Wednesday 10 March 2010

ஜோரான ஜோர்டன் -4 (வாடிரம்)


           காலை உணவிற்குப் பின்னர் வாடிரம் (Wadi Rum) நோக்கிப் புறப்பட்டோம்.  வாடிரம் பெட்ராவிலிருந்து 120 கிமீ தொலைவில் உள்ளது.  கிட்டதட்ட 1.5 மணி நேரம் காரில் பயணம் செய்யவேண்டும்.  போகும் வழியிலெல்லாம் பாறை மலைகளின் அழகு கருத்தைக் கவர்வதாக இருந்தது.  கனடாவிலெல்லாம் இதைப் போன்ற இயற்கை எழில் மிகுந்த பாதைகளில் இடை இடையே பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தி ஃபோட்டோ எடுக்க வசதியாக viewing spot இருக்கும்.  இங்கு அந்த வசதி இல்லாததால் மிக அழகான காட்சிகளைக் கூட காரிலிருந்தபடியேதான் ஃபோட்டோ எடுக்க முடிந்தது.

               வாடிரம், பாறை மலைகள் நிறைந்த விரிந்த பாலைவனம்.  கிட்டத்தட்ட 720 சதுர கிமீ பரப்பு கொண்டது.  வாடிரம் என்றால் மலையும் மடுவும் (mountains and valleys) என்று பொருள்.  பரந்த பாலைவனப் பரப்பில் பெரு மலைகள் நிமிர்ந்து நிற்கும் காட்சி காணத் திகட்டாததாக இருக்கிறது.  இந்த இடத்தைச் சுற்றிப் பார்க்க ஒட்டகங்களும், vanகளும் கிடைக்கின்றன.  நுழைவுச் சீட்டு வாங்கி எங்களை ஒரு லோக்கல் கைடுடன் செல்ல ஏற்பாடு செய்தார் எங்கள் driver and Travel guide Mr. Mehmood.  ஒரு வேனில் ஏறி வாடிரம்மைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.  சிறிது தூரப் பயணத்திற்குப் பின்னர் சரளைக் கற்கள் நிறைந்த ஒரு மலை அடிவாரத்தில் நிறுத்தி சிறிது நேரம் மலையேறி மகிழ்ந்தோம்.  கொஞ்ச தூரம் ஏறியவுடனே எங்கள் கைடு , நேரமாவதால் விரைவில் கீழே இறங்குமாறு கூறவே  இறங்கினோம்.  அருகிலிருந்த bedouin tent-ல் சுமாரான ஹெர்பல் டீ குடித்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

---
        

 10 நிமிட பயணத்திற்குப் பிறகு ஒரு canyon-ஐ அடைந்தோம் (பெயர் நினைவில் இல்லை).  இங்கு பாறை நிறமும் போகப்போக உள்ளுக்குள் விரிந்துகொண்டே போகும் அமைப்பும் பெட் ராவை நினைவூட்டுவதாக இருக்கின்றது.  முதலில் உற்சாகத்துடன் ஏறிய நான் ஒரு இடத்தில் (10மீ உயரத்தில் ஒற்றையடிப் பாதையில் செல்லவேண்டும்) பயந்தபோது என் அண்ணனும் , கணவரும், மகளும் பயப்படாமல் முன்னேறிச் செல்வதைப் பார்த்து மெதுவாக பயத்துடன் கடந்தேன்.  உள்ளே செல்லச் செல்ல மேலும் பாதை விரிந்து கொண்டே சென்றது.  இந்த canyon லேயே அரை நாள் தாராளமாக explore செய்துகொண்டே போகலாம்.

               பின்னர் மீண்டும் வேனில் பயணம்.  வழியில் ஒரு பெரிய மலையில் கிட்டத்தட்ட மலையின் அளவிற்கே ஒரு பெண்ணின் ஒவியத்தைப் பார்த்தோம். அது இயற்கை வரைந்த ஓவியமா இல்லை மனிதனின் கைவண்ணமா தெரியவில்லை.  இயற்கையானதென்றால் இத்தனை துல்லியமாக எப்படி அமைந்தது?  மனிதனுடையதென்றால் (chance -ஏ இல்லை) இத்தனை பிரும்மாண்டமாக எப்படி முடிந்தது? விவாதித்துக் கொண்டே ஃபோட்டோ எடுக்க முனைந்தோம்.  இறைவன் கொடுத்த இயற்கை காமிரா (நம் கண் தான்!!) வினால்  கண்டு ரசிக்க முடிந்தது, மனிதன் படைத்த காமிராவில் சிறப்பாக வரவில்லை. என்னால் முடிந்த அளவு கொடுத்திருக்கிறேன்.  கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

---

               காரில் பயணித்தபடியே புர்டா (Burdah) பாறை பாலத்தை அடைந்தோம்.  35-40மீ உயரத்தில் இந்த இயற்கையாகவே அமைந்த பாறைப் பாலம் பார்க்க பிரமிபூட்டுவதாக இருக்கிறது.

---

              அந்த பாறை பாலத்திலேயே ஒரு பாறையில் மீண்டும் இயற்கையின் கைவண்ணத்தைப் பார்க்க முடிகிறது.  என் கண்ணிற்கும் கற்பனைக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியும், ஒரு மனிதனும், கையை விரித்த நிலையில் ஒரு எலும்புக்கூடும் (ok, ok! இதோடு நிறுத்திக்கொள்கிறேன்!!) தெரிகின்றன.

---

                அங்கிருந்து புறப்பட்ட இடம் நோக்கித் திரும்பினோம்.  வரும் வழியில் எகிப்து பிரமிட் போல் ஒரு மலையையும், seven pillars of wisdom என்றழைக்கப்பட்ட மலையையும் பார்த்தோம்.

 ---
             seven pillars of wisdom
          
             வாடிரம்மில்தான் Lawrence of Arabia என்ற புகழ்பெற்ற படம் எடுக்கப்பட்டதாம். (பார்க்கவேண்டும் என்று குறித்துக் கொண்டோம்). வாடிரம்மில் கோடைக்காலத்தில் hotair balloon rides  இருக்குமாம். மலையேறுவதில் விருப்பம் உள்ளவர்கள், புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் அன்றி அனைவரும் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடம் இந்த வாடிரம்.  இங்கு கோடைக் காலத்தில் இரவு தங்கி பார்க்கவும் வசதிகள் உண்டாம்.  2-3 நாட்களுக்குக் கூட explore பண்ண நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

             எண்ணற்ற அழகுக் காட்சிகளையும் ஆச்சரியங்களையும் தன்னுள் வைத்திருக்கும் வாடிரம்மை விட்டுக் கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம்.
எங்களை அழைத்துச் சென்ற கைடிற்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி அம்மான் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

8 comments:

Anonymous said...

Nice! continue..

Anonymous said...

Excellent write up

Anonymous said...

அம்மான் வந்தாச்சா?

geetha santhanam said...

அனானி, அம்மான் வந்தாச்சு. மௌண்ட் நீபோ மற்றும் ஜெராஷ் நோக்கி போகப்போகிறோம். கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. சாரி.--கீதா

ஸ்ரீராம். said...

ஜோர்டான் பயணக் கட்டுரை ஆரம்பம் முதல் படித்தேன். சுவாரஸ்யம். அழகாக எழுதி இருக்கிறீர்கள். பாறைகளைக் குடைந்தே கட்டிடமா? வாவ்...! படங்கள் அருமை. மழை வந்தாலே பயணிகளை பீதிஎற்றி, அக்கறை காட்டி, பணம் பார்த்து விடுவார்களோ?!! ஒட்டகம் மேலே ஏற ஏணி ஒன்றும் கிடையாதாமா?!!
மலை - பெண் ஓவியம் என் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. இயற்கைப் பாலம் படம் அருமை. மிரட்டுகிறது. எல்லா இடங்களையும் நானும் பார்த்த உணர்வு. நன்றி.
அது சரி, யார் ராஜம்?!

geetha santhanam said...

நன்றி ஸ்ரீராம்.

'மழை வந்தாலே பயணிகளை பீதிஎற்றி, அக்கறை காட்டி, பணம் பார்த்து விடுவார்களோ?!!'
---இருக்கலாம். ஆனால் எங்கள் guide அப்படி செய்யவில்லை என்றே தோன்றுகிறது. மறு நாள் பெட்ராவில் வெள்ளம் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளெல்லாம் evacuate செய்யப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டோம்.

'அது சரி, யார் ராஜம்?!'

----என் comment-ஐ உடனே delete பண்ணிவிட்டேனே. அதற்குள் படித்துவிட்டீர்களா? sorry, ஒரு சின்ன confusion
----geetha

அப்பாதுரை said...

மழை வந்தால் பெட்ராவைப் பொறுத்தவரை பீதியடைவது முறைதானென்று தோன்றியது.

1)பெட்ரா மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட நகரம், 2) எல்லாமே என்றைக்கோ புதைந்து போய் பூமியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட நகரம் என்பதால் இயற்கையாகவே பள்ளத்தில் அமைந்திருக்கிறது.

மலை எப்படி அய்யா பள்ளத்தில் இருக்கும் என்றால் எனக்கும் புரியவில்லை முதலில். பெட்ரா பிரதேசமே ஆயிரம் அடியோ என்னவோ கடல்நிலைக்கு மேலே இருக்கிறதாம். அதனால் பெட்ராவின் மலைக் குடையல் எல்லாம் மலையாக இருந்தாலும் மண்ணுக்குக் கீழே இருக்கிறது. (எப்படி?)

மலையைக் குடைந்தவர்கள் குறுகலான பாதையை (ஒரு கார் பக்கத்தில் இரண்டு பேர் அவ்வளவு தான் குறுக்களவு) குடைந்தெடுத்திருக்கிறார்கள். போன வழியே தான் திரும்ப வேண்டும். மழை பெய்தால் எல்லா இடத்திலிருந்தும் குற்றாலம் போல் கொட்டுகிறது. பெட்ரா பள்ளத்தாக்கும் 15 அல்லது 20 டிகிரி க்ரேடியன்டில் இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லா தண்ணீரும் பாதையில் வந்து இறங்கி வெள்ளமாக அடித்துக் கொண்டு வருகிறது. பள்ளத்தில் இருப்பதால் பாதை தான் முதலில் நிரம்புகிறது. எல்லாரையும் மலையேறச் சொல்ல முடியாதே? அதான் அடிச்சுக்க பிடிச்சுக்க ஓடிப்போ என்று பதைக்கிறார்கள்.

பத்து பேர் வீம்புக்காக மலை மேல் நின்று மூச்சா போனார்கள் என்று வையுங்கள் - பள்ளத்தில் வெள்ளம் தான்.

மலையைச் சுற்றி வட்ட வடிகால்கள் கட்டி விழும் நீரை திசை திருப்பினால் பள்ளத்தில் அத்தனை வெள்ளம் வராதென்று நினைக்கிறேன்.

meenakshi said...

//மலையைச் சுற்றி வட்ட வடிகால்கள் கட்டி விழும் நீரை திசை திருப்பினால் பள்ளத்தில் அத்தனை வெள்ளம் வராதென்று நினைக்கிறேன்.//

இந்த யோசனை சரி வரும் என்று நீங்கள் உறுதியாக நினைத்தால், அந்த இடத்தின் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நிலையத்தின் உயர் அதிகாரிகளில் யாரேனும் ஒருவருக்கு இ-மெயில் மூலம் உங்கள் கருத்தை தெரிவிக்கலாமே.