏதாவது ஒரு விஷயம் என் மூக்கின்மேல் எப்போதும் இருக்கும் கோவத்தை விசிறிவிட நான் பத்து முறை வேலை மாறியாகிவிட்டது.

              நினைத்தால் சலிப்பாக இருக்கிறது. எனக்கு நன்றாகக் கதை எழுத வரும்.  மிக அழகாக ஓவியமும் வரைய வரும்.  ஆனால் இதில் எதிலுமே பெரு வளர்ச்சி பெறவில்லை.  எந்த வேலையில் சேர்ந்தாலும் அதில் முதன்மையாக வரக்கூடிய திறமை, மேலதிகாரியின் பாராட்டைப் பெறுமளவு உழைப்பு எல்லாமிருந்தும் என்னால் ஒரு வேலையிலும் நிலைத்து நிற்க முடியவில்லையே. இன்னும் எத்தனை நாள் இப்படிப் போராடுவது.  என்னடா இது பொல்லாத வாழ்க்கை!!

            இந்த மாதிரி மனம் சலிப்படையும்பொதெல்லாம் எனக்கு ஆறுதலாயிருக்கும் என் மாமனாரை நினைத்துக் கொள்கிறேன்.  ஒரு நண்பன் போல் புரிந்து கொள்ளுதலும், ஒரு சகோதரனைப் போல் ஆதரிப்பதிலும் அவர் எனக்குப் பெரும் பலமாக இருந்தார்.  எனக்குச் சரிவு ஏற்படும் போது என்னை ஊக்கப்படுத்துவார்.  அவர் என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் சாப்பிட்டபின் இது போல் வெளியில் அமர்ந்து விடியும் வரை பேசுவோம். என் வருங்காலம், அவரின் இறந்த காலக் கதைகள் என்று எங்களுக்குப் பேச விஷயத்திற்குக் குறைவே இல்லை. அவர்தான் எத்தனை உயர்ந்த மனிதர். தன்னைச் சேர்ந்தவர்களின் முகத்தில் மகிழ்சியைக் கொண்டு வர எதுவும் செய்யத் தயங்கமாட்டார். யாருக்கும் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் பாரத்தைக் கூடக் கொடுக்காமல் தனிமையில் மாரடைப்பால் காலமானவர். அவர் இறந்தது என்னால் ஏற்க முடியாத பெரும் இழப்பு. அவரிடம் பேசும்போதெல்லாம் என் மனச்சுமை குறைந்திருக்கிறது.

            'அப்பா, நேரமாச்சு, தூங்கலாம் வா' என்ற மகளின் குரல் என் நினைவுகளைக் கலைத்தது. என் மோட்டார் சைக்கிளில் சாய்ந்த வண்ணம் என்னைக் கூப்பிட்டாள் அவள். மோட்டர் சைக்கிள் மீண்டும் என் நினைவுகளைக் கிளறியது.  மார்கெட்டிங் துறையில் வேலை கிடைத்தவுடன் இந்த மோட்டார் சைக்கிளை வாங்க பணம் ஏற்பாடு செய்தவர் என் மாமனார்தான். அதில் போக எனக்கு முதலில் கொஞ்சம் பயம்.  அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'ஓய், நீர் சும்மாதானே இருக்கீர். என்னோட வாருமேன்" என்று துணையாக அவரை பின்னால் வைத்துக் கொண்டு போவேன்.  எதிரில் ஒரு வாகனம் வந்தால் போதும், அவரை இறங்கச் சொல்லி வண்டியை ரோட்டின் ஓரத்திற்கே கொண்டு போய் நிறுத்திவிடுவேன்.  இப்படி எவ்வளவு நேரம்தான் ஏறி இறங்கிப் போக முடியும்!.  கொஞ்ச நேரத்தில் பார்த்தால் எதிரில் வரும் வாகனங்களெல்லாம் ஒதுங்கிப் போக எனக்கு ஓட்டுவது எளிதானது.  மாமனார் முன் மானம் போகாமல் இருந்ததற்காக மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே 'ஓய் பார்த்தீரா, எவ்வளவு ஜோரா ஓட்டினேன்" என்றேன் பெருமிதமாக. அவரோ " ஆமாமாம். நான் பின்னாலிருந்து கொண்டு வண்டி டிரைவர்களுக்கு ஒதுங்கிப் போகச் சைகை செய்தேன்.  நீ எளிதாக ஓட்ட முடிந்தது" என்றார்.  இருவரும் வெகு நேரம் இந்தப் பயணத்தைப் பற்றி பேசிச் சிரித்தோம்.

              "ஏண்ணா, நாளைக்குத் திருச்சிக்கு இண்டர்வ்யூ போகவேண்டாமா?  கொஞ்சம் தூங்குங்கோ" என்ற மனைவியின் குரல் கேட்டு வீட்டிற்குள் போய் படுத்துக் கொண்டேன். தூக்கம் பிடிக்கவில்லை.  ஏனோ இன்று என் மாமனாரைப் பற்றிய எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்தன. நெடுந்தூரம் பயணம் செய்ய நேரிடும்போதெல்லாம் அவர் என்னுடன் பின்னால் உட்கார்ந்து வர நாங்கள் கதைகள் பேசிச் செல்வோம்.  வேலையில்லாவிட்டாலும் திருநீர்மலை, திரிசூலம் என்று சென்று நெடு நேரம் பேசிக் கொண்டிருப்போம்.  இப்பொழுது மட்டும் அவரிருந்தால் என்னுடைய இன்றைய மனச்சலிப்பை அவருடைய பேச்சால் குறைத்திருப்பார்.  தூக்கம் வராமல் புரண்டு கொண்டே அந்த இரவைக் கழித்தேன்.

             விடிகாலையில் கிளம்பி என்னுடைய மோட்டார் சைக்கிளிலேயே திருச்சி இண்டர்வ்யூவிற்குச் சென்றேன்.  எல்லாம் நன்றாக நடந்தது என்றாலும் நான் பலமுறை வேலை மாறியதைச் சுட்டிக் காட்டி வேலைத் தரத் தயங்கினார்கள். எப்படியோ அவர்களைச் சரிகட்டி கொஞ்சம் குறைந்த சம்பளமானாலும் பரவாயில்லை என்று வேலையை ஒத்துக் கொண்டேன்.
சென்னை திரும்பி வரும்போது மனம் மிகவும் சோர்ந்து, சலிப்படைந்திருந்தது. சே, இன்னும் எத்தனை நாள் இப்படி அடுத்தவனிடம் கைகட்டி வாழ்வது!  எனக்கு மட்டும் ஒரு சரியான வாய்ப்புக் கிடைத்தால் இவர்களையெல்லாம்  overtake செய்து பெரிய பிசினஸ் மேனாகிவிடுவேன்!!

              கோவத்திலும் சலிப்பிலும் தன்னிச்சியாக கியர் மாற்றி வேகமாகச் சென்றேன்.  முன்னால் சென்ற ஸ்கூட்டரை ஒவர்டேக் செய்ததும் மனதில் ஒரு நிறைவு.  எல்லாரையும் வென்று வீழ்த்தியதைப் போல் ஒரு பெருமிதம். ஒரு வெறியுடன் மேலும் சீறிப் பாய்ந்து எனக்கு முன்னால் செல்லும் கார், லாரியென்று எல்லோரையும் முந்தினேன்.  மனம் 'சபாஷ்டா ராஜா. நீ யாரென்று இவர்களெல்லாம் புரிந்து கொள்ளட்டும்" என்று கொக்கரித்தது.  வந்த வேகத்தில் சாலையைக் கடக்கும் ஒரு முதியவருக்காகக் கொஞ்சம் ஒதுங்கும்போது எதிரே வந்த லாரியின் மேல் மோதி அப்படியே தூக்கி எறியப்பட்டேன்.  காற்றில் பறந்து கீழே விழப்போனேன். அப்போது எதிரே தும்பைப்பூ போல் வெள்ளை வேட்டியுடன், அள்ளி முடியப்பட்டக் குடுமியுடன் சிரித்தபடி வந்த என் மாமனார் என்னை இரு கைகளால் தாங்கிக் கொண்டார். ஒரு இனம் புரியாத நிம்மதி என்னை ஆட்கொண்டது.

               பின்னர் நான் படுத்துக் கிடக்க, என் மனைவியும், மாமியாரும் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  குழந்தைகளோ ஒன்றும் புரியாமல் மருட்சியுடன் இருக்கிறார்கள்.  கொஞ்சம் தொலைவில் என் மச்சினர்கள் கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு என்ன ஆயிற்று??.








                மெதுவாகக் கண்களை விழித்துப் பார்க்கிறேன்.  என் அசைவைக் கண்டதும் என் மனைவி ' ஏண்ணா! இப்படி பயமுறுத்திவிட்டீர்களே!' என்று பெரிதாக அழத்தொடங்கினாள்.  குரல் கேட்டு என் குழந்தைகள் 'அப்பா" என்று ஓடிவந்து என்னை அணைத்து கொண்டனர்.  "பார்த்துப் போகவேண்டாமா மாப்பிள்ளை.  உங்க மாமனார் இருந்திருந்தால் பின்னால் உட்கார்ந்து வழிகாட்டியிருப்பார்" என்று மெல்லிய குரலில் என் மாமியார் சொல்லவும் "அவர்தானே அம்மா வழிகாட்டினார்.  இனி ரோட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நிதானத்தைக் கடைபிடிக்க அவர்தானே நல்வழிகாட்டினார்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.  என் குழந்தைகளை அள்ளி அணைத்துக் கொண்டேன்.  எங்களை வருடிச் சென்ற சில்லென்ற காற்றில் கலந்திருந்த என் மாமனாருக்கு மனதால் நன்றி சொன்னேன்.

Friday 22 October 2010

ஹலோ யூரோப் - வெனிஸ்

             வெனிஸ் நகரின் அழகைப் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம் (சமீபத்தில் வந்த 'houseful' ஹிந்தி படத்தில்கூட பார்த்திருக்கலாம்).  அதனால் வெனிஸ் நகரத்திற்குப் போவதை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்.  ஆனால் அந்த நகரின் கொடுமையான வெயிலிலும் கொட்டும் வியர்வையிலும் என் ஆவல் நொடியில் காலியாகிவிட்டது. கட்டாயமாக sunscreen lotion, cooling glass, cap, umbrella, ஒரு டவல், நிறைய தண்ணீர் இவை அத்தனையும் எடுத்துக் கொண்டு போனால் ஏதோ கொஞ்சம் பிழைப்போம்.

             வெனிஸ் நகரம் 117 சிறு தீவுகள் இணைந்தது.  இந்தத் தீவுகளை 150 கால்வாய்கள் இணைக்கின்றன.  இந்த கால்வாய்களைக் கடக்க சுமார் 409 சிறு சிறு பாலங்கள் உள்ளன.  இதிலிருந்தே இந்த நகரம் நீரால் சூழ்ந்த நகரம் என ஊகிக்கலாம்.



               நீருக்கடியில் மிக ஆழத்தில் மரக்கட்டைகளை இறக்கி சம நிலைப்படுத்தி அதன்மேல் கட்டிடங்களை எழுப்பி இருக்கிறார்கள். நீருக்கடியில் மரம் உளுத்துப் போகுமே!  ஆனால் நீருக்கடியில் ஆழத்தில் மண்ணுக்குள் புதைத்திருப்பதால் இந்த மரக்கட்டைகள் இத்தனை வருடங்களான பின்னும் உளுத்துப் போகாமலிருக்கின்றன. அதன் மேல் எழுப்பப்பட்ட கட்டிடங்களும் நிலைத்திருக்கின்றன.  ஆனால் எல்லா கட்டிடங்களுமே அதன் பழமையை உணர்த்தும் வகையில் காரை பெயர்ந்தும், விரிசல்களுடனும் இருக்கின்றன. வெள்ள ஆபாயத்திலிருந்து தப்பிக்க பெரும்பாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் முதல் தளத்தில் யாரும் வசிப்பதில்லை.

            
               நகரெங்கும் சுற்றுலா வந்த வெளி நாட்டவர்களைப் பார்க்க முடிகிறது.  கடைத்தெருக்களிலும் நல்ல கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.  உலகத்திலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப்படும் புகழ்பெற்ற St.Mark square (piazza)இங்குதான் இருக்கிறது. போகும் வழியெல்லாம் கடைகளும், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் நிறைந்திருக்கிறார்கள். உங்கள் பர்ஸையும், பாஸ்போர்ட்டையும் மிக பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 St.Marks Basilica

               St.Mark square பிற ஐரோப்பிய நகரச் சந்தை சதுக்கத்தைப் போல நிறைய கடைகளும், நீண்ட பெரிய கட்டிடங்களும் கொண்டதாக இருக்கிறது.  ஒருபுறம் பெரிய மேடையும் (நாடகம் மற்றும் கூட்டங்கள் நடத்த) மற்ற புறங்களில் அழகிய நீண்ட கட்டிடங்களும் அமைந்துள்ளன.  ஒரு மூலையில் பெரிய மணிக்கூண்டும் உள்ளது.  இந்த சதுக்கத்தில் மிக அதிக அளவில் உள்ள புறாக்கள் நம் கையில் கொஞ்சம் தானியத்தை வைத்திருந்தால் நம் தலை மற்றும் கையில் வந்தமர்கின்றன. இப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ள நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர்.

          
  வெனிஸ் நகரத்தின் தனிச்சிறப்பே அங்குள்ள gondola (பொன்னியின் செல்வனில் வரும் ஓடம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது) தான்.  அதிலேறி வெனிஸ் நகரக் கால்வாய்களில் பயணம் செய்து அந்நகரின் பழமையானக் கட்டிடங்களைப் பார்ப்பது சுவையான அனுபவமாக இருந்தது. மிகக் குறுகிய கால்வாயிலும் திருப்பங்களிலும் gondola- வை லாவகமாக ஓட்டிச் செல்வதை ரசித்தபடியே நகரை ஒரு சுற்று சுற்றி வந்தோம்.

              Bridge of sigh எனும் பாலம் வெனிஸ் நகரை அந்நகரின் சிறைச்சாலையிருக்கும் தீவோடு இணைக்கிறது.  சிறைக்குச் செல்லும் கைதிகள் இந்தப் பாலத்தின் ஜன்னல் வழியே வெனிஸைப் பார்த்து பெருமூச்சுவிட்டு செல்வார்களாம்.   அதனால் அந்தப் பெயர்.


 இந்தக் காலத்தில், காதலர்கள் இந்த பாலத்தினடியில் மாலை வேளையில் gondola-வில் ஒன்றாகச் சென்றால் காதல் கைகூடும் என்ற மூட நம்பிக்கை இருக்கிறதாம். (ஓடக்காரர்களே கிளப்பிவிட்டிருப்பார்கள்.  சும்மாவா, ஒரு முறை ஓடத்தில் வலம் வர 100 யூரோ!!. ஒரு ஓடத்தில் அதிகபட்சமாக 6 பேர் உட்காரலாம்; அதனால் நாங்கள் அந்த வாடகையைப் பகிர்ந்துகொண்டோம்).

               வெனிஸ் கண்ணாடி பொருட்களின் வேலைப்பாட்டுக்கும் புகழ் பெற்றது.

அங்குள்ள முரானோ கண்ணாடி தொழிற்சாலைக்குச் சென்று அவர்களின் வேலைப்பாடுகளைப் பார்த்தோம்.  கண்ணாடியில் இவ்வளவு கைத்திறனைக் காட்ட முடியுமா என்று வியந்தோம்.  கண்ணாடியில் செய்யப்பட்ட நகைகள் மிகவும் அழகாக இருந்தன.  இத்தாலியில், கல்யாணத்திற்கு நேர்த்தியான வேலைப்பாடு மிக்க கண்ணாடி குவளைகளைப் பரிசாக அளிப்பார்களாம்.
பி.கு: நாங்கள் கேள்விப்பட்ட இன்னொரு சுவையான விஷயம்: இங்கு Bar-ல் நின்று கொண்டு மது அருந்துவது உட்கார்ந்து மது அருந்துவதைவிட செலவு குறைவானதாம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!!!.

Thursday 21 October 2010

ஹலோ யூரோப் - அம்ஸ்டர்டம், மடுரோடம்

             அம்ஸ்டர்டம் நகரம் முழுதும் தெருக்களைப் போல் கால்வாய்கள் குறுக்கும் நெடுக்குமாகக் காணப்படுகிறன. (இந்த கால்வாய்கள் UNESCO heritage site-ஆகப் பதுகாக்கப்படுகின்றன). சிறிய மற்றும் பெரிய படகுகள் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகும்.  நாங்கள் ஒரு ship cruise-ல் நகரைச் சுற்றிப் பார்த்தோம். நகரமே கால்வாய்களால் சூழப்பட்டுள்ளதால் இங்கும் நிறைய மேம்பாலங்களைப் பார்க்கமுடிகிறது. அவற்றுள் skinny bridge பாலம் மிகவும் குறுகலான (அதுவே பெயர்க்காரணமாயிற்று) ஒன்றாக இருந்தபோதிலும் இரவு நேரத்தில் அழகாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.


 இந்த பாலம், காதலர்கள் விரும்பி சந்திக்கும் lovers paradise சொல்கிறார்கள்.  அந்த பாலமே, அம்ஸ்டல் நதியின் இருபுறங்களில் வசித்த இரு சகோதரிகள் தினமும் சந்தித்துக்கொள்ள கட்டப்பட்ட பாலமாம்!! (தமிழ் நாட்டு உடன்பிறவா சகோதரிகள் போல செல்வாக்கு மிக்கவர்கள் போலும்!). அம்ஸ்டர்டம்மில் Nemo learning centre என்ற மிதக்கும் அறிவியல் அருங்காட்சியகமும் உள்ளது.  எங்களுக்கு உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.  உங்களுக்கு அம்ஸ்டர்டம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கட்டயமாக இந்த இடத்தைச் சுற்றிப் பாருங்கள்.

             அம்ஸ்டர்டம் ஷ்கிஃபோல் விமான நிலையத்தின் terminals ரோட்டின் இருபுறங்களிலும் அமைந்திருக்கிறது.  விமானங்கள் ஒரு டெர்மினலிலிருந்து மற்றொன்றிற்கு மேம்பாலங்கள் மேல் ஊர்ந்து செல்கின்றன.  ரோட்டில் நாம் செல்லும்போது நமக்கு மேல் விமானங்கள் ஊர்ந்து செல்லும் காட்சி வினோதமாக இருந்தது.


              பின்னர் அம்ஸ்டர்டம் நகரின் மினியேச்சரான மடுரோடம் சென்றோம்.  அம்ஸ்டர்டம் நகரில் உள்ள ஒவ்வொரு முக்கிய கட்டிடமும், தெருக்களும், அதன் ஒரிஜினல் அளவில் 1/25 அளவோடு இங்கு நிறுவப்பட்டுள்ளன.  அது மட்டுமில்லாமல் ஒரிஜினல் கட்டிடங்கள் எப்படியிருக்குமோ அதை அப்படியே replicate செய்திருக்கிறார்கள். மாடல்களின் நேர்த்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  இந்த மாடல்களெல்லாம் synthetic material-ல் செய்யப்பட்டவையாம். ஒவ்வொரு மாடலையும் செய்ய 1-3 வருடங்கள் வரை தேவைப்படுமாம்.  இந்த நகரை கவனித்துக் கொள்ள 35 பேர் வேலை செய்கிறார்கள்.  ஒரிஜினல் அளவில் 1/25 இருக்க வேண்டும் என்பதால் மரங்களைக் கூட இடைவிடாது இலைகளைக் வெட்டிக்கொண்டே (pruning) இருக்கிறார்கள். மடுரொடமில் சுற்றிப் பார்க்கும்போது மக்களெல்லாம் ஒரு giant போல் தோன்றுகிறார்கள்.

rijks museum model
rijks museum



weighing house and cheese market model

shopping mall model


மடுரோடம் உண்மையில் ஜார்ஜ் மடுரோ என்ற வீரரை கௌரவிக்கும் வகையில் கட்டப்பட்டதாம்.  ஹேக் நகரிலுள்ள பள்ளிக் குழந்தைகளால் இந்த நகருக்கு முனிசிபல் கௌன்சில் அமைக்கப்பட்டுள்ளது.  அவர்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்/மாணவியே ஒவ்வொரு புது மாடலையும் திறந்து வைக்கிறார்.
குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் கட்டாயமாகப் பார்க்கவேண்டிய இடம் மடுரோடம்.

Tuesday 12 October 2010

குவைத்தில் நவராத்திரி

          
               நவராத்திரி எப்பொழுதுமே எனக்கு ஒரு சுவாரசியமான பண்டிகையாகத்தான் இருந்திருக்கிறது.  சிறுவயதில் எங்கள் வீட்டில் கொலு வைக்க வீட்டிலுள்ள மேஜை, பெட்டிகள் மற்றும் பலவற்றைக் கொண்டு கொலுப் படிகள் அமைப்பதில் தொடங்கி கொலு பொம்மைகள் அடுக்குவது வரை உற்சாகமாகச் செய்வோம்.  நானும் என் சகோதரியும் ராதா-க்ருஷ்ணா, மடிசார் மாமி என்று வித விதமாக வேஷமிட்டுக் கொண்டு எங்கள் தெருவில் எல்லோரையும் கொலுவிற்கு அழைப்போம்.(சிறுமிகள் இப்போதும் இந்த மாதிரி வேஷம் போட்டுக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை). எல்லோர் வீட்டிலும் பாடச்சொல்லிக் கட்டாயப் படுத்துவார்கள்.  ஏதோ பெரிய பாடகி போல் நானும் என் சகோதரியும் தாளமெல்லாம் போட்டுப் பாடுவோம் . கொஞ்சம் வளர்ந்த பின் கொலுவிற்கு முன் ரங்கோலி, முத்தாலத்தி (ஜவ்வரிசியால் தட்டில் கோலம் போடுவது) போடுவது என்று பிற விஷயங்களில் ஆர்வம் வந்தது. பொதுவாகவே நவராத்திரி என்பது நமது creativity -ஐ வளர்க்கவும், வெளிக்காட்டவும் ஒரு நல்ல வாய்ப்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து.

              நான் சிறுமியாக இருந்த போதெல்லாம் நவராத்திரி simple-ஆகவேக் கொண்டாடப்பட்டது.  ஒரு பொட்டலத்தில் சுண்டலைக் கட்டி வெத்திலை, பாக்குடன் கொடுப்பார்கள்; பெரியவர்களுக்கு மிஞ்சிப்போனால் ஒரு ரவிக்கை துணி. அவ்வளவுதான்.

             ஆனால் குவைத்தில் நவராத்திரி ஒரு விழாவாகவே நடக்கிறது.  இந்தியாவில் கூட இவ்வளவு விமரிசையாக நடக்கிறதா என்று தெரியவில்லை. இங்கு எல்லோரும் நவராத்திரிக்குக் குடும்ப சகிதமாகவே  அழைக்கிறார்கள்.  குடும்பத்தின் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வயதிற்கேற்ப பரிசுப்பொருள் கொடுக்கிறார்கள்.  ஒரு சுண்டல் மட்டும் கொடுத்து escape பண்ண முடியாது.  குறைந்தது ஒரு ஸ்வீட், ஒரு காரம் இவற்றுடன் சுண்டலும் என்று குறைந்த பட்ச மெனுவில் தொடங்கி தோசை (சுடச் சுட வார்த்து பரிமாறப்படும்!!), இட்லி, பூரி என்று ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு விரிவான மெனுவுடன் பெரிய விருந்தும் நடைபெறும்.  சில வீடுகளில் கச்சேரிகளும் உண்டு.  இங்குள்ள தமிழர்கள் நவராத்திரியை ஒரு பண்டிகையாக மட்டும் கொண்டாடுவதில்லை.  தெரிந்தவர் அனைவரையும் குடும்பத்துடன் கண்டு உரையாடக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்கிறார்கள்.  அதனால் ஒவ்வொரு வீட்டிலும் நவராத்திரி சமயத்தில் குறைந்த பட்சம் 25 முதல் 70-75 குடும்பங்களுக்கு வெற்றிலை-பாக்கு மற்றும் விருந்து அளிக்கிறார்கள். பொதுவாக ஜீன்ஸ்-டீ ஷர்ட்டில் உலாவரும் பெண்களெல்லாம் நவராத்திரியில் பட்டுப் புடவை, நகைகள் அணிந்தும் ஆண்கள் குர்தா-பைஜாமா அணிந்தும் வருவார்கள்.  இந்த உடையலங்காரமும், சிறுவர் சிறுமிகளின் கல கலவென்ற ஆரவாரமும் ஒரு கல்யாண வீடுபோன்ற தோற்றத்தை உண்டாக்கிவிடும். நம் வீட்டில் விருந்தளித்த நாள் போக மற்ற நாட்களில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3-8 வீடுகளுக்குப் போக நேர்வதால் இரவு 10.30 மணிவரை நகரமே கலகலவென்று இருக்கும். இது தவிர தாண்டியா நிகழ்ச்சிகளும் நடக்கும்.


               தமிழர்கள் நவராத்திரி விழாவை விமரிசையாகக் கொண்டாடுவது போல் வட இந்தியர்கள் தீபாவளியை ஒட்டி 'open house' என்று வைத்து நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்தளிப்பார்கள்.  அநேகமாக எல்லா இந்தியர்களின் வீடுகளும் serial light அலங்காரத்தில் ஜொலிக்கும்.


தீபாவளியன்றும் மறுநாளும் எல்லோரும் பொது இடத்தில் ஒன்று கூடி வெடிகளை வெடித்து மகிழ்வோம். நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை நாம் இருப்பது குவைத்தா இல்லை இந்தியாவா என்று சந்தேகம் வருமளவு இங்கு நகரமே விழாக்காலம் பூண்டிருக்கும்.

அப்படியே எங்க வீட்டு கொலுவையும் பார்த்துவிட்டு பக்கத்திலுள்ள பிரசாதத்தையும் எடுத்துக்கோங்க!!